Monday, May 28, 2007

“சுற்றுச் சூழல் போராளி’’ மேதா பட்கர் - சில குறிப்புகள்


திசம்பர் 1, 1954இல் மும்பையில் பிறந்தவர். இவரது தந்தை சுதந்திர போராட்ட வீரர், தொழிற்சங்கவாதி, தாயார் `சுவதார்' எனும் மகளிர் அமைப்பில் செயல்பட்டு வருகிறார். சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், 5 ஆண்டுகள் மும்பையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து குடிசைப் பகுதி மக்களுக்காக செயல்பட்டுள்ளார். குஜராத் மாநிலத்தில், வடகிழக்கு பகுதியில், மலைவாழ் மக்கள் மத்தியில் 2 ஆண்டுகள் செயல்பட்டார்.

மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களில் மலைவாழ் மக்கள் மற்றும் விவசாய மக்களிடையே மிகுந்த ஈடுபாட்டுடன் சேவை செய்து கொண்டிருந்ததின் காரணமாக, நர்மதை அணை எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்கினார்.

தொடக்கத்தில், சர்தார் சரோவர் அணை மற்றும் நர்மதை ஆற்றை ஒட்டி அமைக்கப்பட்ட நீர்த் தேக்கங்களின் காரணமாக, வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்படவுள்ள இலட்சக்கணக்கான மக்களின் நியாயமான புனர்வாழ்வு மற்றும் நர்மதை பள்ளத்தாக்கு வளர்ச்சித் திட்டங்களின் உண்மை தகவல் அறிவதற்கான போராட்டமாகவும் இந்த இயக்கம் விளங்கியது. இறுதியில், இத்தகைய திட்டங்களின் பரிமாணம், அதனால் ஏற்படும் பெரும் இழப்புகள், பாதிப்புகள் குறித்து துல்லியமாக அறிய முடியாதவாறு உள்ளது என கண்டறிந்தார்.

மக்களின் புனர்வாழ்வுத் திட்டங்களும் சாத்தியமில்லை என்று புலப்பட்டது. எனவே, இத்தகைய மிகப்பெரிய திட்டங்களின் அடிப்படை, வளர்ச்சி எனும் சொல்லாடல்கள் மற்றும் சாதனைகள் குறித்து மக்கள் மத்தியில் வலுவான பல சவால்களை எழுப்பியது.

இந்தியாவின் துடிப்பான சமூகப் போராளியாக விளங்கும் இவர், பள்ளிக் குழந்தைகள் மத்தியில், காவல் துறையினர் மத்தியில், `மேதா தாய்' என அழைக்கப்படுகிறார்.

ஆர்த்தெழும் நர்மதை ஆற்றங்கரையில் பல உண்ணாவிரதப் போராட்டங்கள், சத்தியாகிரகப் போராட்டங்கள் மக்களின் பிரச்சனைகளுக்காக மக்களுடன் ஒருவராக நடத்தி உள்ளார்.
வாழும் உரிமை, வாழ்வாதார உரிமை குறித்த இவரின் சமரசமற்ற போராட்டங்கள், விடுதலைக்குப்பின் இந்திய நாட்டிலும், உலக நாடுகள் மத்தியிலும், இயற்கை வளங்கள், மனித உரிமைகள், சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த அடிப்படைக் கேள்விகளை மீண்டும் எழுப்பி உள்ளது.

இவரது இயக்கப் பயணத்தில் இவர் சந்தித்த காவல்துறை தாக்குதல்கள் அடைந்த சிறைத் தண்டனைகள் ஏராளம். எனினும், இவற்றையெல்லாம் கடந்து இந்திய மக்கள் மீதும், இந்திய சனநாயக அமைப்பின் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார்.

நியாயத்தின்பால் உள்ள நம்பிக்கை, உள்ள நிலைகளை முழுமையாக பகுத்துக் காணும் ஆய்வாற்றல், எளிய தோற்றம் போன்ற பண்புகளால், காவல்துறையினர் மற்றும் அரசாங்க அதிகாரிகளையும் வென்றவராக விளங்குகிறார். அண்மையில் நர்மதை அணை எதிர்ப்பு இயக்கத்தினருடன் தலைநகர் தில்லியில், நீர்வளத்துறை அமைச்சகத்தை வசப்படுத்திக் கொண்ட போராட்டத்தில், `இது ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனை அல்ல' என காவல்துறை அதிகாரி ஒருவர் தமது செல்போனில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நர்மதை அணை எதிர்ப்பு இயக்கத்தை, நூற்றுக்கணக்கான விவசாயிகள், மலைவாழ் மக்கள், தலித் மக்கள், மகளிர் மற்றும் தொழிலாளர்கள் இயக்கங்களுடன் இணைத்து `மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு' அமைத்த வரலாறு மிகவும் சிறப்பானதாகும்.
தேர்தலில் போட்டியிடாத, மதச்சார்பற்ற அரசியல் கூட்டணியாக அமைத்து அதன் அமைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகிய பொருளாதார கொள்கைகளுக்கு எதிரான அமைப்பாகவும், வளர்ச்சித் திட்டங்கள் குறித்த மாற்று மற்றும் முன்னுதாரணத்தை உருவாக்கும் அமைப்பாகவும் இது விளங்குகிறது.

உலக நாடுகளின் நீர் ஆதாரம், ஆற்றல் மற்றும் அணைகள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து, விசாரணை செய்யும், சுயேச்சையான உலக ஆணையத்தின் ஆணையராகவும் செயல்பட்டுள்ளார். போராடுவது மற்றும் மாற்றுகளை உருவாக்குவது ஆகிய இரண்டு வகையான அணுகுமுறைகளில் மேதா பட்கர் அவர்கள் கிராம மக்களிடையே, சமூக குழுக்களிடையே தொடர்ந்து சமூகப் பணியாற்றி வருகிறார்.

மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களில் உள்ள மலைவாழ் கிராம மக்களின் குழந்தைகளுக்கு, மாநில மற்றும் உள்ளூர் பாடத்திட்டங்களை பயன்படுத்தி, உள்ளூர் ஆசிரியர்களைக் கொண்டு, உள்ளூர் மொழியில் `ரெவா ஜீவனசாலா' எனும் 9 உறைவிடப் பள்ளிகள் மற்றும் 4 பகல் நேரப் பள்ளிகள் அமைத்து பணியாற்றி வருகிறார்.

`தீன நாத் மங்கேசுவரர் விருது', `மகாத்மா பூலே விருது', `வாழ்வாதார உரிமை விருது', `கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது', பி.பி.சி.யின் `கிரீன் ரிப்பன் விருது', சர்வதேச பொது மன்னிப்புக் கழகத்தின் `மனித உரிமைகள் பாதுகாவலர் விருது' ஆகிய பல்வேறு விருதுகளும், மேதா பட்கர் அவர்கள் பெற்றுள்ளார்.

No comments: