Friday, September 18, 2020

துரோகம் தானே?

விழுப்புரத்தில் புதிதாக அமையவுள்ள பல்கலைக்கழகத்திற்குத் திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தை அளித்தவரும், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தவரும், திமுக முன்னாள் அமைச்சருமான மறைந்த ஏ.கோவிந்தசாமி பெயர் வைக்க வேண்டுமென மருத்துவர் இராமதாசு தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். ஏ.கோவிந்தசாமி முதுபெரும் திமுக தலைவர்களில் முகாமையானவர். இத்தனைக்கும் பாமக திமுகவைக் கடுமையாக விமர்சித்து வருகிற கட்சி.

திமுக சின்னத்தில் போட்டியிட்டு விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரை.ரவிக்குமார் வள்ளலார் பெயர் வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். வள்ளலார் பெயர் வைக்கக் கூடாது என்பதல்ல. ஆனால், திமுகவின் முதுபெரும் தலைவர் ஒருவர் பெயர் வைக்க வேண்டும் என பிற கட்சியிலிருந்து கோரிக்கை வரும் போது, அதை ஆதரிக்காமல் வேறொருவர் பெயர் வைக்க வேண்டுமென கோருவது சரியானதல்ல.

தலித் மக்களின் விடிவுக்கு உழைத்திட்ட, காங்கிரஸ் தலைவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எல்.இளையபெருமாள் பெயர் வைக்கக் கோரி இருந்தாலும், அதில் ஒரு நியாயம் இருந்திருக்கும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர், தன்னைத் தலித் அறிஞராக அடையாளப்படுத்திக் கொண்டவர் என்ற அடிப்படையில் கோருகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். இந்திய அளவில் தலித் மக்களின் நிலைக் குறித்து ‘இளையபெருமாள் குழு அறிக்கை’ மிக முக்கியமான ஒன்று. திமுக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சாராக இருந்த போது அவருக்குத் தமிழக அரசின் ‘அம்பேத்கர் விருது’ அளித்து சிறப்பித்தார். புதிய பல்கலைக்கழகத்திற்குப் பெயர் வைக்கும் அளவுக்குத் தகுதியான தலைவர்.

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற துரை.ரவிக்குமார் திமுகவிற்கும் தலித் அரசியலுக்கும் இழைக்கும் துரோகம் அல்லவா இது?

கோ.சுகுமாரன் / 18.09.2020

 

No comments: