Sunday, November 27, 2011

கூடங்குளம் போராட்டம்: மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டை முற்றுகையிட முயன்ற 100 பேர் கைது


மத்திய அமைச்சர் நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிட முயன்ற 4 பெண்கள் உட்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டத்தை,  பொய்யான தகவல்களை கூறி திசை திருப்பியும், போராட்டத்தை வழிநடத்தும் முன்னணி தலைவர்களை கொச்சைப்படுத்தியும் தொடர்ந்து பேசி போராட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மத்திய அமைச்சர் நாராயணசாமியை கண்டித்து, அவரது வீட்டை இன்று முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக பல்வேறு அமைப்புகள் அறிவித்திருந்தன. மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கூட்டிய கூட்டத்தில் பல்வேறு கட்சி,  அமைப்புகள் நிர்வாகிகள் இந்த முடிவை எடுத்தனர்.

அதன்படி 22.11.2011 அன்று காலை 10 மணியளவில் போராட்டம் நடத்துவதற்காக மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள்  நெல்லித்தோப்பு சிக்னல் அருகில் கூடினர்.

பின்னர் அங்கிருந்து எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள மத்திய அமைச்சர் நாராயணசாமியின் வீட்டை நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர். இந்த பேரணிக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு  செயலாளர் கோ.சுகுமாரன் தலைமை தாங்கினார். மனித உரிமைக்கான மக்கள் கழக தலைவர் அ.மார்க்ஸ் முன்னிலை வகித்தார்.

இப்பேரணியில் தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி, சிங்காரவேலர் முன்னேற்ற கழக தலைவர் சந்திரன், கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெகன்நாதன், அம்பேத்கர் மக்கள் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் அஷ்ரப், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகமது சலீம், மக்கள் சிவில் உரிமைக்கழக தலைவர் அபிமன்னன், தனித்தமிழ் இயக்க தலைவர் தமிழ்மல்லன், இலக்கிய பொழில் இலக்கிய மன்ற தலைவர் பராங்குசம், செந்தமிழர் இயக்க அமைப்பாளர் நா.மு.தமிழ்மணி, மனித நேய அமைப்பு தலைவர் லோகலட்சகன், இந்திய சமூக செயல்பாட்டு பேரவை இணை செயலாளர் விக்டர் ஜோசப் ராஜ், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட செயலாளர் அபுபக்கர், தமிழர் களம் தலைவர் பிரகாசு, அத்தியாப்பா கெமிக்கல்ஸ் தொழிலாளர் சங்க தலைவர் சின்னப்பா, மக்கள் விழிப்புணர்ச்சி இயக்க செயலாளர் சரவணன், முகவரி அமைப்பு தலைவர் மதிவதணன், புதுவை தமிழர் குரல் பொறுப்பாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இப்பேரணி அண்ணா சிலை அருகில் வந்தபோது போலீசார் தடுத்து நிறுத்தி,  4 பெண்கள் உட்பட  100 பேரை கைது செய்தனர்.

No comments: