Saturday, October 09, 2010

கறைபடிந்த நீதித்துறையும், போராட்டமும்.. (1)

‘மை லாட்’ என அழைப்பதன் மூலம் கடவுளுக்குச் சமமாக கருதப்பட்ட நீதிபதிகள் ஊழல் நிறைந்தவர்களாக இருப்பது நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சீர்குலைத்து வருகிறது. நீதிபதிகளின் ஊழல் குறித்து வெளிப்படையாக பேசுவதையே நீதிபதிகள் குற்றம் என எண்ணுவது நீதிபதிகளின் நேர்மையை கேள்விக்குள்ளாகுகிறது.

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பி.டி.தினகரன் புறம்போக்கு நிலங்களையும், தலித் மக்களின் நிலங்களையும் சட்டத்திற்குப் புறம்பாக அபகரித்து வைத்திருந்ததற்காகவும், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சென் பெரும் ஊழலில் ஈடுபட்டதற்காகவும் இருவரையும் பணிநீக்கம் செய்வதற்கான நாடாளுமன்றத்தின் முன் குற்றச்சாட்டும் (Impeachment), அதன்மீதான விசாரணையும் நிலுவையில் உள்ளது. அதேபோல், காசியாபாத்தில் நீதிபதிகள் அரசு ஊழியர்களின் கோடிக்கணக்கான ரூபாய் நிதியை கைடால் செய்ததும், சட்டீஸ்கரில் ஒரு நீதிபதி வீட்டின் முன்பு பையில் பல லட்சம் ரூபாய் பணம் கிடந்ததும் நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்பதை அம்பலப்படுத்தி உள்ளது. 

நீதித்துறையின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கும் இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது நடந்து வரும் “நீதிமன்ற அவமதிப்பு” வழக்கு ஒட்டுமொத்த நீதித்துறையின் நீதி வழங்கும் முறையையே காலியாக்கி விடும் போல் உள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை எதிர் கொண்டிருக்கும் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்திலும், தில்லி உயர்நீதிமன்றத்திலும் 26 ஆண்டு காலமாக பணியாற்றி வரும் மூத்த வழக்கறிஞர். மேலும், 1991 முதல் நீதித்துறையில் நிலவும் ஊழலுக்கு எதிராகவும், நீதிமன்ற பொறுப்புரிமைக்காகவும் (Judicial Accountability) போராடி வருபவர். இவர் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூஷனின் மகன் என்பதை அறிவோம்.

பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு ஏன்? கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ல் வெளிவந்த ‘டெகல்கா’ இதழில் ‘கடைசியாக இருந்த 16 தலைமை நீதிபதிகளில் பாதி பேர் ஊழல்வாதிகள். இதை எங்களால் நிரூபிக்க முடியாது. பூஞ்சி, ஆனந்த், சபர்வால் ஆகியோருக்கு எதிராக எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. அவற்றின் அடிப்படையிலேயே அவர்களை நீக்க கோரினோம்’ என பேட்டி அளித்தது தான் காரணம்.

மேலும் அவர் ‘ஊழல் நீதிபதிகளை நீக்க பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் குற்றச்சாட்டு (Impeachment) நடைமுறை சத்தியமற்றது. அதற்கு 100 எம்.பி.க்களின் கையெழுத்து தேவைப்படுகிறது. ஆனால், இவற்றை பெற முடிவதில்லை. ஏனென்றால், பல எம்.பி.க்களின் தனிப்பட்ட அல்லது அவர்களது கட்சி சார்ந்த வழக்குகள் இந்த நீதிபதிகளின் முன்பு நிலுவையில் உள்ளன. நீதிபதி பல்லாவிற்கு எதிராக பாராளுமன்றத்தின் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் பா.ஜ.க. கையெழுத்திட மறுத்துவிட்டது. அந்த நீதிபதி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே.அத்வானியை விடுதலை செய்தவர். அந்த நீதிபதி நொய்டாவில் ரூ. 4 கோடி மதிப்புள்ள நிலத்தினை வெறும் 4 லட்சம் ரூபாய்க்கு பெரும் நில வணிகர் ஒருவரிடம் வாங்கியது தான் அவர் மீதான குற்றச்சாட்டு. அந்த நில வணிகர் சம்பந்தப்பட்ட வழக்குகள் பல அந்த நிதிபதியின் கீழுள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தன.

அடுத்து ரிலையன்ஸ் பவர் தொடர்பானது. அதாவது அவரது மகன் ரிலையன்ஸ் பவரின் வழக்கறிஞராக இருந்தார். நீதிபதி பல்லா லக்னோவில் நீதிபதியாக இருந்த போது இதுகுறித்து ஒரு தனி நீதிமன்றத்தை (Special Bench) அமைத்தார். அவர் ஒரு நீதிபதி வீட்டில் இரவு 11 மணி வரை நடந்த வழக்கு விசாரணையில் அமர்ந்துக் கொண்டு அவர்களுக்கு சாதகமாக தடை உத்தரவு கொடுத்தார். நாங்கள் நீதிபதி பல்லா மீது நடவடிக்கை எடுக்கும்படி தலைமை நீதிபதி சபர்வாலிடம் கேட்டோம், அவர் மறுத்துவிட்டார்.

அதேபோல், வீஜேந்தர் ஜெயின் தன் பேத்தியை தன் வீட்டில் திருமணம் செய்துக் கொடுத்த ஒருவரது வழக்கை நடத்தி அவருக்கு சாதமாக தீர்ப்பு வழங்கினார். இதுபற்றி மிக குறிப்பான புகார்கள் கொடுத்தும் இந்திய தலைமை நீதிபதி இதுகுறித்து உள்விசாரணை நடத்தவில்லை. அந்த நீதிபதிகள் அனைவரும் தலைமை நீதிபதியானார்கள். பல்லா இன்னமும் ராஜஸ்தானின் தலைமை நீதிபதியாக உள்ளார். வீஜேந்தர் ஜெயின் பஞ்சாப் மற்றும் அரியானா தலைமை நீதிபதியானார்.

நீதிபதி கப்பாடியா ஒரிசாவிலுள்ள நியம்கிரி சுரங்க குத்தகை வழக்கை தீர்மானித்தார். வேதாந்தா நார்வே அரசால் கருப்புக் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதால் அதற்கு குத்தகை கொடுக்க முடியாது என்று கூறினார். பின்னர், வேதாந்தாவின் கீழுள்ள வெளிப்படையான பட்டியலில் (Publicly Listed) உள்ள ஸ்டெர்லைட் கம்பெனிக்கு அந்த குத்தகையைக் கொடுத்தார். அது வெளிப்படையான பட்டியலில் உள்ளது ஏன் தெரியுமா, அதில் எனக்கு பங்கு உள்ளது என  நீதிபதி கப்பாடியா கூறினார். அதனால் தான் அதற்கு ஆதரவாக அவர் உத்தரவு பிறப்பித்தார்.

நீதிபதிகள் தங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்பட்டு வழக்கு நடத்துவதற்கு எதிராக சட்டம் உள்ளது. ஆனால், அவர்கள் அதனை சுலபமாக தாண்டிவிடுகின்றனர். நீங்கள் இதற்கு எதிராக புகார் செய்ய முடியாது, ஏனென்றல் அது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும்’ என நீதித்துறையில் நிலவும் எல்லையற்ற ஊழல் பற்றி மிகத் தெளிவாகவும், ஆழமாகவும் அந்த பேட்டியில் பிராசாந்த் பூஷன் கூறியிருந்தார். நீதிபதி கப்பாடியா தற்போது இந்தியாவின் தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. 

டெகல்காவிற்கு அளித்த இந்த பேட்டியால் பிரசாந்த் பூஷன் தற்போது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு வருகிறார். இதற்காக ஒருவேளை அவர் தண்டிக்கப்படலாம். ஆனால், உச்சநீதிமன்றம் தனக்கு எதிராக ஒரு “பண்டோரா பாக்சை” திறந்துவிட்டது. இந்த வழக்கில், பிராசந்த் பூஷன் மற்றும் மகனைக் காப்பாற்ற அவரது தந்தையார் சாந்தி பூஷன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களில் ஆதாரத்தோடு கூறப்பட்டுள்ள நீதிபதிகளின் ஊழல்கள் “நீதித்துறையைக் கறைபடிய” செய்துள்ளது. அவற்றைப் பிறகுப் பார்ப்போம்.

தொடரும்...

நன்றி: மக்கள் உரிமை 

1 comment:

வனம் said...

வணக்கம் சுகுமாரன்

மிகவும் தேவையான கட்டுரை.

இந்த விடயங்கள் எல்லாம் இணையத்தில்தான் கிடைக்கும்.

தொடர்ந்து எழுதுங்கள்.