Wednesday, September 12, 2007

"எனக்கு ஏதாவது நேர்ந்தால் போராட்டக் குழு தொடர்ந்துப் போராடும்" - பழ.நெடுமாறன்.

12-09-2007: இலங்கையில் வாடும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவு பொருட்கள், மருந்துகள் படகு மூலம் எடுத்துச் செல்ல முயன்ற தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களைத் தமிழகப் போலிசார் கைது செய்து நாகை அருகேயுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

அப்போது பழ.நெடுமாறன் அளித்த பேட்டி:

ஈழத் தமிழர்களுக்கு மனித நேய அடிப்படையில் திரட்டி வைத்திருந்த உதவிப் பொருட்கள் மருந்து, உணவுப் பொருட்கள் அனுப்புவதற்கு செஞ்சிலுவைச் சங்கத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுத்தது.

பட்டினியால் வாடும் தமிழர்களுக்கு நாங்கள் திரட்டி வைத்திருந்த பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு ஏற்றிச் செல்ல படகுகளைத் தயார் செய்து வைத்திருந்தோம். மாநில அரசு படகு தரக் கூடாது என மீனவர்களை மிரட்டியுள்ளது. இதனால் யாரும் படகு தரவில்லை. இது எங்களுடையப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகும். அதனால் எங்கள் குழு உடனடியாக கூடிப் பேசி முடிவெடுத்து, இன்று முதல் நான் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பது என்றும், மற்றவர்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருப்பது என்றும் முடிவு செய்துள்ளோம். அதன்படி போராட்டத்தைத் தொடர்கிறோம்.

எனக்கு ஏதாவது நேர்ந்தால் போராட்டக் குழு தொடர்ந்து போராட்டத்தை நடத்தும்.

இவ்வாறு பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

4 comments:

Anonymous said...

உங்கள் ஆதரவும் அன்பும்தான் எங்கள் பலம்.

ஒரு ஈழத் தமிழன்

லக்கிலுக் said...

அய்யா நெடுமாறனின் பெயர் வரலாற்றில் நிலைக்கும். மனிதாபிமானமற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனங்கள்.

Anonymous said...

தினமலர் என்ன சொல்கிறது? இதோ:
"கடற்படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் கைது
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் துறைமுகத்தில் உள்ள கடற்படை முகாமில் உள்ள வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் இயக்க பொது செயலாளர் பரந்தாமன் தலைமையில் 150 பேர் இலங்கை கொண்டு செல்ல உணவு பொருட்கள் மற்றும் மருந்துகள் ஏதும் கொண்டு வராத நிலையிலும், இலங்கை செல்ல படகுகள் ஏதும் ஏற்பாடு செய்யாத நிலையிலும், தங்களை கைது செய்யக்கோரி போலீசாரை கேட்டுக்கொண்டனர். போலீசார் துறைமுக எல்லையில் போராட்டம் நடப்பதால் கடற்படை காவலர்களே பொறுப்பு என கூறினர். இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கடற்படை அலுவலகத்தில் இருந்த வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் கடற்படை கமாண்டன்ட் முகர்ஜி, ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பளரிடம் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து 150 பேர் கைது செய்யப்பட்டனர்"



கடவுளே! தமிழக பத்திரிகைத் தர்மத்தைக் காப்பாற்று!!!!

புள்ளிராஜா

Thamizhan said...

தமிழர்களைக் கிள்ளுக் கீரைகளாக நினைத்து ஏமாற்றப் பார்க்கும் இந்திய மன்மோகன்,நாராயணன் கும்பலுக்குச் சரியானத் தோலுரிப்பு,இந்தப் போராட்டம்.
மற்ற அரசியல் வாதிகள் போல் பதவிக்குப் போராடாமல் மனித நேய்த்திற்கும்,நேர்மைக்கும் போராடும் மாவீரர் நெடுமாறன் போராட்டம் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.

இதைத் திரித்துச் சொல்லும் பொய்மலரை ஒட்டு மொத்தத் தமிழர்களும் புறக்கணிக்க வேண்டும்.

தமிழக அரசு பூனைக் கண்ணை மூடிக்கொண்டு இருப்பது வேதனையும்,வெட்கத்தையும் அளிக்கிறது.