Saturday, October 02, 2010

மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்த கருத்தரங்கம்!


வீரபாண்டியன்...


ஆரூண்...


பேராசிரியர் ஜவாகிருல்லா...



கோ. சுகுமாரன்...


அருணன்...


சுதர்சன நாச்சியப்பன்...



தேவநேயன்...


பங்கேற்றோர்...
----------------------------------------------------------------------------------------------------

‘மதச்சார்பற்றோர் மாமன்றம், தமிழ்நாடு’ மற்றும் ‘பண்பாடு பல்சமய உரையாடல் ஆராய்ச்சி மையம் (IDCR)’, லயோலா கல்லூரி ஆகியவை சார்பில் சென்னையில், 18.09.2010 அன்று மாலை 5.30 முதல் 8.30 மணி வரையில், லயோலா கல்லூரி, லாரன்ஸ் அரங்கில் “இந்தியாவும் மதச்சார்பின்மையும்” என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கம் மதச்சார்பின்மை குறித்து ஆழமான விவாதத்தைத் தூண்டும் விதமாக அமைந்தது.

‘மதச்சார்பற்றோர் மாமன்றம்’ மதச்சார்பின்மையை வலியுறுத்தியும், மதவெறி சக்திகளை அம்பலப்படுத்தியும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் 11.12.2008-ல் புகழ் பெற்ற மனித உரிமைப் போராளியும், குஜராத், மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறையைக் கட்டவிழுத்து ஆயிரக்கணக்கான சிறுபானமையினர் பலியாக்கிய மத வெறியர்களுக்கு எதிராகப் போராடி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிக் கிடைக்க சமரசமின்றி பாடுபட்டு வருபவருமான திஸ்தா செட்டில்வாட் அவர்களை அழைத்து வந்து சென்னையில் மிகப் பெரிய கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. மதச்சார்பின்மையை வலியுறுத்துவது எளிதான செயல் இல்லை என்பதை நாம் அறிவோம். இந்த சவால் நிறைந்த பணியை ‘மதச்சார்பற்றோர் மாமன்றம்’ சமரசமின்றி செய்து வருகிறது. அரசியல் விமர்சகரும், சமூக செயல்பாட்டாளருமான வீரபாண்டியன் இந்த அமைப்பிற்கு நிறுவனராக இருந்து செயலாற்றி வருகிறார்.

“இந்தியாவும் மதச்சார்பின்மையும்” கருத்தரங்கத்திற்கு வரவேற்புரையும், இணைப்புரையும் வழங்கிய மதச்சார்பற்றோர் மாமன்றத்தின் நிறுவனர் வீரபண்டியன் ‘நான் பெரும்பாலும் இதுபோன்ற மதச்சார்பற்ற நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துக் கொள்கிறேன். தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் மாணவர்களிடையே நிறைய பேசியிருக்கிறேன். மதத்தின் பெயரால் வன்முறை என்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த அமைப்பின் லோகோவாக நாங்கள் மகாத்மா காந்தியை வைத்திருக்கிறோம். காரணம் அவர் மதச்சார்பின்மைக்காக தன் உயிரை கொடுத்தவர். இந்தியாவில் வேறு யாருக்கும் கிடைக்காத பெருமை அவருக்குத்தான் கிடைத்தது. அவரை தான் ‘முகமது காந்தி’ என்று முஸ்லிம்கள் அழைத்தார்கள். அந்த அளவுக்கு அவர் மதச்சார்பின்மைக்காக உழைத்திருக்கிறார். மதச்சார்பின்மைக்காகப் போராடும் ஒரு அமைப்பு அவரை லோகோவாக வைத்திருப்பதற்கு முழுப் பொறுத்தமானவர் அவர். மனிதநேயத்தை விரும்புகிறவர்கள் மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். மதத்தின் பெயரால் வேறுபாடுகளை உருவாக்கி அரசியல் செய்வதை நாம் ஏற்றுக் கொள்ள கூடாது என்பதோடு அவற்றை நாம் நிராகரிக்க வேண்டும்’ என்று அழுத்தமாகப் பேசினார். பேச்சாளர்களைப் பேச அழைத்த போது இடையிடையே அவர்களைப் பற்றிய குறிப்புகளை வழங்கியது பார்வையாளர்களைக் கவர்ந்த்து.

கருத்தரங்கத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய பண்பாடு பல்சமய உரையாடல் ஆராய்ச்சி மையத்தின் செயல் இயக்குநரும், லயோலா கல்லூரி செயலர் – தாளாளருமான முனைவர் ஜோ.ஆரூண், ‘உலகப் பார்வையில் இந்திய மதச்சார்பின்மை’ என்ற தலைப்பில் பேசினார். அவர் ‘மதச்சார்பற்றோர் மாமன்றம் போன்ற அமைப்புகளோடு சேர்ந்துப் பணியாற்றுவது சரியெனப்பட்டதால் தான் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடக்கும் இந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டோம். மனிதர்களைப் பிரித்து மோதல் ஏற்படுத்துவதில் மனித நேயம் தோல்வி அடைகிறது. உலக நாடுகளில் மதச்சார்பின்மை என்பது எந்த மதத்தையும் சாராமல் இருப்பது. இந்தியவைப் பொறுத்தவரையில் அனைத்து மதங்களையும் சமமாக பாவிப்பதுதான் மதச்சார்பின்மையாக உள்ளது. இந்த கொள்கையில் நாம் உறுதியாக இருப்போமானால் நமக்குள் எந்தவித பிரச்சனையும் எழாது’ என்றார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத் தலைவர் முனைவர் எம்.எச்.ஜவாகிருல்லா தலைமைத் தாங்கிப் பேசியதாவது ‘மதச்சார்பின்மை என்பது எந்த மதத்தையும் சாராது இருப்பது என்பதோடு, எல்லா மதத்தையும் சமமாக பாவிப்பதாகும். இந்தியாவை ஆட்சி புரிந்த முந்தைய மன்னர்கள் மதச்சார்பின்மைக்கு எடுத்துக்கட்டாக இருந்தனர். மகாராஷ்டிராவில் இன்றைக்கு சிவசேனை போன்ற மத சக்திகள் தங்கள் அடையாளமாக முன்னிறுத்தும் சிவாஜி மதவெறியர் அன்று. அவரது ஆட்சிக் காலாத்தில் அவரது படையில் நிறைய முஸ்லிம்கள் உயர் பதவியில் அமர்த்தப்பட்டனர். அவர் தான் சார்ந்த மதத்தைத் தாண்டி முஸ்லிம்களுக்குப் பள்ளிவாசல் கட்டிக் கொடுத்துள்ளார். அவரை இன்று மதத்தின் குறியீடாக வைத்து மகாராஷ்டிராவில் அரசியல் நடந்து வருகிறது. அதேபோல், இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர் அவுரங்கசிப் தன் ஆட்சிக் காலத்தில் தன் ஆட்சிப்பரப்பில் கோயில்கள் கட்டிக் கொடுத்துள்ளார். எந்த மதத்தின் மீதும் அவர் வெறுப்பை உமிழ்ந்ததில்லை. இப்படி நம்முடைய முன்னோர்கள் மதச்சார்பின்மையை உறுதியாக பின்பற்றி வாழ்ந்துள்ளனர். என்ன விலைக் கொடுத்தாவது மதச்சார்பின்மையை நாம் கடைப்பிடித்திட வேண்டும். மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்க பாடுபடுவோம்’ என்றார்.

‘குஜராத் – என்ன நடக்கிறது?’ என்ற தலைப்பில் பேசிய புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், ‘கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் முஸ்லிம்கள் தான் செய்தனர் எனக் கூறி, 3000-க்கும் மேற்பட்ட சிறுபான்மையின முஸ்லிம்களைக் கொலை செய்துள்ளனர் இந்து மதவெறியர்கள். பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். கோடிக்கணக்கான மதிப்புடைய உடைமைகளைச் சேதப்படுத்தி உள்ளனர். கோத்ரா ரயில் எரிப்பு முஸ்லிம்கள் செய்ததல்ல. கரசேவர்கள் ரயில் நிலையத்தில் இருந்த ஒரு முஸ்லிம் இளம் பெண்ணைத் தூக்கிச் சென்றதுதான் அனைத்திற்கும் காரணம். இதனை அங்குள்ள பத்திரிக்கையாளர்கள் ஈமெயில் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்தி உள்ளனர். அதற்காக அவர்கள் மிரட்டப்பட்டனர். ரயில் எரிப்பு குறித்த தடய அறிவியல் துறை அறிக்கை ரயில் பெட்டி உள்ளிருந்து எரிக்கப்பட்டதாக கூறுகிறது. தற்போது ஒரு என்கவுன்டர் வழக்கில் குஜராத் முதல்வர் மோடி நள்ளிரவு வரை விசாரிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற தலையீடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. மேலகான் குண்டு வெடிப்பில் கைது செய்யபாட்டுள்ள மதவெறியர்களுக்கு ஆதராவாக பேசும் மத்திய அரசு, ஜாமியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர்கள் என்கவுன்டரில் கொல்லப்பட்டது குறித்து பேச முடியாது எனக் கூறுவது இரட்டை அளவுகோல் ஆகும்’ என்றார்.

‘காவிமயமும் கோட்சேக்களும்’ என்ற தலைப்பில் பேசிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் அருணன் ‘காந்தியைக் கொன்ற கோட்சே உள்ளிடவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. காந்தி கொலை வழக்கில் தங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும், சாவர்கருக்கும் தொடர்பில்லை என்று கூறியவர்கள், தீர்ப்பு சொல்லப்பட்ட நேரத்தில் குற்றவாளிகள் அனைவரும் சாவர்க்கர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். “காவி புனிதமானது தான்” ஆனால், அந்த காவியை அணிந்தவர்கள் புனிதமானவர்களாக இல்லை. சங்கராச்சாரியாரை எடுத்துக் கொள்வோம். அவர் ஒரு கொலை வழக்கில் நீதிமன்றத்திற்கு அலைந்துக் கொண்டிருக்கிறார். தென்காசியில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தங்களுடைய அலுவலகத்திற்கே குண்டு வைத்துக் கொண்டு, அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடலாம் எனத் திட்டமிட்டனர். நல்ல வேளையாக அது கண்டுபிடிக்கப்பட்டது. இன்றைக்கு காவித் தீவிராவாதம் என்றவுடன் பதறுகிறார்கள். முஸ்லிம் தீவிரவாதம் எனக் கூறி ஒரு சமூகத்தையே கொச்சைப்படுத்தியவர்கள், கலங்கப்படுத்தியவர்கள் இப்போது இந்த வார்த்தையைப் பார்த்து அச்சப்படுகிறார்கள். இந்த கருத்தரங்கம் நடக்கும் இந்த நேரம் மிகவும் முக்கியமானது. பாபர் மசூதி இருந்த இடம் தொடர்பாக நடந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் நேரம். மதச்சார்பின்மை பற்றி நாம் மத நம்பிக்கை உள்ளவர்களிடத்திலும் பிரச்சாரம் செய்ய வேண்டும்’ என்றார்.

‘இந்திய மதச்சார்பின்மையும், நமது கடமையும்’ என்ற தலைப்பில் நிறைவுரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன் ‘நமது இந்திய அரசியல் சாசனம் எந்த மதத்தையும் கடைபிடிக்க, அதனை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறி அழைக்க உரிமை வழங்கியுள்ளது. கங்கிரஸ் கட்சி அனைத்து மதத்தினரையும் சமமாக கருதுகிறது. இந்தியாவில் காங்கிரஸ் கட்சி மட்டும்தான் மத, சாதி, இன அடையாளம் எதையும் பார்க்காத பொதுவான கட்சியாகும். இதனால் இந்த கட்சி இன்றைக்கும் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய கட்சியாக திகழ்கிறது. எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி இந்திய அரசியல் சட்டத்தில் ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தையை சேர்த்தார். எமர்ஜென்சி காலத்தில் நடந்த நல்லதுகளில் இதுவும் ஒன்று. சிறுபான்மை மக்களுக்கு காங்கிரஸ் எப்போதும் அரணாக இருக்கும், இருக்கிறது. நீதிபதி ராஜேந்திர சச்சார், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆகியோர் தலைமையில் கமிஷன்கள் அமைத்து சிறுபான்மை மக்களின் நிலைக் குறித்து அறிந்து அவர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ராஷ்ட்ரிய சுயம் சேவக் போன்ற அமைப்புகளை நாம் புறக்கணிக்க வேண்டும். அவர்களின் வெறுப்பு அரசியலுக்கு இடம் கொடுக்க கூடாது’ என்றார்.

நிறைவாக நன்றி கூறிய தோழமை இயக்குநர் தேவநேயன் ‘அனைவருக்கும் நன்றி கூறியதோடு, இந்த கருத்தரங்கில் அறிவுஜீவிகளை அழைப்பதைவிட களத்தில் இருந்து போராடுபவர்களை அழைத்துள்ளோம். அதுதான் இந்த கருத்தரங்கின் சிறப்பு’ என்றார்.

1 comment:

Anonymous said...

கருத்தரங்கு தேவையானது. ஆனால் சுதர்சன நாச்சியன் என்ற காங்கிரஸ் நஞ்சும், ஈழம் துடைத்தழிக்கப்பட்ட போது ஜால்ரா போட்டுக் கொண்டிருந்த வயிற்றுப்போக்கு, சாரி...பிற்போக்கு எழுத்தாளர் சங்கமும் அதன் தலைவருமான அருணன் போன்றோர் அழைக்கப் பட்டது தான் இதிலுள்ள முரண்நகை. பாஜகவின் வெளிமுகம் இந்துத்துவமென்றால், காங்கிரசின் உள்முகம் மென் இந்துத்துவம். இராஜீவின் காலத்தில் அயோத்தித் தீக்கு நெய் போடப்பட்டத்தைப் பற்றி சுதர்சன நாச்சியன் வாய்திறந்திருக்க மாட்டாரே..?