Saturday, June 12, 2021

52 நாட்களாக நீதி வேண்டி பிணவறையில் உயிரற்ற உடல்..

 திருநெல்வேலி மாவட்டம், வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மனோ (வயது 27). சட்டக் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர். சென்ற 11.04.2021 அன்று இவர் உட்பட நான்கு பேர் மீது களக்காடு காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் இவர்களைப் பாளையம்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றியுள்ளனர்.

சென்ற 22.04.2021 அன்று சிறையில் முத்துமனோ (27), சந்திரசேகர் (22), கண்ணன் (23), மாதவன் (19) ஆகியோர் மீது சிறைவாசிகள் கடும் தாக்குதல் நடத்தியதில் நால்வரும் படுகாயம் அடைந்தனர். அனைவரும் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முத்து மனோ திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்துபோனார்.

இதுகுறித்து பெருமாள்புரம் காவல்நிலைய போலீசார் சிறைவாசிகளான ஜேக்கப் (29), மாடசாமி (25), ராம் (எ) ராமமூர்த்தி (24), மகாராஜா (28), சந்தான மாரிமுத்து (எ) கொக்கி குமார், கந்தசாமி (22) ஆகியோர் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், இக்கொலைக்குப் பின்னணியாக இருந்த சிறை அதிகாரிகள், சிறைக் காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. அப்போழுது 6 சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் இடமாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜெயிலர் பரசுராமன் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைவாசிகள் சாதி அடிப்படையிலேயே அடைத்து வைத்துள்ளனர். சமூகத்தில் எப்படி சாதியப் பாகுபாடும், மோதல்களும் உள்ளது போல், சிறைச்சாலைகளிலும் இந்நிலையே உள்ளது. முத்து மனோ உள்ளிட்ட நால்வரை விசாரணை சிறைவாசிகள் பிளாக்கில் அடைத்து வைக்காமல், தண்டனை சிறைவாசிகள் உள்ள ‘ஏ’ பிளாக்கில் அடைத்துள்ளனர். இதில் ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த குற்றவாளிகளை அடைத்து வைத்துள்ளனர். இதனால்தான், முத்து மனோ உள்ளிட்ட நால்வர் மீதான தாக்குதல் எளிதாகியுள்ளது. இத்தாக்குதலுக்கு வேறு பல காரணங்கள் இருந்தாலும் சாதியமும் ஒரு காரணமாக உள்ளது. இதற்குப் பின்னால் காவல்துறையினர் சிறைத்துறையினர் என பலரின் பெரும் சதித்திட்டம் இருப்பதாகவே தெரிகிறது.

இந்நிலையில், கீழ்காணும் கேள்விகள் எழுகிறது.

1) ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் இருந்து பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றியது ஏன்?

2) பாளையங்கோட்டை சிறையில் விசாரணை சிறைவாசிகள் பிளாக்கில் அடைக்காமல், தண்டனைச் சிறைவாசிகள் ‘ஏ’ பிளாக்கில் அடைத்தது ஏன்?

3) முத்து மனோ உள்ளிட்ட நால்வர் பாளையங்கோட்டை சிறைக்கு வருவது ‘ஏ’ பிளாக்கில் இருந்த சிறைவாசிகளுக்கு முன்கூட்டியே தெரிந்தது எப்படி?

4) சிறையில் கல்லால் தாக்கிக் கொலை செய்யும் அளவுக்கு பெரிய கற்கள் இருந்தது எப்படி?

5) முத்து மனோ உடலில் 28 காயங்கள் உள்ளதால் கற்களால் தாக்கியதால் இறந்தாரா? அல்லது வேறு ஆயுதங்களால் தாக்கினார்களா?

இக்கொலை நடந்த நாள் முதல் வாகைக்குளம் மக்கள் நீதிக் கேட்டுப் போராடி வருகின்றனர். முத்து மனோ உடற்கூறாய்வு முடிந்து 52 நாட்கள் ஆகியும் உடலைப் பெற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து உறுதியாக போராடி வருகின்றனர். முத்து மனோவின் தந்தையார் பாவனாசம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில் இக்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும். நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.

இந்நிலையில், இக்கொலை வழக்கின் புலன்விசாரணை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால், இதுவரையில் சிறை அதிகாரிகள், சிறைக்காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. சிறை அதிகாரிகள், சிறைக் காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அரசுப் பணி வழங்க வேண்டும் என்பதுதான் போராடும் வாகைக்குளம் மக்கள், சமூக இயக்கங்களின் கோரிக்கைகள்.

போராடும் மக்களின் கோரிக்கைகளைத் தமிழக அரசும், காவல்துறையும் உடனே நிறைவேற்ற வேண்டும்.

முத்து மனோவின் உயிரற்ற உடல் 52 நாட்களாக நீதி வேண்டி பிணவறையில் காத்துக் கிடக்கிறது.

No comments: