Sunday, April 18, 2021

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை சாதித்தோம்: அய்யா ஆனைமுத்து பாராட்டினார்!

2004-இல், புதுச்சேரியில் வன்னியர், மீனவர், நாவிதர், முடிதிருத்துவோர், ஒட்டர், எருகுலா உள்ளிட்ட சாதிகளுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென ‘சமூக நீதிப் போராட்டக் குழு’ சார்பில் வணிக அவையில் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றினோம்.

கம்பன் கலையரங்கில் ‘சமூக நீதி மாநாடு’ நடத்தினோம். மிகவும் பிற்படுத்தப்படோர் சமூக அமைப்புத் தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஒருங்கிணைத்தோம். அய்யா ஆனைமுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு, தனக்கே உரிய பாணியில் மிகச் சிறந்த உரையாற்றினார்.

அப்போழுது முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சி. அவரைப் பலமுறை சந்தித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டையினால் விளையும் பயன்களை எடுத்துச் சொன்னோம். அதோடு, புதுச்சேரி யூனியன் பிரதேச அரசுக்கு இடஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளதையும் சட்ட ரீதியாக விளக்கினோம்.

நாங்கள் கூட்டம் நடத்தி சரியாக மூன்று மாதத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியில் மட்டும் 20% வழங்கி அரசாணைப் பிறப்பித்தார் முதல்வர் ரங்கசாமி. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி தங்கமணி அரசுக்கு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அரசாணை நகல் அய்யா ஆனைமுத்து பார்த்து சரியென சொன்ன பின்னால் பிறப்பிக்கப்பட்டு, அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

இந்த வரலாற்று சாதனைக் குறித்து ‘சிந்தனையாளன்’ இதழில் தலையங்கம் எழுதினார் அய்யா ஆனைமுத்து. இதற்காக சீனு.அரிமாப்பாண்டியன் வழியாக என்னிடமிருந்த ஆதாரங்கள், யார் யார் போராடினார்கள் போன்ற விவரங்களைப் பெற்று அவற்றை முறையாக பதிவு செய்திருந்தார்.

முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு கிடைக்கப் பாடுபட்ட அனைவரது பெயர்களையும் குறிப்பிட்டு எழுதியிருந்தார். அதில் என்னைக் குறிப்பிட்டதோடு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை மூன்றே மாதத்தில் சாதித்த என்னைப் பெருமைப்படுத்தி எழுதியிருந்தார்.

பின்னர், 2006-இல் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலைவாய்ப்பிலும் 20% இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டார் முதல்வர் ரங்கசாமி. இந்த இடஒதுக்கீட்டினால் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த விளிம்புநிலை மக்கள் பெரிதும் பயன்பெற்றனர், பயன்பெற்று வருகின்றனர்.

நான் பெரியாரை பார்த்ததில்லை. வாழும் பெரியாராக வாழ்ந்து காலமான அய்யா ஆனைமுத்து என்னைப் பாராட்டியது உலகளவில் எந்தவொரு பெரிய விருதைக் காட்டிலும் சிறந்தது. அதைவிட வேறு என்ன பெருமை வேண்டும்.

 

No comments: