Wednesday, November 17, 2010

புதுச்சேரியில் பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு பேரணி!

பழங்குடியின மக்கள் பேரணி...
புதுச்சேரியில் பழங்குடியின மக்கள் கூட்டமைப்பினர், வேலைவாய்ப்பில் முறையான இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10.11.2010  புதன்கிழமையன்று பேரணி நடத்தினர்.

பேரணி சுதேசி பஞ்சாலை அருகிலிருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக சட்டப் பேரவையை அடைந்தது. பின்னர் கோரிக்கை மனுவை, சட்டப் பேரவையில் உள்ள சமூக நலத்துறை அமைச்சர் அலுவலகத்தில், அமைச்சர் மு.கந்தசாமி அவர்களிடம் அளித்தனர்.

மனு விவரம்: புதுச்சேரியிலுள்ள பழங்குடியினரை அட்டவணை பழங்குடி என அங்கீரிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் என வரையறை செய்துள்ள நிலையில், வேலைவாய்ப்பில் முறையான இடஒதுக்கீடு வழங்க வேண்டும். வரும் சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் அவர்களுக்கான தனி நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடியினருக்கு இலவச மனைப்பட்டாவுடன் கூடிய தொகுப்பு வீடுகளை கட்டித்தர வேண்டும். அவர்கள் வாழும் பகுதியில் குடிநீர், மின்வசதி மற்றும் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் கந்தசாமி மனுவை பெற்றுக்கொண்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். புதுச்சேரி மாநில பழங்குடியின கூட்டமைப்பு தலைவர் கே.ராம்குமார் தலைமைத் தாங்கினார். கூட்டமைப்பு நிர்வாகிகள் சுந்தர், ஏ.மனோகரன், எஸ்.புருஷோத்தமன், எம்.ஏகாம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பாளர் கோ.அ.ஜெகன்நாதன், பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு தலைவர் பொன்னுரங்கம், அகில இந்திய பார்வட் பிளாக் கட்சியின் பொதுச்செயலர் உ.முத்து, புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவநர் சதீஷ் (எ) சாமிநாதன், கிறிஸ்துவர் கூட்டமைப்பு தலைவர் சாமி ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

பேரணியில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

No comments: