Monday, June 14, 2021

தமிழகத்தில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்த சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்!

பல்லாண்டுகளாக சிறையில் இருப்பவர்களை விடுவிக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தமிழக முதல் அமைச்சருக்குக் கூட்டாக எழுதிய கடிதம்:

ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள தங்களுக்கு, எங்கள் வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டில் நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய, இந்த கூட்டு மனுவின் மூலம் கோரிக்கை விடுக்கிறோம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு சிறைவாசிகளின் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை நாங்கள் அறிவோம். தங்கள் தலைமையில், தமிழ்நாட்டின் அனைத்து கட்சிக் குழுவொன்று, குடியரசுத்தலைவரை நேரில் சந்தித்து, எழுவர் விடுதலை குறித்து வலியுறுத்தக் கோருகிறோம்.

75 வயதைக் கடந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் 1987ம் ஆண்டு முதல் (ஏறத்தாழ 34 ஆண்டுகளாக) சிறையில் இருந்து வருகிறார். அவரோடு ஆண்டியப்பன், பெருமாள் போன்றவர்களும் சிறையில் இருக்கிறார்கள்.

அது போல, ஹாரூன் பாஷா, யாசுதீன் உள்ளிட்ட 19 பேர், தண்டனைக் கைதிகளாக கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சிறைகளில் உள்ளனர். கடந்த காலங்களில், மாநில அரசு வழங்கிய பொதுமன்னிப்பில் இவர்கள் முன்விடுதலை செய்யப்படவில்லை.

வெடிமருந்துச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட முகமது அன்சாரி, தாஜுதீன் உள்ளிட்ட 16 பேர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.

கைதிகளின் வயோதிகம், உடல்நிலை, குடும்பச் சூழல், சிறையில் கைதிகளின் நடத்தை போன்றவைகளை கணக்கில் கொண்டு இவர்கள் அனைவரையும் முன்விடுதலை செய்வதற்கு மாநில அரசுக்கு முழு உரிமை உள்ளது.

அறிவுரைக் கழகங்கள் பரிந்துரையின் அடிப்படையில் கைதிகள் முன்விடுதலை செய்யப்படுவதில் சுணக்கம் இருக்கிறது என்று கருதுகிறோம். சிறைவாசிகளை விடுவிப்பதில் இருக்கும் பாகுபாடு மற்றும் அது தொடர்பான விதிகள், பல சிறைவாசிகளின் விடுதலைக்கு தடையாக இருக்கின்றன.

குற்றவியல் நீதியின் முக்கிய நோக்கம், தண்டனைப் பெற்ற குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பது. ஆனால், தங்களது வாழ்க்கையின் பெரும்பகுதியை சிறையிலேயே கழித்தவர்களை பல்வேறு காரணங்களுக்காக விடுவிக்க மறுப்பது சரியல்ல என்று கருதுகிறோம். ஆயுள் தண்டனை பெற்றவர்களை ஆயுள் முழுவதும் சிறையில் வைத்திருப்பது என்பது நீதிக்கு எதிரானது.

தங்கள் வாழ்வின் இளமையான காலத்தின் பெரும்பகுதியை சிறையில் கழித்தவர்கள், இறுதிக் காலத்திலாவது தங்கள் குடும்பத்தோடு இருக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பான ஆசையாகும்.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் அனைவரையும், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்தக்காலத்தில், எந்தவித பாகுபாடும் காட்டாது, விடுதலை செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுகிறோம்.

மிக்க நன்றி,

தங்கள் உண்மையுள்ள,

(ஒ-ம்) இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

(ஒ-ம்) கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

(ஒ-ம்) கண. குறிஞ்சி, மாநிலத் தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL)-தமிழ்நாடு & புதுச்சேரி.

(ஒ-ம்) தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

(ஒ-ம்). அ.மார்க்ஸ், (மனித உரிமைகளுக்கான தேசியக் கூட்டமைப்பு-NCHRO)

(ஒ-ம்) கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு

(ஒ-ம்) அப்துல் ரஹ்மான், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்

(ஒ-ம்) எஸ்.செல்வ கோமதி, நீதிபதி சிவராஜ் வி.பாட்டில் பவுண்டேஷன்

(ஒ-ம்) அ.மகபூப் பாஷா, சோகோ அறக்கட்டளை

(ஒ-ம்) ஹென்றி திபேன், மக்கள் கண்காணிப்பகம்

(ஒ-ம்) வி.பி.குணசேகரன், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம்

(ஒ-ம்) விடுதலை இராசேந்திரன், திராவிடர் விடுதலைக் கழகம்

(ஒ-ம்) கோவை இராமகிருஷ்ணன், தந்தை பெரியார் திராவிடர் கழகம்

(ஒ-ம்) U.A.அன்புராஜ், முன்னாள் ஆயுள் தண்டனை சிறைவாசி

No comments: