Saturday, September 15, 2007

பழ.நெடுமாறன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து கொண்டார்.

பா.ம.க. நிறுவநர் மருத்துவர் இராமதாசு உறுதிமொழியை ஏற்று பழ.நெடுமாறன் இன்று (15-07-2007) மதியம் காலவரையற்ற உண்ணாவிரதத்தைப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள இராணுவத்திற்கும் போர் நடந்து வருவதைத் தொடர்ந்து, அங்கு வாழும் ஈழத்தமிழர்கள் உணவு, மருந்து கிடைக்காமல் பட்டினியால் வாடி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் செயல்படும் தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு தமிழகமெங்கும் ரூ.1 கோடி மதிப்புள்ள உணவுப் பொருட்கள், மருந்துகள் திரட்டினர். அதனை யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்பி வைக்க அனுமதி கோரினர். ஆனால், அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.

இதனிடையே, பா.ம.க. நிறுவநர் மருத்துவர் இராமதாசு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஆகியோர் உணவு, மருந்துகள் அனுப்ப அனுமதி அளிக்க மத்திய அரசை வலியுறுத்தினர். அதன்பின்னும், மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில், தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் நாகப்பட்டினம், இராமேசுவரம் ஆகிய பகுதிகளின் கடல் வழியாக படகு மூலம் சேகரித்த உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணம் செல்ல தியாகப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.

இதன்படி, இரண்டு குழுவினர் 07-09-2007 முதல் 11-09-2007 வரை பரப்புரை மேற்கொண்டனர். திருச்சியிலிருந்து நாகை வரையிலும், மதுரையிலிருந்து இராமேசுவரம் வரையிலும் வாகனப் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் ஏராளமான வாகனங்களில் தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்றனர்.

இதன்படி, 12-09-2007 அன்று காலை 10 மணியளவில் பழ.நெடுமாறன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட பல்வேறு இயக்கத்தினர் உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றுடன் நாகப்பட்டினம் கடற்கரை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அப்போது தமிழகப் போலிசார் நாகைக் கடலோர மீனவர்களிடம் படகுகள் தரக் கூடாது என்று மிரட்டியது தெரிய வந்துள்ளது. இதனைக் கண்டித்து, பழ.நெடுமாறன் சாகும்வரை காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார். போலிசார் பின்னர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தனர். பின்னர், அனைவரும் மாலையில் விடுதலைச் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பழ.நெடுமாறன் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். தமிழகப் போலிசார் உண்ணாவிரதப் போராட்டத்தை தடுக்கும் நோக்கத்தோடு 13-09-2007 உண்ணாவிரதப் பந்தலைப் பிரித்துப் போட்டு, அத்துமீறி நடந்துள்ளனர். இதனைப் படம்பிடித்த ஒரு தனியார் தொலைக்காட்சி புகைப்படக்காரரை தாக்கியுள்ளனர்.

இதனிடையே, தமிழக முதல்வர் கருணாநிதி 14-09-2007 அன்று இரவு பழ.நெடுமாறன் அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். அக்கடித விவரம்:

பேரன்புடைய நெடுமாறன் அவர்களுக்கு,
வணக்கம்.

ஈரோடு, சேலம் ஆகிய ஊர்களுக்கு பயணப்பட்டுக் கொண்டிருக்கும் நான் ரயிலில் அமர்ந்து இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

நீங்கள் மேற்கொண்டிருக்கும் இந்த உண்ணாநிலைப் போராட்டம், உங்கள் உடல்நலத்துக்கு ஏற்றதல்ல. தாங்கள் எடுத்துள்ள முயற்சிகளை தமிழக அரசின் சார்பில் வெற்றி பெற வைத்திட நானும் முயற்சி மேற்கொள்கிறேன். இந்த வார்த்தையை ஏற்று தங்களின் உண்ணாநோன்பினை உடன் நிறுத்த வேண்டிக் கொள்கிறேன்.

ஈரோட்டிலிருந்து இரண்டு நாளில் திரும்பிய உடன் சந்தித்துப் பேசுவோம். என் வேண்டுகோளை நிறைவேற்றக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
மு. கருணாநிதி.


இக்கடிதத்தை ஏற்காத பழ.நெடுமாறன் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். தமிழக முதல்வர் கருணாநிதிக்கு 14-07-2007 அன்று பதில் கடிதம் எழுதினார். அதன் விவரம்:

முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.

13.09.2007 நாளிட்ட தங்கள் மடல் கிடைக்கப்பெற்றேன்.

என் உடல்நிலை குறித்த அக்கறையுடனும் என் கோரிக்கை குறித்த பரிவுடனும் தாங்கள் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகளுக்காக என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிங்கள அரசின் அறிவிக்கப்படாத பொருளாதார முற்றுகைக்கு உள்ளாகி பட்டினியிலும் நோயிலும் அல்லற்படும் 5 லட்சம் யாழ்ப்பாண தமிழர்களுக்கு வழங்கிட தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் திரட்டப்பட்ட சற்று ஏறக்குறைய 1 கோடிரூபாய் மதிப்புள்ள உணவு மற்றும் மருந்துப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் வழியாக அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பதில் தராமல் இந்திய அரசு 7 மாத காலமாக இழுத்தடித்து வருவதனை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விழைகிறேன்.

தாங்கள் சேலம், ஈரோடு சுற்றுப்பயணத்தை முடித்து தலைநகரம் திரும்பிய பின்னர் இது குறித்து ஆவன செய்வீர்கள் என நம்புகிறேன்.

இந்த அணுகுமுறை அடிப்படையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு தங்களை சந்தித்து பேச அணியமாக உள்ளது.

எனவே இந்நிலையில் என் கால வரம்பற்ற பட்டினிப் போராட்டத்தைத் தொடர வேண்டிய தேவை உள்ளது என்பதனை தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்கள் அன்புள்ள
பழ. நெடுமாறன்.


இச்சூழலில், தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சியினரும் (அ.தி.மு.க., காங்கிரஸ், தி.மு.க. தவிர), இயக்கத்தினரும் பழ.நெடுமாறன் உடல்நிலையைக் கணக்கில் கொண்டு, அவரை உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டுமென வலியுறுத்தினர்.

இன்று (15-09-2007) மதியம் பா.ம.க. நிறுவநர் மருத்துவர் இராமதாசு, உண்ணாவிரதம் நடக்கும் இடத்திற்குச் சென்று பழ.நெடுமாறன் அவர்களைச் சந்தித்தார். பா.ம.க. தலைவர் கோ.க.மணி உடனிருந்தார்.

அப்போது அவர் முதல்வர் கருணாநி்தி அளித்த உறுதிமொழியைத் தெரிவித்து, உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள கேட்டுக் கொண்டார். அவரிடம் சில விளக்கங்களைக் கேட்டறிந்த பழ.நெடுமாறன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். உடனே, மருத்துவர் இராமதாசு அளித்த பழச்சாறை அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். கடந்த 4 நாட்களாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

அப்போது ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உடனிருந்தார். தமிழக அளவில் ஏராளமான தமிழ் உணர்வாளர்கள் திரண்டிருந்தனர்.

5 comments:

Anonymous said...

those people who published the photos of Charriot festival of Nallur Temple were unable to publish photos of Jaffna citizens of Hunger??????
come on wake up people.....give us a break

வெற்றி said...

மிகவும் மகிழ்ச்சியான செய்தி. இப்போதுதான் மனம் நிம்மதியாக இருக்கிறது. இச் செய்தி அறியும் வரை மனம் பதைபதைத்துக் கொண்டிருந்தது.

Anonymous said...

நாம் உங்கள் அன்பிற்கு என்ன கைமாறு செய்யப்போகிறோம்? தமிழீழம் பரிசாகத் தருவோம்!!!!


ஒரு ஈழ‌த் த‌மிழ‌ன்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நல்ல செய்தி!
நன்றி

மஞ்சூர் ராசா said...

எப்படியாவது உணவு, மற்றும் மருந்துகள் விரைவில் ஈழத்தமிழர்களிடம் சேர்க்கப்படவேண்டும்.