Thursday, May 10, 2007

வன்முறைக்கு தினகரன் ஊழியர்கள் 3 பேர் பலி : கண்டனம்



மதுரை தினகரன் அலுவலகம் மு.க.அழகிரி ஆட்களால் 09-05-2007 புதனன்று அடித்து நொறுக்கப்பட்டது. கட்டடத்திற்கும் தீவைக்கப்பட்டது. இதில் தினகரன் ஊழியர்கள் 3 பேர் உடல்கருகி இறந்தனர். தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 10-05-2007 வியாழனன்று வெளியிட்ட அறிக்கை:

திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்பது குறித்து கருத்துக்கணிப்பு வெளியிட்டதற்காக மதுரை தினகரன் அலுவலகம் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அங்கு பணிபுரிந்த அப்பாவி ஊழியர்கள் 3 பேர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும், இத்தாக்குதல் நடந்தபோது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்ததுக் கொண்டு இருந்துள்ளனர். தங்கள் கடமையிலிருந்து தவறிய மதுரை போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தாக்குதல் சம்பவம் குறித்து மத்திய அரசு உடனடியாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

ஜனநாயகத்தின் நன்காவது தூணாக விளங்கும பத்திரிகை துறை மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஜனநாயகத்திற்கே விடப்பட்ட சவால் என்பதால் அனைவரும் இதைக் கண்டிக்க வேண்டும்.

தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments: