Sunday, November 27, 2011

அணுமின் நிலையங்களில் பேரழிவு ஏற்பட்டால் தலைமுறைகள் பாதிக்கப்படும்: எக்ஸ்.டி.செல்வராசு பேட்டி

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தை சேர்ந்த அருட்தந்தை எக்ஸ்.டி.செல்வராசு, மனித உரிமைக்கான மக்கள் கழக தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ் ஆகியோர் 11.11.2011 அன்று புதுச்சேரியில் செய்தியாளர் மன்றத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்க 1988ல் ஒப்பந்தம் போடப்பட்டது. அங்கு அணுமின் நிலையம் அமைக்க 1987ம் ஆண்டில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. அணு உலையும், பாதுகாப்பும் இரவும் பகலும் போன்றது. இரண்டும் ஒன்றாக இணைந்து இருக்க முடியாது. குஜராத், மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட இந்த அணு உலை தமிழகத்தில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் வரவேற்பு கொடுத்துவிட்டன.

இந்த அணுமின் நிலையம் மூலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெருகும் என்று கூறும் பிரதமர் ராமேஸ்வரத்தில் தினம், தினம் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படும் மீனவர்களுக்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதற்கு ரூ. 21 ஆயிரம் கோடி செலவு செய்துவிட்டதாக கூறுகின்றனர். 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேட்டால் 1.70 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு ஊழல்களும் நடந்துள்ளது. இவைகளை கணக்கில் கொண்டு 21 ஆயிரம் கோடி ரூபாய் முக்கியமா? 30 லட்சம் மக்களின் வாழ்க்கை பெரிதா? என்று பார்த்து முடிவு எடுக்க வேண்டும்.

அணு உலைக்கு எதிர்ப்பான போராட்டங்களை சாதி மற்றும் மதத்தை கலந்து குலைக்க முயற்சிக்கின்றனர். அணு உலையில் மின்சாரம் தயாரிப்பது ஒரு யூனிட்டிற்கு ஒரு ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் என்று கூறுகின்றனர். ஒரு அணு உலை 20 ஆண்டுகள்தான் இயங்கும். ஆனால் அந்த அணு உலையை 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதற்காக ஆகும் செலவையும் சேர்த்தால் மிகவும் கூடுதலாகவே ஆகும்.

அப்துல் கலாம் 6 ரிக்டர் பூகம்ப பாதிப்பு வரை கூடங்குளம் அணு உலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறுகின்றார். ஆனால் ஜப்பானில் நாங்கள் எதிர்பார்த்ததைவிட கூடுதலான அளவிற்கு பூகம்ப பாதிப்பு ஏற்பட்டது என்று கூறுகின்றனர். அவ்வாறு ஏற்பட்டால் அழிவும் கண்டிப்பாக ஏற்படும். தஞ்சை பெரிய கோயில், கல்லணை போன்றவைகளை பாதுகாப்பாக கட்டியுள்ளதற்கு உதாரணமாக கூறுகின்றார். பூம்புகார், தனுஷ்கோடி போன்றவை இயற்கை சீற்றத்தால் அழிந்தும் உள்ளது. இதனையும் கருத்தில் கொண்டு அணு உலையை கொண்டு வரக்கூடாது.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 1987, 1991, 1999, 2002, 2003 ஆகிய ஆண்டுகளில் அசம்பாவித சம்பவங்கள் நேரிட்டுள்ளன. அதனால்தான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பற்றவை என்று சொல்கிறோம். ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க பயன்படும் மின்சாரத்தின் விலையை காட்டிலும் அணுமின் நிலையத்தின் கழிவுகளை பாதுகாப்பதற்கான செலவு அதிகமாகும்.

மேலும் அணுமின் நிலையங்களில் பேரழிவு ஏற்பட்டால் அதனால் பல தலைமுறைகள் பாதிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

பேட்டியின்போது மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் உடன் இருந்தார்.

No comments: