Monday, December 09, 2024

வில்லியனூர் சங்கராபரணி ஆற்றுப் பாலம் கட்டியதில் ஊழல், முறைகேடு: சி.பி.ஐ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் உத்திரவிட வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.12.2024) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி வில்லியனூர் சங்கராபரணி ஆற்றுப் பாலம் கட்டியதில் நடந்த ஊழல், முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் உத்திரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனூர் ஆரியபாளையம் சங்கராபரணி ஆற்றுப் பாலம் கட்டும் பணி கடந்த 11.02.2022 அன்று தொடங்கியது. ரூபாய் 60 கோடியில் 360 மீட்டர் நீளம் 18 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்ட இப்பாலம் கடந்த 28.10.2024 அன்று துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் திறந்து வைத்தனர்.

இந்நிலையில் புயல், மழையின் போது இப்பாலத்தின் கிழக்குப் பகுதி இணைப்புச் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்ட இரண்டு மாதத்திற்குள்ளேயே விரிசல் ஏற்பட்டதற்குப் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், ஆட்சியாளர்களும்தான் பொறுப்பு. பொதுமக்களின் உயிர்களுடன் விளையாடும் அரசசையும், பொதுப்பணித்துறையையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இப்பாலத்தைக் கட்ட பொறுப்பாக இருந்த பொதுப்பணித்துறை உயரதிகாரி ஒருவர் பதவி உயர்வுப் பெறவும், தேசிய நெடுஞ்சாலைப் பிரிவுதான் வேண்டுமென ஆட்சியாளர்களுக்கு உரிய அழுத்தம் கொடுத்து இப்பதவியைப் பெற்றவர் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட அதிகாரியால் எப்படி இப்பாலத்தை முறையாகக் கட்டி இருக்க முடியும். இப்பாலம் கட்டியதில் ஊழல், முறைகேடுகள் நடந்துள்ளன.

இப்பாலம் ஒதுக்கப்பட்ட நிதி முழுவதையும் செலவழித்து முறையாகக் கட்டப்பட்டுள்ளதா, மக்கள் பயணம் செய்ய பாதுகாப்பானதா என்பது குறித்து வல்லுநர் குழு மூலம் ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும், சங்கராபரணி ஆற்றுப் பாலம் கட்டியதில் நடந்த ஊழல், முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் உத்திரவிட வேண்டும்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர், மத்திய உள்துறைச் செயலர், சி.பி.ஐ. இயக்குநர், துணைநிலை ஆளுநர் உள்ளிட்டோருக்குப் புகார் அனுப்ப உள்ளோம்.

Thursday, December 05, 2024

காரைக்கால் சிறையில் சிறைவாசி தற்கொலை சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்காதது ஏன்? விளக்கம் அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்திரவு!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (05.12.2024) விடுத்துள்ள அறிக்கை:

காரைக்கால் மாவட்ட சிறையில் தண்டனைச் சிறைவாசி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பற்றி தகவல் தெரிவிக்காதது ஏன்? என்பது குறித்து 8 வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்திரவுப் பிறப்பித்துள்ளது.

கடந்த 08.06.2024 அன்று, காரைக்கால் மாவட்டச் சிறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனைச் சிறைவாசி பிரதீஷ் (வயது 23) த/பெ. பழனிச்சாமி என்பவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இச்சம்பவம் குறித்து கடந்த 18.06.2024 அன்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்குப் புகார் அனுப்பி இருந்தோம். அதில் பிரதீஷ் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்குச் சிறைத் துறையும், புதுச்சேரி அரசும்தான் பொறுப்பு. பணியில் அலட்சியமாக இருந்த சிறைத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி இருந்தோம்.

இப்புகாரைப் பரிசீலித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த 26.11.2024 அன்று உத்திரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பதிவகத்தில் (Registry) இந்த காவல் மரணம் தொடர்பாக எந்த தகவலும் காணப்படவில்லை. எனவே, காரைக்கால் மாவட்ட நடுவர் (மாவட்ட ஆட்சியர்), முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர், காரைக்கால் மாவட்ட சிறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் இக்காவல் மரணம் பற்றி தகவல் தெரிவிக்காதது ஏன் என்பது குறித்து 8 வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது. இந்த உத்திரவின் நகல் டி.ஜி.பிக்கும் அனுப்பி வைத்துள்ளது.

மேலும், மரணம் ஏற்பட்டதற்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய அறிக்கை, தேசிய மனித உரிமைகள் ஆணைய வடிவப்படி காலாப்பட்டு மத்திய சிறை உள்ளிட்ட சிறைகளில் அடைக்கப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட சுகாதாரப் பரிசோதனை அறிக்கை, காலவரிசைப்படி முந்தைய சிறை உள்ளிட்ட சிறைகளில் நோய்களுக்குச் சிறைக்கு உள்ளேயும் வெளியேயும் சிகிச்சை அளிக்கப்பட்ட முழு மருத்துவ ஆவணங்கள், பிரேத விசாரணை அறிக்கை, தட்டச்சு செய்யப்பட்ட உடற்கூறாய்வு அறிக்கை, விசரா, ஹிஸ்டோபேத்தாலஜி ஆய்வுகள், தடய அறிவியல் துறை அறிக்கையின் அடிப்படையிலான மரணத்திற்கான காரணம், நீதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கை ஆகியவற்றை சமர்ப்பிக்கவும் உத்திரவிட்டுள்ளது.

மேலும், நீதித்துறை நடுவர் விசாரணை அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை, இறுதி முடிவு மற்றும் எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை, குற்ற நடவடிக்கை, சி.பி.சி.ஐ.டி. விசாரணை அறிக்கை ஆகியவற்றை சமர்ப்பிக்கவும் உத்திரவிட்டுள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த 14.12.1993 அன்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலர்களுக்கு வழிகாட்டுதல் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் காவல் மரணம் மற்றும் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் குறித்து மாவட்ட நடுவர் (மாவட்ட ஆட்சியர்), காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தேசிய மனித உரிமைகள் ஆணையப் பதிவாளருக்கு 24 மணிநேரத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். உரிய நேரத்திற்குள் தகவல் தெரிவிக்கவில்லை என்றால் சம்பவத்தை மூடிமறைக்க முயற்சித்ததாக கருதப்படும் என்று கூறியுள்ளது.

மேலும், கடந்த 21.06.1993 அன்று மேற்சொன்ன வழிகாட்டல் காவல் மரணம் மற்றும் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் குறித்து மட்டுமல்ல, நீதித்துறைக் காவலில் நடந்தாலும் தகவல் தெரிவிக்க வேண்டுமென்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழிகாட்டல் ஒன்றை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலர்களுக்கும் அனுப்பியுள்ளது.

எனவே, காவல் மரணம் மற்றும் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் நடந்தால் மாவட்ட நடுவர் (மாவட்ட ஆட்சியர்), காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் 24 மணிநேரத்திற்குள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்குத் தகவல் அனுப்ப தலைமைச் செயலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

Wednesday, November 06, 2024

தலித் பெண்ணை சாதிப் பெயரை சொல்லி ஆபாசமாக பேசிய வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட இருவரை கைது செய்ய வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.11.2024) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி மணலிப்பட்டில் சாதிப் பெயரை சொல்லி ஆபாசமாக பேசிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரை கைது செய்ய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

கடந்த 05.10.2024 அன்று திருக்கனூர் அருகேயுள்ள மணலிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் சாந்தாலட்சுமியை அவரது கணவரின் அண்ணன் சக்திவேல், அவரது மனைவி ஜெயந்தி ஆகியோர் சாதிப் பெயரை சொல்லி ஆபாசமாக பேசியுள்ளனர். சாந்தாலட்சுமி வடிவேலு என்பரை கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்.

இதுகுறித்து 06.10.2024 அன்று எழுத்துமூலம் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் 15 நாட்கள் கழித்து கடந்த 21.10.2024 அன்று எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் பி.சி.ஆர். பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

ஆனால், குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் இதுநாள் வரையில் பி.சி.ஆர். பிரிவு போலீசார் கைது செய்யவில்லை. இருவரும் வீட்டிலேயே இருந்துகொண்டு அன்றாட வேலைகளை செய்து வருகின்றனர். இவர்களால் புகார்தாரரான தலித் பெண்ணிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளது. மேலும், இவர்கள் வழக்கின் சாட்சிகளை மிரட்டவும் வாய்ப்புள்ளது. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்கில் முன்ஜாமீன் கிடையாது என்பதால் இருவரையும் கைது செய்வது அவசியமாகிறது. பி.சி.ஆர். பிரிவு போலீசார் ஆரம்பம் முதல் வன்கொடுமைக் குற்றமிழைத்தவர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த 01.01.2024 முதல் 21.10.2024 வரை பி.சி.ஆர். பிரிவு போலீசார் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் 3 வழக்குகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். பி.சி.ஆர். பிரிவு போலீசார் இச்சட்டத்தில் அளிக்கப்படும் புகார்களில் வழக்குப் பதிவு செய்யாமல் கணிசமாக பணம் பெற்றுக் கொண்டு கட்டப் பஞ்சாயத்து செய்து வருகின்றனர். பி.சி.ஆர். பிரிவுக்கு முழு நேர காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்படவில்லை. இதனால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

முதலமைச்சர் தலைமையிலான வன்கொடுமைத் தடுப்புச் சட்ட கண்காணிப்புக் குழு (Vigilance and Monitoring Committee) பெயரளவில் உள்ளதே தவிர முறையாக செயல்படவில்லை. இக்குழுக் கூட்டம் அவ்வப்போது கூட்டப்பட்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளை ஆய்வு செய்ய வேண்டும்.

மேற்சொன்ன வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் உடனே கைது செய்ய வலியுறுத்தி டி.ஜி.பி.யை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளோம். அதன் பின்னரும் கைது செய்யவில்லை என்றால் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சார்பில் போராட்டம் நடத்துவோம். 

Monday, October 21, 2024

தலித் பெண்ணை சாதியை கூறி ஆபாசமாக பேசிய புகாரில் வழக்குப் பதிவு செய்ய பி.சி.ஆர். பிரிவு போலீஸ் அதிகாரிகள் மறுப்பு: டி.ஜி.பி. தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

 



மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (20.10.2024) விடுத்துள்ள அறிக்கை:

தலித் பெண்ணை சாதியை கூறி ஆபாசமாக பேசிய புகாரில் வழக்குப் பதிவு செய்ய பி.சி.ஆர். பிரிவு போலீஸ் அதிகாரிகள் மறுத்துள்ளதால் டி.ஜி.பி. தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி மணலிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் சாந்தாலட்சுமி (வயது 31) கலப்புத் திருமணம் செய்துகொண்டவர். இவரது கணவரின் அண்ணன் சக்திவேல் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி ஆகியோர் கடந்த 05.10.2024 அன்று மாலை 5.30 மணியளவில் சாந்தாலட்சுமியை சாதியை கூறி ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து கடந்த 06.10.2024 அன்று பாதிக்கப்பட்ட தலித் பெண் சாந்தாலட்சுமி கோரிமேட்டில் உள்ள பி.சி.ஆர். பிரிவு உதவி ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், புகார் கொடுத்து 15 நாட்கள் ஆகியும் இதுநாள்வரையில் இப்புகார் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. பி.சி.ஆர். பிரிவு போலீஸ் அதிகாரிகள் முதல்கட்ட விசாரணை (Preliminary inquiry) செய்து வருவதாக கூறி வழக்குப் பதிவு செய்ய மறுத்து வருகின்றனர். மேலும், முதல்கட்ட விசாரணை என்ற பெயரில் சாட்சிகளை மிரட்டி வருகின்றனர்.

எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி அளிக்கப்படும் புகார் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய முதல்கட்ட விசாரணை தேவையில்லை. கைது செய்ய ஒப்புதல் தேவையில்லை என இச்சட்டப் பிரிவு 18(ஏ) தெளிவாக கூறியுள்ளது. மேலும், இச்சட்டப்படி முன்ஜாமீன் கிடையாது என்பதால் வழக்குப் பதிவு செய்த உடனேயே குற்றமிழைத்தவர்களைக் கைது செய்ய வேண்டும். இல்லையேல், இவ்வாறு நடவடிக்கை எடுக்காத எஸ்.சி., எஸ்.டி., வகுப்பைச் சாராத அதிகாரிகளுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை எனவும் இச்சட்டம் கூறுகிறது.

எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் முறையாக செயல்படுத்தப்பட வேண்டும். இதற்கென முதலமைச்சர் தலைமையில் மாநில அளவிலான கண்காணிப்புக் குழு (State Level Vigilance and Monitoring Committee) அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இக்குழு முறைப்படி செயல்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, இதில் டி.ஜி.பி. தலையிட்டு மேற்சொன்ன புகார் மீது வழக்குப் பதிவு செய்து குற்றமிழைத்த இருவரையும் உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

இதுகுறித்து முதலமைச்சர், தலைமைச் செயலர், டி.ஜி.பி., மாவட்ட ஆட்சியர், எஸ்.எஸ்.பி (குற்றம் மற்றும் புலனாய்வு) உள்ளிட்டோருக்கு மனு அனுப்பி உள்ளோம்.

Wednesday, October 09, 2024

சிபிஎஸ்இ 127 அரசுப் பள்ளிகளில் 126 பள்ளிகளுக்கு இணைப்பு அங்கீகாரம்: 1 பள்ளியின் நிலை குறித்து கல்வித்துறை விளக்கம் அளிக்க வேண்டும்!

 


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.10.2024) விடுத்துள்ள அறிக்கை:

சிபிஎஸ்இ 127 அரசுப் பள்ளிகளில் 126 பள்ளிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் 1 பள்ளியின் நிலை குறித்து கல்வித்துறை விளக்கம் அளிக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

மத்திய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் 10.09.2024 நாளிட்டு முதலமைச்சர் ரங்கசாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில், புதுச்சேரியில் உள்ள 127 அரசுப் பள்ளிகள் சிபிஎஸ்இ முறைக்கு மாற்றி இணைப்பு (Affiliation) வழங்க வேண்டுமென முதலமைச்சர் கடந்த 29.12.2022 அன்று கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து சிபிஎஸ்இ உடன் கலந்தாலோசித்து பரிசீலித்ததில் 127 அரசுப் பள்ளிகளுக்கு இணைப்புக் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 127 பள்ளிகளில் 126 பள்ளிகள் பரிசீலிக்கப்பட்டு சிபிஎஸ்இ முறைக்கு மாற்றி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 பள்ளிக்கு முழுமையற்ற விண்ணப்பம் சமர்பித்ததால் சிபிஎஸ்இ இணைப்பு வழங்க முடியவில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை சிபிஎஸ்இ-க்கு 10, 12ஆம் வகுப்புகளுக்குத் தேர்வுக் கட்டணம் செலுத்த போதிய நிதி ஒதுக்கீடு பெற உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தோம். ஆனால், இதுவரையில் மேற்சொன்ன தேர்வுக் கட்டணம் செலுத்தியது குறித்து பள்ளிக் கல்வித்துறை உரிய விளக்கம் அளிக்கவில்லை.

இந்நிலையில், சிபிஎஸ்இ இணைப்புப் பெறாத அந்த 1 பள்ளி எது? அப்பள்ளியின் நிலை என்ன? இந்தாண்டு அப்பள்ளியில் பயிலும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத முடியுமா? சிபிஎஸ்இ இணைப்புப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்.

கல்வித்துறையில் சிபிஎஸ்இ விவகாரங்களைக் கவனிக்கும் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் போதிய நிர்வாகத் திறமை இல்லாத காரணத்தால் இதுபோன்ற அவல நிலை ஏற்படுகிறது. இதைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசோ செயலற்று இருக்கிறது. இதனால், பாதிக்கப்பட போவது மாணவர்கள்தான் என்பதைப் புதுச்சேரி அரசுக்குச் சுட்டிக் காட்டுகிறோம்.

Sunday, September 29, 2024

சிபிஎஸ்இ தேர்வுக் கட்டண நிதி ஒதுக்கீடு குறித்து கல்வித்துறை உண்மைக்கு மாறான அறிக்கை: முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!


 மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!! 

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (29.09.2024) வெளியிட்ட அறிக்கை:

சிபிஎஸ்இ 10, 12ஆவது வகுப்புத் தேர்வுக் கட்டண நிதி ஒதுக்கீடு குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உண்மைக்கு மாறான அறிக்கை வெளியிட்டுள்ளதால், இதுகுறித்து முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

சிபிஎஸ்இ 10, 12ஆவது தேர்வுக் கட்டணம் செலுத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்ய பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படும். இதுகுறித்து தலைமைச் செயலர் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென கடந்த 26.09.2024 அன்று அறிக்கை வெளியிட்டிருந்தோம். இது செய்தியாக பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினம் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ஒரு செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறியதோடு, செய்தி வெளியிட்ட பத்திரிகைகளை மிரட்டும் தொனியில் கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் சிபிஎஸ்இ 04.10.2024 அன்றைக்குள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று 04.09.2024 நாளிட்ட சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. நிதித்துறையின் பட்ஜெட் அதிகாரியால் பட்ஜெட் மதிப்பீடு 26.09.2024 அன்று வழங்கப்பட்டுள்ளது. செலவீனங்கள் ஒப்புதல் பெற பரிசீலனையில் உள்ளது எனவும் கூறியுள்ளார்.

அதாவது 04.09.2024 நாளிட்ட சிபிஎஸ்இ அனுப்பிய சுற்றறிக்கைக் கிடைத்தவுடன் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் காலதாமதமாக கடைசி நேரத்தில் நடவடிக்கை எடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், நிதி ஒதுக்கீடு இன்னமும் செய்யவில்லை பரிசீலனையில்தான் உள்ளது எனவும் கூறியுள்ளார். நிதி ஒதுக்கீடு குறித்து முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

இன்னமும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், நிதி ஒதுக்கீடு கோப்புக்கு ஒப்புதல் பெற்று தேர்வுக் கட்டணம் செலுத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவுகிறது.

மேலும், அந்த அறிக்கையில் செய்தி வெளியிட்ட பத்திரிகைகளை மிரட்டும் தொனியில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கூறியுள்ளார். பள்ளிக் கல்வித்துறையின் அவலங்களையும் செயலற்ற போக்கையும் செய்தியாக வெளியிட்டால், அதைச் சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதுதான் சிறந்த நிர்வாகியின் செயலாகும். அதைவிடுத்து உரிய காலத்தில் நிதி ஒதுக்கீடு பெற நடவடிக்கை எடுக்காத பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் பத்திரிகைகளை மிரட்டுவது கண்டிக்கத்தக்கது. மேலும், இது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது.

எனவே, இது குறித்து முதலமைச்சர் உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

Thursday, September 26, 2024

சி.பி.எஸ்.இ. தேர்வுக் கட்டணம் செலுத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை: உயர்மட்ட விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (26.09.2024) விடுத்துள்ள அறிக்கை:

கல்வித்துறை அலட்சியத்தால் சி.பி.எஸ்.இ. தேர்வுக் கட்டணம் செலுத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் 10ஆவது மற்றும் 12ஆவது வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறித்து தலைமைச் செயலர் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி அரசு 10ஆவது மற்றும் 12ஆவது மாணவர்கள் தேர்வு விண்ணப்பத் தொகையாக கடந்த பல ஆண்டுகளாக சுமார் ரூ.235 அளவில் தமிழக அரசுக்குச் செலுத்தி வந்தது. தற்போது சி.பி.எஸ்.இ-ல் 5 பாடங்களுக்குத் தேர்வுக் கட்டணம் ரூ,1500, ஒவ்வொரு கூடுதல் பாடத்திற்கும் ரூ.300 கூடுதல் கட்டணம், செய்முறைத் தேர்வுக் கட்டணம் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.150, அக்டோபர் 5ஆம் தேதிக்குப்பின் ஒவ்வொரு மாணவருக்கும் தாமதக் கட்டணம் ரூ.2000 என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும், பட்டியலின வகுப்பினருக்குச் சலுகைக் கட்டணம் டெல்லியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ரூ.1200 என்று கூறப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது புதுச்சேரி அரசு, ஆண்டு வருமானம் ரூ.1,50,000-க்கும் கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே தேர்வுக் கட்டணம் செலுத்தும் என்று தெரிகிறது.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ இணைப்பு முழுவதற்கும் பொறுப்பில் உள்ள கல்வித்துறை இணை இயக்குநர் சி.பி.எஸ்.இ-ல் வரும் 2025-இல் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழக்கமாக அரசு செலுத்தும் தேர்வுக் கட்டணம் குறித்து எந்தவித முன்னேற்பாடும் செய்யவில்லை. தேர்வு எழுத விண்ணப்பிக்க கடைசி நாள் 04.10.2024 என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போதுதான் தப்பும் தவறுமான கோப்புகளுடன் அலைந்து கொண்டிருக்கிறார். இரண்டு கோடி ரூபாய்களுக்கு மேல் சம்பந்தப்பட்ட கோப்பு அரசு செயலர், தலைமைச் செயலர் போன்றவர்கள்தான் முன் வைக்க முடியும். இதை அறியாமல் தனக்கு அதிகாரம் இல்லை என்றுகூட தெரியாமல் கோப்பில் கையெழுத்திட்டு ஒப்புதல் பெற மேலும் காலதாமதத்திற்கு வழி வகுத்துள்ளார்.

சி.பி.எஸ்.இ பிரிவுக்கு போதிய அனுபவமுள்ள பள்ளி முதல்வர்கள் இருந்தும், எந்த அனுபவமும் இல்லாத இரண்டு மூன்று ஆசிரியர்களைத் துறையிலேயே தன் கீழ் வைத்துக் கொண்டு இணை இயக்குநர் செயல்பட்டு வருகிறார். இதனால் இன்று 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு விஷயத்தில் பெரும் கவனக் குறைவுடன் நடந்து கொண்டதுடன், புதுச்சேரி அரசையும் நிதி நெருக்கடியில் தள்ளியுள்ளார்.

எனவே, துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், கல்வி அமைச்சர், தலைமைச் செயலர், கல்வித்துறை செயலர் ஆகியோர் இதில் தலையிட்டு தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள் 04.10.2024 என்பதால், போதிய நிதி ஒதுக்கீடு செய்து தேர்வுக் கட்டணம் செலுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் எந்தவித மன உளைச்சலும் இல்லாமல் தேர்வு எழுத ஆவன செய்ய வேண்டும்.

இதுகுறித்து புதுச்சேரி அரசு தலைமைச் செயலர் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்திரவிட வேண்டும். மாணவர்களின் தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் அலட்சியமாக இருந்த கல்வித்துறை இணை இயக்குநர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Friday, September 20, 2024

காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை சிறைவாசி தூக்குப் போட்டுத் தற்கொலை: நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (20.09.2024) விடுத்துள்ள அறிக்கை:

காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை சிறைவாசி விவேகானந்தன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விசாரணை சிறைவாசியான விவேகானந்தன் (வயது 56) காலாப்பட்டு மத்திய சிறையில் கடந்த 16.09.2024 அன்று கழிவறையில் துண்டால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

நீதிமன்றக் காவலில் சிறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டதற்கு அரசும், சிறைத்துறையும் முழுப் பொறுப்பேற்க வேண்டும். சிறையில் பணியில் அலட்சியமாக இருந்த சிறைத்துறையினர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 08.06.2024 அன்று காரைக்கால் கிளைச் சிறையில் ஆயுள் தண்டனைச் சிறைவாசி பிரதீஷ் கைலியால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரையில் அரசும், சிறைத்துறையும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

புதுச்சேரி சிறைகளில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது ஏற்புடையதல்ல என்பதோடு, இவை அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். சிறைச்சாலைகள் சிறைவாசிகளைத் திருத்தும் மையங்களாக (Correctional Centers) இருக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகள் வழங்கியுள்ளது.

மேலும், சிறைவாசி விவேகானந்தன் தற்கொலை சம்பவம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்த வேண்டும்.

சிறைவாசி விவேகாந்தன் உயிரிழப்பிற்கு அரசும், சிறைத்துறையும் பொறுப்பு என்பதால் அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்குப் புகார் அனுப்பி உள்ளோம்.

Saturday, September 07, 2024

தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் 157ஆவது பிறந்த நாள்: தமிழ் அமைப்பினர் நினைவிடத்தில் மலரஞ்சலி!


நாடகத் தந்தை எனப் போற்றப்படும் தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் 157ஆவது பிறந்த நாளையொட்டி, கருவடிக்குப்பம் சுடுகாட்டில் அமைந்துள்ள நினைவிடத்தில் இராதே அறக்கட்டளை சார்பில் இன்று (07.09.2025) காலை 10.30 மணிக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு இராதே அறக்கட்டளை தலைவர் பொறிஞர் இரா.தேவதாசு தலைமைத் தாங்கினார்.

அரியாங்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. பாசுகரன் (எ) தட்சணாமூர்த்தி அவர்கள் கலந்துகொண்டு சங்கரதாசர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினார்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், வலைப்பதிவர் சிறகம் தலைவர் இரா.சுகுமாரன், வெற்றித் தமிழர் பேரவைத் தலைவர் தி.கோவிந்தராசு, தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பி.பிரகாஷ், செயலாளர் இராஜா, புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், திராவிடர் கழகம் மண்டலத் தலைவர் வே.அன்பரசன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன், புதுச்சேரி மாணவர் கூட்டமைப்புத் தலைவர் சீ.சு.சாமிநாதன், சுற்றுச்சூழல் கலாச்சார புரட்சி இயக்கத் தலைவர் பிராங்கிளின் பிரான்சுவா, தமிழ்தேசிய பேரியக்கத் தலைவர் இரா.வேல்சாமி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஜே.சம்சுதீன், செயலாளர் பலுலுல்லா, சான்றோர் பேரவை குமரவேல், பொறிஞர் கண்ணன், பாவலர் இளமுருகன், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் வேணு. ஞானமூர்த்தி, தமிழறிஞர் கோ.தாமரைக்கோ, நாடகக் கலைஞர் நந்தகோபால், ஓவியர் இராஜராஜன், நட்புக்குயில் அமைப்புத் தலைவர் சீனு.தமிழ்மணி, புதுச்சேரி நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் குமரன், பொருளாளர் இரா.ராஜ்குமார், கலை இலக்கியப் பேரவைப் பொறுப்பாளர் எலிசபத் ராணி, ஐயப்பன், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மலர் வணக்கம் செலுத்தினர்.

பாவலர் பாட்டாளி பைரவி தலைமையில் சங்கரதாசருக்கு பாமாலை சூட்டும் பாவரங்கம் நடைபெற்றது. இதில் 15 பாவலர்கள் கலந்துகொண்டு பாமாலை சூட்டினர். முடிவில் செல்வி இரா.சுகன்யா நன்றி கூறினார்.

தமிழ் அமைப்புகள் சார்பில் சங்கரதாசர் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டது.

Thursday, August 29, 2024

முன்தேதியிட்டு அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (29.08.2024) விடுத்துள்ள அறிக்கை:

மின்துறை முன்தேதியிட்டு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

கடந்த ஜூன் 12 அன்று மின்சார இணை ஒழுங்குமுறை ஆணையம் வீடு, வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டணத்தை உயர்த்தியது. இதற்கு அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதனால், மின்கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

மேலும், புதுச்சேரி அரசு மின்சார இணை ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யுமாறு கோரியது. இதனால், உயர்த்தப்பட்ட மின் கட்டணம் செயல்பாட்டிற்கு வரவில்லை.

மின்சார இணை ஒழுங்குமுறை ஆணையம் அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இதனால் தற்போது மின்துறை ஜூன் 12 அன்று உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வை முன்தேதியிட்டு அறிவித்துள்ளது. இது பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

25 ஆயிரம் கோடி சொத்துள்ள அரசு துறையான மின்துறையை தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு பொதுமக்கள், மின்துறை ஊழியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களும், வணிகர்களும் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில் இந்த மின்கட்டண உயர்வு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும். அரசு உரிய முயற்சி செய்து மின் கட்டண உயர்வைத் தடுக்கத் தவறியது கண்டனத்திற்குரியது.

எனவே, முன்தேதியிட்டு அறிவிக்கப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டுமென புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.