Thursday, October 14, 2010

வி.ஆர்.கிருஷ்ணய்யர் - மனித உரிமை ஆர்வலர்கள் சந்திப்பு!

நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் - கோ.சுகுமாரன்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 14.10.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண அய்யரை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் கேரளா மாநிலம் கொச்சினில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண அய்யர் உலக அளவில் புகழ் பெற்ற நீதிபதியாவார். உச்சநீதிமன்றத்தில் அவர் நீதிபதியாக இருந்த போது வழங்கிய தீர்ப்புகள் அடித்தள மக்கள் நலன் நோக்கிலும், மனித உரிமையை உயர்த்திப் பிடிப்பதாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அரசியல் சட்டத்தை மறுஉருவாக்கம் செய்தும், மேலும் செழுமைப்படுத்தியும் அவர் வழங்கிய தீர்ப்புகள் இன்றும் சாதனையாக போற்றப்படுகிறது. அவரது ஈடு இணையற்ற பணியைப் பாராட்டி கொச்சினில் உள்ள சட்டப் படிப்புக்கான தேசிய பல்கலைக்கழகம் (National University of Advanced Studies – NUALS) நேற்றைய தினம் (13.10.2010) அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. அவருக்கு இப்பட்டத்தினை முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் வழங்கியுள்ளார்.

மதுரையிலுள்ள சோக்கோ அறக்கட்டளையின் தலைவர் மகபூப் பாட்சா, உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம், வழக்கறிஞர்கள் ஜின்னா, லெனின், வெங்கடேஷ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் நேற்றைய தினம் கொச்சினில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினோம்.

வரும் நவம்பர் 1-ம் தேதியன்று 96-வது வயதில் அடியெடுத்து வைக்கும் அவர் சோர்வின்றி தொய்வில்லாமல் செயலாற்றுவது ஊக்கமளிப்பதாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. சட்டத்திற்கு அப்பாற்பட்ட வழியில் பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இளைஞர்கள் சீரழிந்து வரும் வேளையில், சட்டப்படியான வழிமுறையில் நிறைய சாதிக்க இடமுண்டு என்ற நம்பிக்கையை அவருடனான சந்திப்பு தந்தது.

குறிப்பு: இந்த சந்திப்பு பற்றி இன்னும் விரிவாக எழுத உள்ளேன். 

No comments: