Wednesday, September 05, 2012

கோவை சிறையும், வ.உ.சி. இழுத்த செக்கும்

1992 என்று நினைக்கிறேன். கோவை இராமகிருட்டினன் தடா சட்டத்தில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தடாவில் சிறையில் உள்ளவர்களை அவரது ரத்த உறவுடைய உறவினர்கள் மட்டுமே சந்திக்க முடியும் என்று தமிழக அரசு உத்தரவு ஒன்றை போட்டிருந்தது. திமுகவைச் சேர்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் மீது தடா வழக்குப் போடப்பட்டு அவர் வேறொரு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவரை நேர்காண வேண்டுமென திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக் கேட்டதற்கு மேற்சொன்ன காரணத்தைக் கூறி அனுமதி மறுத்தது அப்போதைய ஜெயலலிதா அரசு. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் கருணாநிதி. ரத்த உறவுகள் மட்டுமே நேர்காண முடியும் என்ற தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இந்த உத்தரவு நகலை எடுத்துக் கொண்டு வழக்கறிஞர் சிராஜீதினும் நானும் கோவை மத்திய சிறைக்கு இராமகிருட்டினன் அவர்களைச் சந்திக்க சென்றோம். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவரைச் சந்தித்தோம். உறவினர்கள் தவிர நண்பர்கள் என்ற அடிப்படையில் முதன் முதலில் அவரைச் சந்தித்தவர்கள் நாங்கள்தான்.  

சிறையின் முதன்மை வாசல் அருகே கைதிகளை நேர்காண வருபவர்கள் மனு அளித்து விட்டு காத்திருக்கும் பகுதியில் ஒரு செக்கு போன்ற ஒன்றின் மீது மக்கள் உட்கார்ந்துக் கொண்டு கதைப் பேசிக் கொண்டு இருந்தார்கள். சிலர் அதன் மீது உட்கார்ந்துக் கொண்டு டீ குடித்தார்கள், வெற்றிலைப் பாக்குப் போட்டு எச்சிலை அங்கேயே துப்பினார்கள், சிறுவர்கள் மலம், ஜலம் கூட கழித்தர்கள். என்னதான் அது என்ற ஆர்வ மிகுதியில் அங்கு சென்று பார்த்த போது எனக்கு பெரும் அதிர்ச்சி. ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று அனைவராலும் பெருமையுடன் அழைக்கப்படும் வ.உ.சிதம்பரனார் சுதந்திரப் போரில் ஈடுபட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்ட போது இழுத்த செக்குதான் அது. தன் குருதியை வியர்வையாய் சிந்தி இழுத்து இழுத்து தேய்ந்த அவரது உடல் போல, தேய்ந்துக் கிடந்த வரலாற்று சிறப்பு மிக்க செக்கு என்று எண்ணிய போது என் மனது கனத்தது. வரலாற்று உணர்வு எந்தளவுக்கு மங்கிப் போயுள்ளதற்கு இதைவிட என்ன எடுத்துக்காட்டு கூற முடியும் என்று எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டேன்.

அப்போது உடனடியாக கோவையில் எனக்குத் தெரிந்த பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்தேன். ஜீனியர் விகடன் பத்திரிகை விரிவாக செய்தி வெளியிட்டிருந்தது. விழித்துக் கொண்ட தமிழக அரசு அதனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தது. அதனைச் சுற்றி இரும்பு வேலி அமைத்து மேல் கூரை எல்லாம் போட்டுப் பாதுகாத்தது. இன்றைக்கும் அந்த ‘வரலாற்று செக்கு’ பாதுகாப்பாக உள்ளது.

இன்று (செப்டம்பர் 5) வ.உ.சி.யின் 141வது பிறந்த நாள். அவரை நினைத்த போது மேற்சொன்ன நிகழ்வுகள் என் நினைவுக்கு வந்தன. வ.உ.சி. என்றாலே சிவாஜி கணேசன்தான் நினைவுக்கு வரும் இத்தமிழ்ச் சமூகத்தில் வ.உ.சி. யாருடைய நினைவில் இருக்கப் போகிறார்.

No comments: