Wednesday, April 14, 2021

மேலவளவு தலித்துகள் படுகொலை வழக்கு: அதிமுக, திமுகவும் ஒரே நிலைதான் எடுத்தன...

கர்ணன் படச் சர்ச்சைக் குறித்து பலரும் பேசி வருகின்றனர். 1995 என்பதற்குப் பதிலாக 1997 என்று கொடியன்குளம் சம்பவம் நடந்த காலத்தை மாற்றி சொல்லியுள்ளது தவறுதான். 1991 – 1996 ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி. 1996 – 2001 வரை கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி. உதயநிதி ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, அதனைத் திருத்திவிடுவதாக இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியதாக செய்தி வந்துள்ளது.

இந்தத் தவறை வைத்துக் கொண்டு ஏதோ அதிமுக ஆட்சியில் மட்டும்தான் தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் நடந்தது போலவும், திமுக ஆட்சியில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும் பலரும் எழுதியுள்ளனர். மனுஷ்யபுத்திரன் தீக்குளித்துவிடுவார் போல. ஆனால், அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் அரங்கேறின என்பதுதான் உண்மை.

1996-இல் மேலவளவில் பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உட்பட 6 தலித்துகள் அப்பகுதியிலுள்ள ஆதிக்கச் சாதியினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். பேருந்தில் பயணம் செய்த முருகேசன் தலையை வெட்டி வீசினர் சாதி வெறியர்கள். முருகேசன் திமுகவைச் சேர்ந்தவர்.

இச்சம்பவம் நடந்த நாள் முதலே வழக்கறிஞர் பொ.இரத்தினம், உடன் பல்வேறு வழக்கறிஞர்கள் குழுவாகப் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு நீதிக் கிடைக்கப் பாடுபட்டனர். அம்மக்களுக்குச் சட்ட ரீதியாக உதவிகள் செய்தனர்.

இவ்வழக்கில் 41 பேர் குற்றம்சாட்டப்பட்டனர். இவ்வழக்கு விசாரணை உயர்நீதின்ற உத்தரவின் அடிப்படையில் சேலத்திற்கு மாற்றப்பட்டு நடந்தது. விசாரணை முடிந்து 27.06.2001 அன்று தீர்ப்பு அளித்த நீதிபதி ஏ.ஆர்.இராமலிங்கம் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், மீதமுள்ள 24 பேரையும் விடுதலை செய்தும் தீர்ப்பளித்தார். விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென அரசு வழக்கறிஞர் (அதிமுக) அரசுக்கு அறிக்கை அளித்தும், அபோதைய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு மேல்முறையீடு செய்யவில்லை.

தண்டனைப் பெற்ற குற்றவாளிகள் அனைவரும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.சதாசிவம், என்.பால்வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு 19.04.2006 அன்று தீர்ப்பு வழங்கியது.

அத்தீர்ப்பில் விசாரணை நீதிமன்றம் 17 பேருக்கு வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. மேலும், மீதமுள்ளவர்களுக்குப் போதிய ஆதாரங்கள் இருந்தும் அரசு மேல்முறையீடு செய்யாத காரணத்தால் தண்டிக்க முடியவில்லை எனத் தீர்ப்பில் நிதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.

“52 …. we have concluded that there is enough material to hold against all the accused. But, unfortunately, the State has not preferred appeal against the acquittal of the remaining accused”

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டுமென அப்போதைய திமுக அரசுக்கு வழக்கறிஞர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பிலும் மனு அளிக்கப்பட்டது. ஆனால், திமுக அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. முதல்வர் கருணாநிதி தண்டனைப் பெற்ற குற்றவாளிகள் மேல்முறையீடு செய்வார்கள், அதில் பார்த்துக் கொள்ளலாம் எனக்கூறி மேல்முறையீடு செய்ய வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி.சிர்புர்க்கர், தீபக் வர்மா ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு 22.10.2009 அன்று குற்றவாளிகள் 17 பேரின் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. விடுதலை செயப்பட்ட 24 பேருக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யாததால் உச்சநீதிமன்றமும் இவர்களுக்குத் தண்டனை வழங்கவில்லை.

அதிமுக, திமுக என இரண்டு அரசுகளும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டன. இதனால், மீதமுள்ள 24 கொடும் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டனர்.

தலித்துகளின் வழக்குகளில் அதிமுக, திமுக இரண்டுமே ஆதிக்கச் சாதிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றை விட்டு ஒன்றை நியாயப்படுத்துவது சரியல்ல.

மேலவளவு தலித்துகள் படுகொலை வழக்கில் வழக்கறிஞர் பொ.இரத்தினம் உள்ளிட்ட வழக்கறிஞர்களின் பங்களிப்பு அளப்பரியது. அதுகுறித்து விரிவாக எழுத வேண்டும்.

No comments: