Friday, December 24, 2010

தந்தை பெரியார் 37-வது நினைவு தினம்: மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அஞ்சலி


தந்தை பெரியார் 37-வது நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி பிள்ளைத்தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமையில் அமைப்புக் குழு உறுப்பினர்கள் பா.மார்கண்டன், சீ.சு.சாமிநாதன், சு.காளிதாஸ், ஏ.கலைவாணன், பா.காளிதாஸ், கி.சரவணன் ஆகியோர் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு சார்பில் அதன் நிறுவனர் சதீஷ் (எ) சாமிநாதன் தலைமையில் விக்னேஷ் குமார், முருகன், மதிவாணன், ராஜா, பரணி, விக்னேஷ் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Wednesday, December 15, 2010

தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி, முதல் தகவல் அறிக்கைகளை இணையத்தில் வெளியிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 15.12.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

தில்லி உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைப் பின்பற்றி காவல் நிலையங்களில் பதியப்படும் அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் 24 மணி நேரத்திற்குள் இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுகொள்கிறோம்.

இதுகுறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 15.12.2010 அன்று தலைமைச் செயலர், சட்டத்துறை செயலர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

கடந்த 06.12.2010 அன்று தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, நீதிபதி மன்மோகன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ள செயல்படுத்தப்பட வேண்டிய பகுதிகளைக் குறிப்பிடுகிறோம்.

1) குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 207-ல் கூறப்பட்டுள்ள காலவரம்பிற்கு முன்னரே முதல் தகவல் அறிக்கைப் பெறலாம்.

2) குற்றம்சாட்டப்பட்டவர் தான் ஒரு வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறாரா அல்லது அவர் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இருக்கிறதா என்பதை தெரிந்துக் கொள்ள அவரோ,அவருடைய பிரதிநிதியோ சான்றிடப்பட்ட முதல் தகவல் அறிக்கை நகலைக் கேட்டு, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியிடமோ அல்லது காவல் கண்காணிப்பாளரிடமோ விண்ணப்பிக்கலாம். அவ்வாறு அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை ஏற்று நீதிமன்றத்தில் செலுத்தக் கூடிய கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு 24 மணி நேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை நகல் அளிக்க வேண்டும்.

3) பதியப்படும் முதல் தகவல் அறிக்கைகளை அது பிரச்சனையை ஏற்படுத்தக்கூடிய வழக்கினுடையது அல்லாமல் இருந்தால், அவற்றை பதிவுச் செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் டில்லி காவல்துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும். அதனை குற்றம்சாட்டப்பட்டவரோ அல்லது தொடர்புடைய எவரும் நகல் எடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்து தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுக் காணலாம்.

4) முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் வெளியிட வேண்டுமென்ற நீதிமன்றத்தின் உத்தரவை தில்லி காவல்துறை பிப்ரவரி 1, 2011 முதல் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளவற்றை புதுச்சேரியிலும் நடைமுறைப்படுத்த அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தீர்ப்பு நகலை அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும், காவல்நிலையங்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Thursday, December 09, 2010

டிசம்பர் 10 - மனித உரிமை நாள்: ஊழலுக்கு எதிராகப் போராட உறுதியேற்போம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழுக் கூட்டம் 08.12.2010 புதனன்று மாலை 6.30 மணியளவில் புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் அமைப்புக் குழு உறுப்பினர்கள் இரா.ராஜராஜன், பா.மார்கண்டன், சீ.சு.சாமிநாதன், க.சின்னப்பா, ஏ.கலைவாணன், கி.சரவணன், பா.காளிதாஸ், கி.கண்ணன், கே.பாலாஜி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1) டிசம்பர் 10, உலக மனித உரிமை நாளில் ஊழலை ஒழித்து நல்லாட்சிக்கு வழி வகுத்திடவும், ஊழலுக்கு எதிராகப் போராடவும் அனைத்து தரப்பு மக்களும் உறுதியேற்க வேண்டுகோள் விடுக்கிறோம்.

2) மழை நிவாரணமாக ரூ. 1000 ஏழை, பணக்காரன் என அனைவருக்கும் வழங்குவது தவறான முன்னுதாரணம். மழையால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்க வேண்டும்.

3) மழை நிவாரண விண்ணப்பத்தில் மத்திய அமைச்சர், முதலமைச்சர், அமைச்சர்கள் படங்களை அச்சிட்டு மலிவான அரசியல் செய்யும் ஆட்சியாளர்களின் போக்கை வன்மையாக கண்டிகிறோம். இதனைக் கைவிட்டு அரசு அலுவலர்கள் மூலம் உடனடியாக மழை நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4) அண்மையில் நடந்த துணைத் தாசில்தார் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதுகுறித்து அரசு சி.பி.ஐ. விசாரணக்கு உத்தரவிட வேண்டும். நடந்து முடிந்த தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும்.

5) தீபாவளிக்கு வழங்க இருந்த வேட்டி, சேலை வாங்குவதில் பல கோடி ரூபாய் ஊழல் நடக்க இருந்ததைக் கண்டறிந்து தலைமைச் செயலர் தடுத்துள்ளார். இதுகுறித்து அரசு சி.பி.ஐ. விசாரணக்கு உத்தரவிட வேண்டும். மக்களுக்கு காலதாமதமின்றி வேட்டி, சேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6) காவல்துறையில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் தேர்வுக்கான அறிவிப்பில் தற்போது நடைமுறையில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம், மீனவர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே, அரசு இதில் தலையிட்டு முறையான இடஒதுக்கீட்டை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7) அரசியல் கட்சியினர், அமைப்பினர், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டோர் என பலரின் மீது அரசு தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவியுள்ளது. மனித உரிமைக்கு எதிரான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். தேவைப்பட்டால் இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் போன்ற சாதாரண சட்டங்களிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8) விவசாயிகள், மீனவர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும், சுற்றுச் சூழலுக்கு எதிரான மூர்த்திக்குப்பம் துறைமுகத் திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே கட்டப்பட்ட தேங்காய்த்திட்டு துறைமுகத்தால் புதுச்சேரி, தமிழக கடலோர கிராமங்கள் கடல் அரிப்பல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கடல் அரிப்பைத் தடுக்க அரசு அறிவியல்பூர்வமான, மக்களுக்குப் பாதிப்பில்லாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9) சென்டாக் கலந்தாய்வுக் கூட்டம் காலதாமதமாக நடந்து முடிந்ததால் புதுச்சேரியில் உள்ள அனைத்துக் கலைக் கல்லூரிகளிலும் ஏராளமான இடங்கள் மாணவர் சேர்கை நடைபெறாமல் காலியாக உள்ளன. தகுதியுள்ள பலர் விண்ணப்பித்தும் இடம் கிடைக்காததால் மாணவர்களின் ஓராண்டு கல்வி வீணாகியுள்ளது. எனவே, அரசு காலியாக உள்ள இடங்களில் விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு இடம் அளிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10) பாரா மெடிக்கல் மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் கல்வி உதவித் தொகை வழங்க அரசாணை வெளியிட்டும் இதுவரையில் வழங்கப்படவில்லை. எனவே, அரசு உடனடியாக அரசாணைப்படி பாரா மெடிக்கல் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tuesday, December 07, 2010

சமூகப் புரட்சியாளர் அம்பேத்கர் 54-ஆவது நினைவு தினம்: மாலை அணிவித்து மரியாதை!

சமூகப் புரட்சியாளர் அம்பேத்கர் 54-ஆவது நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி சட்டப்பேரவை எதிரேயுள்ள அவரது சிலைக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமையில் கூட்டமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழு உறுப்பினர்கள் சீ.சு.சாமிநாதன், ப.மார்கண்டன், கலைவாணன், காளிதாஸ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் நிறுவுநர் சதீஷ் (எ) சாமிநாதன் தலைமையில் தாகூர் அரசுக் கலைக் கல்லூரி, மோதிலால் நேரு அரசு தொழில் நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் சார்பில் மாணவர்கள் அம்பேத்கருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு ஆர்ப்பாட்டம் - வீடியோ!



Monday, December 06, 2010

டிசம்பர் 6 - பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்!

பாபர் மசூதி இடிக்கப்ப்பட்ட டிசம்பர் 6 அன்று, புதுச்சேரி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் காலை 10 மணியளவில், சுதேசி பஞ்சாலை அருகில் கண்டன தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக தலைமைக் கழகப் பேச்சாளர் புதுமடம் அணிஸ் தலைமைத் தாங்கினர். மாவட்ட துணைத் தலைவர் ஹாபீஸ் முஹம்மது புஹாரி தொடக்கவுரை ஆற்றினார். மாவட்ட தலைவர் எம்.ஏ.அஷ்ரப் (எ) ரஹமத்துல்லா, மாவட்ட செயலாளர் ஒய்.பலுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முஹம்மது சலீம், கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பளார் கோ.அ.ஜெகன்நாதன், சிங்காரவேலர் முன்னேற்ற கழகத்
தலைவர் கோ.செ.சந்திரன், புதுவை கிருஸ்துவர் கூட்டமைப்பு தலைவர் சாமி ஆரோக்கியசாமி ஆகியோர் கலந்துக் கொண்டு கருத்துரை உரையாற்றினர்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் கண்டன உரையாற்றினார்.

முடிவில் தமுமுக மாவட்ட பொருளாளர் ஜெ.காஜா கமால் நன்றியுரை கூற ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கீழ்காணும் கோரிகைகள் முன்வைக்கப்பட்டன:

1. பாபர் மசூதி நிலம் தொடர்பான அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் விரைந்து முடிக்க வேண்டும்.

2. ரெபரேலி நீதிமன்றத்தில் நடக்கும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு விசாரணையை விரைவுப்படுத்த வேண்டும்.

3. பாபர் மசூதி இடிக்கப்பது குறித்த லிபரான் ஆணையம் விசாரித்து குற்றம்சாட்டிய அத்வானி உள்ளிட்ட 68 பேர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tuesday, November 23, 2010

சென்னையில் ‘அயோத்தி தீர்ப்பும் மதசார்பின்மையும்’ – கருத்தரங்கம்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் வரும் நவம்பர் 25 அன்று சென்னையில் “அயோத்தி தீர்ப்பும் மதசார்பின்மையும் – கருத்தரங்கம்” நடைபெற உள்ளது.

இக்கருத்தரங்கம் சென்னை தியாகராயர் நகரில் உள்ள பி.டி.தியாகராயர் அரங்கில் (கண்ணதாசன் சிலை அருகில்) 25.11.2010 வியாழனன்று, மாலை 6.00 மணியளவில் நடைபெறுகிறது.

தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் தலைமைத் தாங்குகிறார். தமுமுக தென் சென்னை மாவட்டத் தலைவர் ஜனாப் ஜெ.சீனி முகமது வரவேற்புரை ஆற்றுகிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கோ.முத்துக்கிருஷ்ணன், கிறிஸ்துவர் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் அருட்திரு ஜேவியர் அருள்ராஜ், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

தமுமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜனாப் முகமது அபுபக்கர் (எ) கோரி நன்றியுரை கூறுகிறார்.

இக்கருத்தரங்கத்தை தென் சென்னை மாவட்ட தமுமுக ஏற்பாடு செய்துள்ளது.

தொடர்புக்கு: 9710391138, 9841632184.

Wednesday, November 17, 2010

தமிழ்ப் பாடத்தை நீக்கியதைக் கண்டித்து மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநோன்பு போராட்டம்!

தலைவர்களுடன் பேச்சுவார்த்தை...
புதுச்சேரி, தாகூர் கலைக் கல்லூரியில் இளங்கலைப் பொருளாதாரப் பாடப் பிரிவில் தமிழ் பாடத்தைக் கட்டாயப் பாடமாக அறிவிக்க கோரி புதுச்சேரி தாகூர் கல்லூரி மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் 11.11.2010 வியாழக்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாநோன்புப் போராட்டத்தை நடத்தினர். இறுதியில், புதுச்சேரி பல்கலைகழகப் பதிவாளர் உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தை 12.11.2010 மதியம் முடித்துக் கொண்டனர். 

புதுச்சேரி தாகூர் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலைப் பொருளாதாரப் பாடப் பிரிவில் தமிழ்ப் பாடம் நீக்கப்பட்டதாக புதுச்சேரி பல்கலைக்கழகம் அண்மையில் அறிவித்தது. இதைத் தொடர்ந்து மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியதால், தமிழ் பாடம் விருப்பப் பாடமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்ப் பாடத்தை கட்டாயப் பாடமாக அறிவிக்க கோரி தாகூர் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநோன்பில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தில் நடந்த இந்தப் போராட்டத்தைப் பல்வேறு கட்சி மற்றும் அமைப்புத் தலைவர்கள் ஆதரித்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை வாழ்த்தினர்.

பின்னர், இதுகுறித்து கல்லூரி முதல்வர் முனைவர் பாபு ராவ் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகப் பதிவாளர் லோகநாதன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் கட்சி, அமைப்புத் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் நாரா கலைநாதன், பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஆனந்தராமன், ம.தி.மு.க. மாநில அமைப்பாளர், முன்னாள் அமைச்சர் நா.மணிமாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைப்புச் செயலாளர் பாவாணன், செயலாளர் ப.அமுதவன், மீனவர் விடுதலை வேங்கைகள் மாநில அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழறிஞர் மா.லெ.தங்கப்பா,  தனித்தமிழ் இயக்கத் தலைவர் தமிழ்மல்லன், கலை இலக்கியப் பெருமன்ற தலைவர் எல்லை.சிவக்குமார், செயலாளர் பொறியாளர் தேவதாஸ், மக்கள் விழிப்புணர்ச்சி இயக்கச் செயலாளர் சரவணன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நாராயணசாமி,  புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு நிறுவநர் சதீஷ் (எ) சாமிநாதன், முற்போக்கு மாணவர் கழகத் தலைவர் கெளதம பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

பேச்சுவார்த்தையின் முடிவில், பல்கலைக்கழகப் பதிவாளர் லோகநாதன் கடந்த காலத்தில் இருந்தது போலவே தமிழ் ஒரு பாடமாக முதலாண்டு, இரண்டாமாண்டு பொருளதாரப் பிரிவில் தொடரும் என உறுதியளித்தார். அதனை எழுத்து மூலம் கல்லூரி முதல்வருக்கு அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் உண்ணாநோன்பை முடித்துக் கொண்டனர்.

இப்போராட்டத்தை புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு நிறுவநர் சதீஷ் (எ) சாமிநாதன் ஒழுங்கமைத்தும், இரவுப் பகல் பாராமல் மாணவர்களோடு இருந்தும் வெற்றிக்குப் பாடுபட்டது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியில் பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு பேரணி!

பழங்குடியின மக்கள் பேரணி...
புதுச்சேரியில் பழங்குடியின மக்கள் கூட்டமைப்பினர், வேலைவாய்ப்பில் முறையான இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10.11.2010  புதன்கிழமையன்று பேரணி நடத்தினர்.

பேரணி சுதேசி பஞ்சாலை அருகிலிருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக சட்டப் பேரவையை அடைந்தது. பின்னர் கோரிக்கை மனுவை, சட்டப் பேரவையில் உள்ள சமூக நலத்துறை அமைச்சர் அலுவலகத்தில், அமைச்சர் மு.கந்தசாமி அவர்களிடம் அளித்தனர்.

மனு விவரம்: புதுச்சேரியிலுள்ள பழங்குடியினரை அட்டவணை பழங்குடி என அங்கீரிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் என வரையறை செய்துள்ள நிலையில், வேலைவாய்ப்பில் முறையான இடஒதுக்கீடு வழங்க வேண்டும். வரும் சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் அவர்களுக்கான தனி நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடியினருக்கு இலவச மனைப்பட்டாவுடன் கூடிய தொகுப்பு வீடுகளை கட்டித்தர வேண்டும். அவர்கள் வாழும் பகுதியில் குடிநீர், மின்வசதி மற்றும் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் கந்தசாமி மனுவை பெற்றுக்கொண்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். புதுச்சேரி மாநில பழங்குடியின கூட்டமைப்பு தலைவர் கே.ராம்குமார் தலைமைத் தாங்கினார். கூட்டமைப்பு நிர்வாகிகள் சுந்தர், ஏ.மனோகரன், எஸ்.புருஷோத்தமன், எம்.ஏகாம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பாளர் கோ.அ.ஜெகன்நாதன், பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு தலைவர் பொன்னுரங்கம், அகில இந்திய பார்வட் பிளாக் கட்சியின் பொதுச்செயலர் உ.முத்து, புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவநர் சதீஷ் (எ) சாமிநாதன், கிறிஸ்துவர் கூட்டமைப்பு தலைவர் சாமி ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

பேரணியில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

Wednesday, November 10, 2010

மூர்த்திக்குப்பம் துறைமுகத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஆளுநரிடம் நேரில் வலியுறுத்தல்!

மணல் திட்டு...

அழகிய கடற்கரை..மணல் திட்டு...

கடற்கரையில் மீனவர்களின் படகுகள்...

1970-ஆம் ஆண்டின் சர்வே வரைபடத்தில் மணல் திட்டு...

சுனாமிக்கு 5 நாட்களுக்குப் பின்னுள்ள செயற்கைக்கோள் வரைபடம்..

செயற்கைக்கோள் வரைபடத்தில் மணல் திட்டு...

நல்லாட்சிக்கான கூட்டமைப்பு சார்பில் இன்று (10.11.2010) மதியம் 1.00 மணியளவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மேதகு இக்பால் சிங் அவர்களை புரபீர் பேனர்ஜி, (பாண்டிகேன்), சி.எச்.பாலமோகனன், (புதுச்சேரி மக்கள் பாதுகாப்புக் குழு), கோ.சுகுமாரன், (செயலர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு), மோகனசுந்தரம், (இந்திய சமூக செயல்பாட்டுப் பேரவை), எஸ். இராமச்சந்திரன் (புதுச்சேரி அறிவியல் கழகம்), கோ.சத்தியமூர்த்தி,  (கவுன்சிலர், மதிகிருஷ்ணாபுரம்) ஆகியோர் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனு விவரம்:

புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறையினர் பாகூர் கொம்யூன், மூர்த்திக்குப்பத்தில் உள்ள முள்ளோடை வாய்க்காலில் மீன்பிடி துறைமுகம் ஒன்றை கட்டி வருகின்றனர். சுனாமி நிதியில் இருந்து இந்த துறைமுகம் கட்டப்படுகிறது. இந்த மீன்பிடி துறைமுகம் முள்ளோடை வாய்க்காலையும் கடலையும் இணைத்து, அதன் வழியே படகுகள் வந்து போகும்படி கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நீண்ட காலமாக அங்கு கடலையும், வாய்க்காலையும் பிரிக்கும் மணல் திட்டு ஒன்றை இடித்திட பொதுப்பணித் துறையினர் முடிவு செய்து, தற்போது பாதி மணல் திட்டை அப்புறப்படுத்தி உள்ளனர்.

இந்த மணல் திட்டை அப்புறபடுத்துவது மிகப் பெரிய அழிவைத் தரும். இதனால், முள்ளோடை வாய்க்காலோடு இணைந்துள்ள பல்வேறு நீர்நிலைகள் உப்பு நீராகும் ஆபத்துள்ளது. இதனால், புதுச்சேரி – தமிழகப் பகுதி மக்களின் வாழ்வதராங்கள் முற்றிலும் அழிந்துப் போகும். குறிப்பாக அங்குள்ள நீராதாரத்தை நம்பியிருக்கும் 400 ஏக்கர் நிலத்தில் நடந்து வரும் விவசாயம், 15 ஆயிரம் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதோடு, சோழர் காலம் தொட்டு இருந்து வரும் ஏரி, குளங்கள் அழிந்துப் போகும் நிலை ஏற்படும். சுனாமியின் போது இந்த வாய்க்கலுக்கு 3 கி.மீ. தொலைவிலுள்ள கடலூர் கடுமையாக பாதிக்கப்பட்ட போது, இந்த மணல் திட்டு இருந்த காரணத்தால் இப்பகுதியில் எந்த பதிப்பும் ஏற்படவில்லை. மேலும், இத்துறைமுகத்தினால், கடலூர் பெண்ணையாற்றின் முகத்துவாரம் அடைந்து போய் வெள்ளம் உண்டாகும் அபாயம் உள்ளது.

பொதுப்பணித் துறையினர் அங்கு மணல் திட்டே இல்லை எனவும், மீனவர்கள் தங்கள் படகுகளை முள்ளோடை வாய்க்கால் கரையில் நிறுத்தி வைத்து மீன்பிடித்தனர் என்றும், கடந்த 2004-ல் சுனாமியின் போது மணல் திட்டு உருவானது எனவும் பொய்யான தகவல்களை கூறி, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதிப் பெற்றுள்ளனர். ஆனால், அந்தப் பகுதி மக்கள் அங்கு மணல் திட்டு நீண்ட காலமாக இருந்து வந்ததை உறுதியாக கூறுகின்றனர். மீனவர்கள் அங்கு படகுகளை நிறுத்தி வைத்ததாக பொதுப்பணித் துறையினர் கூறுவது பொய் என்றும் கூறுகின்றனர். அதோடு இது தொடர்பான பல வரைபடங்கள் அங்கு மணல் திட்டு நீண்ட காலமாக இருந்து வருவதை உறுதி செய்கிறது. மணல் திட்டு இல்லை எனக் கூறி, சட்ட விதிப்படி நடத்த வேண்டிய சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு குறித்த பொதுமக்கள் கருத்தறியும் கூட்டத்தைக்கூட பொதுப்பணித் துறையினர் நடத்தவில்லை.

ஏற்கனவே, கடலை மறித்து தேங்காய்த்திட்டு துறைமுகம் கொண்டு வந்ததால், அதற்கு வடக்கே உள்ள கடலோர கிராமங்கள் கடல் அரிப்பில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கடல் அரிப்பை சீர் செய்யவே அரசிடம் உருப்படியான திட்டமும், போதிய நிதியும் இல்லை. தற்போது அதே போன்றதொரு துறைமுகத்தைக் கொண்டு வருவது மேலும் கடலோர கிராமங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த துறைமுக திட்டத்திற்காக போதிய ஆய்வினை அரசு செய்யாததோடு, சுற்றுச் சூழல் பெரிதும் பாதிக்கும் வகையில் திட்டமிட்டுள்ளது. மத்திய சுற்றுச் சூழல் துறை அனுமதி அளிக்கும் போதே எந்தவித மணல் திட்டையும் சேதப்படுத்த கூடாது, நல்ல நீர் உப்பு நீராகும் வகையில் எதையும் செய்யக் கூடாது எனக் கூறியுள்ளது. மேலும், கடல் அரிப்பை தடுக்க கல் கொட்டுவதோ, கடலில் சுவர் கட்டுவதோ கூடாது எனவும் மத்திய சுற்றுச் சூழல் துறை பல முறை அறிவுறுத்தி உள்ளது. மேலும், தமிழகம், புதுச்சேரியில் கடல் அரிப்பு பற்றியும், கடற்கரையை பாதுகாப்பது குறித்தும் அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு செய்துக் கொண்டிருப்பதையும் இங்கு சுட்டிக் காட்டுகிறோம். கடலில் இயந்திரம் மூலம் மணலை அள்ளுவது குறித்து கடல்சார் கண்காணிப்பு எதுவும்கூட மேற்கொள்ளப்படுவது இல்லை.

இந்நிலையில், கடந்த 08.11.2010 அன்று, கிராம விவசாயிகள், பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் கூட்டாக தலைமைச் செயலர் சந்திரமோகன், சுற்றுச் சூழல் துறை சிறப்புச் செயலர் தேவநீதிதாஸ் ஆகியோரை சந்தித்து இதுகுறித்து முறையிட்டோம். அப்போது தேவநீதிதாஸ் அவர்கள் இத்திட்டத்தை மறுஆய்வு செய்யும் வரையில் வேலையை நிறுத்தி வைக்குமாறு அருகிலிருந்த பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளரிடம் கூறினார். ஆனால், தற்போது முள்ளோடை வாய்க்காலில் தொடர்ந்து இயந்திரம் மூலம் மணல் அள்ளும் வேலை நடந்து வருகிறது. இதனால், மேற்சொன்ன மணல் திட்டு முற்றிலும் அழியும் ஆபத்துள்ளது.

ஏற்கனவே கடல் அரிப்பால் கடலோர கிராமங்கள் பாதிக்கப்பட்டது குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத பொதுப்பணித்துறையினர், தற்போது மீண்டும் ஒரு துறைமுக திட்டத்தைக் கொண்டு வந்து மேலும் அழிவைத் தருவது நல்லதல்ல. பொதுப்பணித்துறையினர் நீர் நிலைகளைப் பாதுகாக்க நிறைய நிதி ஒதுக்கீடு செய்து, ஏரி பாதுகாப்புச் சங்கங்களை உருவாக்கி ஏரி, குளங்களை புனரமைந்துள்ளனர். தற்போது அவற்றை கெடுக்கும் வகையில் செயல்படுவது தவறானது.

இத்திட்டத்தினால் தமிழகப் பகுதியும் பாதிக்கப்படுவதால் கடலூர் மாவட்ட ஆட்சியரையும் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம்.

எனவே, தாங்கள் உடனடியாக இதில் தலையிட்டு, பெரும் அழிவைத் தரும் இந்த துறைமுகத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும், சுனாமி நிதியில் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கும் வகையில் இத்திட்டத்தைக் கொண்டு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடவும் வேண்டும் எனக் கோருகிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக் கொண்ட துணைநிலை ஆளுநர் அவர்கள் உடனடியாக இதுகுறித்து புதுச்சேரி அரசிடம் அறிக்கை அளிக்குமாறுகோருவதாக கூறினார். மேலும் அரசு அதிகாரிகளிடம் பேசி உடனடியாக துறைமுகப் பணியை நிறுத்த நடவடிக்கை எடுக்க உறுதியளித்தார்.

மனுவில் கையெழுத்திட்டுள்ள நல்லாட்சிக்கான கூட்டமைப்பிலுள்ள அமைப்பினர்: 

1. இன்டேக், 2. பீப்பில்ஸ் பல்ஸ், 3. புதுச்சேரி அறிவியல் கழகம், 4. புடண்கோ, 5. பூவுலகின் நண்பர்கள், 6. மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, 7. பாண்டிகேன், 8. செம்படுகை நனீரகம், 9. புதுச்சேரி மக்கள் பாதுகாப்புக் குழு.