Thursday, October 21, 2010

ஊழல் அதிகாரி அரிகரன் பணி நீக்கம் : புதுச்சேரி அரசுக்குப் பாராட்டு!

ஊழல் அரிகரன்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன்  21.10.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

பாரதியார் பல்கலைக்கூடத்தின் முன்னாள் முதல்வரும், லலித் கலா மற்றும் சங்கீத நாடக அகாடமியின் சிறப்பு அதிகாரியுமான அரிகரனை பணிநீக்கம் செய்துள்ள புதுச்சேரி அரசின் நடவடிக்கையை மனதார பாராட்டுகிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் உரிமைக் கூட்டமைப்பு தொடர்ந்து நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

1996 முதல் 1999 வரை அரிகரன் பாரதியார் பல்கலைக்கூடத்தின் முதல்வராக இருந்த போது பல்வேறு ஊழல், முறைகேடுகள், கையாடல், நிர்வாக குளறுபடிகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார். இதனால், அவரை பணிநீக்கம் செய்ய வேண்டுமென பல்வேறு கட்சி மற்றும் ஆதரவோடு மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதனால், அப்போதைய அரசு அவரை பாரதியார் பல்கலைக்கூடத்தில் இருந்து லலித் கலா மற்றும் சங்கீத நாடக அகாடமியின் சிறப்பு அதிகாரியாக நியமித்தது.

இது குறித்து அரசு அப்போது பள்ளிக் கல்வித் துறை இயக்குநராக இருந்த தேவநீதிதாஸ் மற்றும் கலெக்டர் ராகேஷ் சந்திரா ஆகியோர் தலைமையில் இரண்டு விசாரணைக் குழுக்களை அமைத்தது. இந்த விசாரணைக் குழூக்கள் முன்பு அரிகரன் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

அதிகாரி தேவநீதிதாஸ் தலைமையிலான விசாரணைக் குழு முன்பு அரிகரன் மீது சுமத்தப்பட்ட 10 குற்றச்சாட்டுகளில் 3 குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளன. அதாவது, அரிகரன் பாரதியார் பல்கலைக்கூடத்தில் முதல்வராக இருந்த போது அங்கு விரிவுரையாளராக பணியாற்றிய தனக்கு நெருக்கமான அன்னபூர்ணா என்பவருக்கு விதிமுறைகளை மீறி மருத்துவ செலவுக்காக ரூபாய் 20 ஆயிரத்து 727 வழங்கியது. விதிமுறைகளுக்கு மாறாக தினக் கூலி ஊழியரை காசாளராக நியமித்து பெரும் நிதி கையாடல் செய்தது. பாரதியார் பல்கலைக்கூட கட்டிடங்களுக்கு புதிதாக கூறை அமைத்ததிலும், பழைய கூறைகளை மாற்றியதிலும் அரசு முன் அனுமதியின்றி தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததில் முறைகேடு ஆகிய மேற்கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இந்த விசாரணை அறிக்கையை ஏற்றுக் கொண்டு கடந்த 14.10.2010 அன்று கலைப் பண்பாட்டுத் துறை அமைச்சரும், பாரதியார் பாரதியார் பல்கலைக்கூடத்தின் சேர்மனுமான மாண்புமிகு ஷாஜகான் அவர்கள் ஊழல் அதிகாரி அரிகரனை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அரிகரன் வெளிநாட்டில் உள்ளதால் பணிநீக்க உத்தரவினை லாஸ்பேட்டை வாசன் நகரில் உள்ள அவரது வீட்டில் ஒட்டியும், பத்திரிகை மூலம் அறிவிக்கையாக வெளியிட்டும் உள்ளனர். காலம் கடந்த முடிவானாலும் அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இது ஊழல் செய்பவர்கள் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாக அமையும் என நம்புகிறோம்.

மேலும், அரிகரன் கடந்த 2007, 2008 ஆண்டுகளில் அரசின் முன் அனுமதியின்றி வெளிநாடுகளுக்குப் பலமுறை சென்று வந்துள்ளார். அரசு ஊழியர்களின் நடத்தை விதிப்படி ஒரு அரசு ஊழியர் வெளிநாடு செல்ல அரசின் முன் அனுமதி பெற வேண்டும். இதுகுறித்து அரசு நியமித்த ஏ.எப்.டி. பஞ்சாலையின் இணை நிர்வாக இயக்குநர் எஸ்.டி.சுந்தரேசன் முன்பு நடந்த விசாரணையில் அரிகரன் விதிகளை மீறி வெளிநாடு சென்றது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இதன் அடிப்படையில் அரசு உடனடியாக அரிகரன் மீது கிரிமினல் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அரிகரன் லலித் கலா அகாடமியின் சிறப்பு அதிகாரியாக பொறுப்பேற்ற டிசம்பர் 1999 முதல் டிசம்பர் 2009 வரையில் எந்தவித பணியும் செய்யாமல் 30 லட்சத்து 58 ஆயிரத்து 280 ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். இதனால், மக்கள் வரிப் பணம் பெருமளவில் வீணாக செலவிடப்பட்டுள்ளது. எனவே, புதுச்சேரி அரசு அவருக்கு அளித்த சம்பளத் தொகையை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊழல் அதிகாரி அரிகரனை பணிநீக்கம் செய்ய மக்கள் உரிமைக் கூட்டமைப்பு நடத்திய பல்வேறு கட்ட தொடர் போராட்டங்களில் பங்கேற்று ஆதரவுத் தந்த பல்வேறு கட்சி மற்றும் அமைப்புத் தலைவர்களுக்கு இந்நேரத்தில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments: