Thursday, July 19, 2012

தமிழர்களிடையே தமிழ்க் கணினி குறித்து விழிப்புணர்வு செய்ய பல்வேறு நூல்களை எழுதியவரான ஆண்டோ பீட்டர் அவர்களுக்கு புதுச்சேரியில் நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 22-07-2012 அன்று காலை 10 மணியளவில் வணிக அவை சிறிய அரங்கத்தில் 'புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்' சார்பில்நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரியின் பல்வேறு தமிழறிஞர்களும் தமிழ்க் கணினி ஆர்வலர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த உள்ளனர்.

தமிழ்க் கணினி குறித்த விழிப்புணர்வைத் தமிழர்களிடையே அதிகப்படுத்தியவர்களில் ஆண்டோ பீட்டரும் ஒருவர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் 26.04.1967 இல் பிறந்தார். கணினி, இணையம், அச்சுத்துறை சார்ந்த பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஆண்டோ பீட்டர். மென்பொருள் தயாரிப்பு, இணையப் பக்கம் வடிவமைப்பில் ஈடுபட்டவர்.

தமிழகத்தில் முதன்முதலாகப் பல்லூடகக் கல்வியை அறிமுகப்படுத்திய இவர் இளைஞர்கள் வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்காக 500க்கும் மேற்பட்ட இலவச கருத்தரங்குகளை நடத்தியுள்ளார்.

கணினி, தமிழ் தொடர்பான பல்வேறு மாநாடுகளில் கலந்து கொண்டிருப்பதுடன் 26 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.

அச்சு வடிவில் வந்து கொண்டிருக்கும் இதழ்களில் இருக்கும் படங்கள், செய்திகள் மற்றும் அனைத்துவிதமான படைப்புகளையும் இணைய தளங்களில் அச்சு இதழ்களைப் போன்று பகுதிகளாகவும், பக்கங்களாகவும் அனைவரும் பார்க்கவும் படிக்கவும் உருவாக்கப்பட்ட இணைய இதழ்களில் முதல் தமிழ் இணைய இதழான "தமிழ் சினிமா" எனும் பெயரில் முதல் தமிழ் இணைய இதழைத் தொடங்கியவர்.

கணினித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் இந்திய அரசு, தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சில குழுக்களில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். ‘தமிழும் கணிப்பொறியும்’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு - 2004. நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறந்த எழுத்தாளருக்கான விருது 2007. ஸ்ரீராம் நிறுவனத்தின் ‘பாரதி இலக்கியச் செல்வர் விருது’, தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் ‘பெரியார் விருது’ ஆகிய விருதுகளை பெற்றவர்.

கணித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், சி.எஸ்.சி, சாப்டுவியூ நிறுவனத்தின்  நிறுவனரும், கணித்தமிழ்ச் சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும், பல கணினி நூல்களின் ஆசிரியருமான மா.ஆண்டோபீட்டர் 12.07.2012 வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் காலமானார்.

இவரின் மறைவு தமிழ் இணையத் துறைக்குப் பேரிழப்பாகும்.

No comments: