Sunday, November 27, 2011

ஊழல் அதிகாரி ராகேஷ் சந்திராவை ஐ.ஏ.எஸ். ஆக்கியதற்கு கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 25.11.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

சுனாமி வீடு கட்டியதில் நடந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ.யால் குற்றம்சாட்டப்பட்ட ராகேஷ் சந்திராவிற்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கியதன் மூலம் மத்திய, மாநில அரசுகள் ஊழலுக்கு வெளிப்படையாக துணைப்போய் இருப்பதை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

2009-ல் சுனாமி மறுவாழ்வு திட்ட அதிகாரியாக இருந்த போது ராகேஷ் சந்திரா 1440 வீடுகள் கட்டியதில் ஊழல், முறைகேடுகள் நடந்ததாக கூறி சி.பி.ஐ. அவர் மீது வழக்குப் பதிவு செய்தது. அப்போது அவரை கலெக்டர் பதவியில் இருந்து விடுவித்த அரசு அவரை காத்திருப்போர் பட்டியல் வைத்திருந்தது. இந்நிலையில், கடந்த நவம்பர் 20ந் தேதியன்று அவருக்கு கூட்டுறவு, குடிமைப் பொருள் வழங்கல், கலைப் பண்பாடு ஆகிய முக்கிய துறைகளை ஒதுக்கி அரசு ஆணைப் பிறப்பித்தது. அரசின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது மாநில அரசின் பரிந்துரையின் பேரில் மேத்யூ சாமுவேல், ராகேஷ் சந்திரா, தேவநீதிதாஸ், பாபு ஆகிய அதிகாரிகளை மத்திய அரசு ஐ.ஏ.எஸ். ஆக்கியுள்ளது. கடுமையான ஊழல் குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கை எதிர் கொண்டிருக்கும் ராகேஷ் சந்திராவை ஐ.ஏ.எஸ். ஆக்கியிருப்பது ஊழலுக்குத் துணைப் போவதோடு, வழக்கு விசாரணையை சீர்குலைக்கும் திட்டமிட்ட செயல். ஊழலுக்கு எதிராக நாடெங்கும் போராட்டம் நடந்து வரும் வேளையில் மத்திய, மாநில அரசுகளின் இந்த செயல் கண்டனத்திற்குரியது.

அதோடு மட்டுமல்லாமல், பாரதியார் பல்கலைக்கூடத்தின் பேராசிரியர் போஸ் என்பவர் மகாத்மா காந்தி, பாரதியார், பாரதிதாசன் போன்ற தேசத் தலைவர்களையும், தமிழ் மொழியையும் இழிவுப்படுத்தி பேசியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த நடவடிக்கையை மேத்யூ சாமுவேல் எந்தவித காரணமும் இல்லாமல் ரத்து செய்தார். இதனைக் கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடந்த அக்டோபர் 10ந் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மேலும், அவரை ஐ.ஏ.எஸ். ஆக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தோம்.ஆனால், இதையெல்லாம் மீறி அவருக்கு தற்போது ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

ஊழல் செய்த, தேசத் தலைவர்களை இழிவுப்படுத்தியவரை காப்பாற்றிய அதிகாரிகளை ஐ.ஏ.எஸ். ஆக்கி இருப்பது அதிகாரிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு அரசு அளித்துள்ள மிகப் பெரிய அங்கீகாரம். நேர்மையாக பணிபுரியும் அதிகாரிகள் இனி ஊழல் செய்தால்தான் பதவி உயர்வும், உயர் அந்தஸ்தும் பெற முடியும் என்ற மன நிலைக்கு தள்ளபடுவார்கள். இது ஒட்டுமொத்த நிர்வாகத்தையே சீர்குலைக்கும்.

எனவே, இந்த பிரச்சனையில் குடியரசு தலைவர் தலையிட்டு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு ராகேஷ் சந்திரா, மேத்யூ சாமுவேல் ஆகிய அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். வழங்கி இருப்பதை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து குடியரசுத் தலைவருக்கு மனு ஒன்றையும் அனுப்ப உள்ளோம்.

No comments: