Saturday, February 09, 2008

கிருஷ்ணவேணி அம்மாவும் அவரது மகனும் பிணம் புதைக்கும் புகைப்படம்...


புதுச்சேரியில் உள்ள சந்நியாசித்தோப்புச் சுடுகாட்டில் பிணம் புதைக்கும் கிருஷ்ணவேணி அம்மாவும், அவரது மகனும் பிணம் புதைக்கும் போது எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளேன்.

கிருஷ்ணவேணி அம்மாவின் மகன் வினோ பிரசாத் புதுச்சேரி லாசுப்பேட்டையிலுள்ள அரசு பள்ளி ஒன்றில் 9-ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிறான். மதிய உணவு இடைவேளையின் போது வீட்டிற்குச் சாப்பிட வந்த அவன், தன் தாய் சிரமப்பட்டு வேலை செய்வதைக் கண்டு, அவருக்கு உதவி செய்யும் நோக்கோடு பிணத்தைப் புதைக்கின்றான். பள்ளிச் சீருடையுடன் அவன் பிணத்தைப் புதைப்பது மனதை வாட்டுகிறது.

06-02-2008 அன்று மதியம் எடுத்து, 07-02-2008 அன்றைய தினகரன் புதுச்சேரி பதிப்பில் வெளியாகியுள்ள புகைப்படம் இது.

மகன் தாய்க்கு ஆற்றும் கடமை இது?

"சாவு வந்தாதான் சமைப்போம்" - அனாதைப் பிணம் புதைக்கும் தலித் பெண்மணியின் துயரம்..

Friday, February 08, 2008

மக்கள் உரிமைக் கூட்டமைப்புக்குப் புதிய இணைய தளம் - கருத்துக்களை வரவேற்கிறோம்!



மக்கள் உரிமைக் கூட்டமைப்புக்கு புதிய இணைய தளம் ஒன்றை உருவாக்கி வருகிறோம். இதற்கான வேலை முழு அளவில் நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கென புதுச்சேரியில் ஒரு எளிய தொடக்க நிகழ்ச்சி நடத்த உள்ளோம்.

தற்போது நான் என்னுடைய வலைப்பூவை அமைப்புச் செய்திகளை வெளியிடப் பயன்படுத்தி வருவதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

மனித உரிமைகள் குறித்து உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை அனைத்தையும் இத்தளத்தில் கிடைக்கும் வகையில் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். மனித உரிமைகள் குறித்த பிரகடனங்கள், சட்டங்கள், தீர்ப்புகள், வழிகாட்டும் உத்தரவுகள்,அறிக்கைகள் என அனைத்து ஆவணங்களும் இத்தளத்தில் வழங்கவும் எண்ணியுள்ளோம்.

மனித உரிமை மீறல்கள் பற்றிய புகார்களை இணைய தளத்தின் வழியாகவே அனுப்ப ஒரு புகார் பெட்டி வடிவமைக்க இருக்கிறோம். இவ்வாறு பெறப்படும் புகார்கள் முறையே விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க தொடர்புடையவர்களுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளோம்.

மனித உரிமை மீறல்கள் நடக்கும் போது அதில் தலையிட்டு தடுப்பதற்கு பொதுமக்கள் பங்கேற்பை தீவிரப்படுத்துவதற்கு உரிய வழிவகை செய்ய உள்ளோம்.

மனித உரிமைச் சார்ந்து வரும் இலக்கியங்கள், புத்தகங்கள் பற்றி அவ்வப்போது தகவல்களும் வெளியிட இருக்கிறோம்.

தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் இத்தளத்தைக் காணலாம்.

இத்தளத்தை மேலும் செழுமைப்படுத்த உங்களின் மேலான கருத்துக்களை எதிர்நோக்குகிறோம்.

"http://www.peoplesrights.in/

Wednesday, February 06, 2008

"சாவு வந்தாதான் சமைப்போம்" - அனாதைப் பிணம் புதைக்கும் தலித் பெண்மணியின் துயரம்..

ப்யூச்சர் இராதா புதுச்சேரியில் வலுவாக உள்ள தலித் அமைப்புத் தலைவர். இவர் தலைமையில் செயல்படும் ‘ப்யூச்சர் தலித் அரசு ஊழியர் அமைப்பும், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படையும் தலித் மக்களின் பிரச்சனைகளை மட்டுமல்ல அனைத்து சமூக அவலங்களையும் எதிர்த்துப் போராடும் பண்பு கொண்டவை.

2003-இல் புதுச்சேரி சட்டமன்ற கூட்டம் நடைபேற்ற போது, சுடுகாட்டில் பிணம் புதைக்கும் பெண்மணி ஒருவருக்கு நிரந்தர வேலை அளிக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை வைத்துப் போராட்டம் நடத்தினர் இவ்வமைப்பினர். அன்றைய தினம் நான் ஊரில் இல்லாததால் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.

ப்யூச்சர் இராதா நடத்தும் எந்த போராட்டமானாலும் அதில் எனக்கு என்று உரிய இடமிருக்கும். அந்த அளவுக்கு அவர் என் மீதும், நான் அவர் மீதும் அளவுகடந்த அன்பும், மரியாதையும் கொண்டுள்ளோம். இன்றுவரை அந்த உறவுத் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

ஊர் திரும்பியவுடன் அந்த பெண்மணியைச் சந்தித்து அவரது நிலைப் பற்றி அறிய வேண்டுமென்று முடிவு செய்தேன்.

நானும், புகைப்படக் கலைஞர் புதுவை இளவேனில் அவர்களும் ஒருநாள் பகல் அப்பெண்மணியைச் சந்திக்க சந்நியாசித்தோப்புச் சுடுகாட்டிற்குச் சென்றோம். சந்நியாசித்தோப்புச் சுடுகாடு என்பது பலகாலமாக அனாதைப் பிணங்களைப் புதைக்கும் இடம். அந்த இடத்தின் பெயரைச் சொன்னாலே அருவருப்பாக மக்கள் எண்ணுவார்கள்.

அங்கிருந்த அந்தப் பெண்மணியைச் சந்தித்து உரையாடினேன். என் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள் பல தரப்பினரைச் சந்தித்துள்ளேன். இன்றைக்கும் மறக்கமுடியாத அவர்களது அவலங்கள் பல நேரத்தில் மன வருத்தத்தைத் தரும். அந்தப் பெண்மணியின் வாழ்க்கை என்னை மிகவும் பாதித்தது.

ஒரு பெண்ணாக இந்த சமூகத்தில் வாழ்வதே சிக்கல் நிறைந்ததாக இருக்கும் காலக்கட்டமிது. இச்சூழலில் ஒரு பெண்மணி தன் குடும்பத்தை நடத்துவதற்காக சுடுகாட்டில் பிணம் புதைத்துப் பிழைக்க வேண்டியிருப்பது எவ்வளவு துயரமானது, கொடுமையானது என்பதைச் சொல்லத் தேவையில்லை. அதுவும் அந்தப் பணியை நிரந்தரமாக்க வேண்டுமென அப்பெண்மணி போராடுவது இச்சமூகத்திற்கு எதை உணர்த்துகிறது என்ற கேள்வியையும் என்னுள் எழுப்பியது.

அவரது துயரமான வாழ்வை வெளியுலகிற்கு தெரியப்படுத்தி அவருக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமெனெ முடிவு செய்து, ‘தலித் முரசு ஆசிரியர் புனிதபாண்டியன் அவர்களைத் தொடர்புக் கொண்டேன். அவர் உடனடியாக அனுப்புங்கள் வெளியிலாம் என்று கூறினார். தலித் முரசு இதழில் விரிவாக அவரது வாக்குமூலம் வெளியானது.

அதைத் தொடர்ந்து தினமணியில் முதல் பக்கத்தில் அப்பெண்மணியின் வண்ணப் புகைப்படத்துடன் செய்தி வெளியானது. அப்போது தினமணியின் ஆசிரியராக இருந்த இராம.சம்பந்தம் அவர்கள் இதை நம்பாமல் பலமுறை செய்தி அனுப்பிய செய்தியாளரை விசாரித்துள்ளார். அதன்பின், பல்வேறு செய்திதாள்கள், தொலைக்காட்சி ஊடங்கங்கள் என அனைத்திலும் அவரது துயர வாழ்க்கைப் பதிவானது.

‘ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்போன்ற உலக அளவிலான மனித உரிமை அமைப்புகள் இப்பிரச்சனையை தீர்க்கக் கோரி குரல் எழுப்பின. தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் செயல்பட்ட மனித உரிமை அமைப்புகள் பல அப்பெண்மணிக்காக குரல் கொடுத்தன.

அதேநேரத்தில், அப்பெண்மணியை அந்த பணியைச் செய்யச் சொல்லக் கூடாது என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது. கடைசியில், அவருக்கு அந்த சுடுகாட்டை பராமரிக்கும் பணி ஆணையை புதுச்சேரி அரசு வழங்கியது. நாளொன்றுக்கு ரூ. 105 ஊதியமாக வழங்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

நாங்கள் பலமுறை வலியுறுத்திக் கூறியும் அவர் அந்த சுடுகாட்டை விட்டு வரத் தயாராக இல்லை என்பது அதிர்ச்சியான உண்மை.

நான் குறிப்பிட்ட அந்த பெண்மணி கிருஷ்ணவேணி. தற்போது அவரது வயது: 40. தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரது வாக்குமூலம்:

என் வீட்டுக்காரர் பெயர் அல்பேர். என் வீடு துப்ராயப்பேட்டையிலே லசார் கோயில் தெருவிலே இருக்குது. என் வீட்டுக்காரர் 15 வருசமா இங்க வேலை செஞ்சாரு. அவர் 1998-இல் செத்துப்போன் பிறகு நான் போய் வேலை கேட்டேன். அப்போ பிண வேலை போய்ப்பாரு, ஆறு மாசம் கழிச்சி வேலை போட்டுத் தர்றோம்னு சொன்னாங்க. ஆனால், இது வரைக்கும் எனக்கு வேலை தரலை.

2000 2001 இல் அப்ளிகெஷன் கொடுத்தேன். நான் போய்க் கேட்கும் போதெல்லாம் போஸ்டிங் கிடையாதுன்னு சொன்னாங்க. இங்கேயே ஆள் அதிகமாக இருக்குது, நாங்களே வேலை செய்யற ஆளுங்களை நிறுத்தலாம்னு இருக்கிறோம்னு சொன்னாங்க.

அப்போ வைத்திலிங்ம் கவர்மென்ட். ஒரு பொணதுக்கு 15 ரூபாய் மேனிக்குதான் வேலை செஞ்சேன். இப்போ எங்க ஊட்டுக்காரர் செத்து மூணுமாசம் ஆன பிறகுதான் 100 ருபாயா ஆக்கினாங்க. எங்களுக்கு பாடி எடத்தாதான் சம்பளமே, பாடி இல்லன்னா சம்பளமும் கிடையாது, ஒண்ணுமே கிடையாது.

எனக்கு மூணு புள்ளைங்க இருக்கு. மூணும் ஆண்தான். இரண்டு பேர் படிக்கிறாங்க. ஒருத்தன் என்னோடு வேலை செய்றான். ஏழாவது ஒருத்தன் படிக்கறான். அஞ்சாவது ஒருத்தன் படிக்கறான். முதல் பையன் பேரு சங்கர். இரண்டாவது மதியழகன், மூணாவது வினோத் பிரசாந்த். சங்கர் அஞ்சாவது படிச்சிட்டு நின்னுட்டான். அவன் வேலைக்குப் போனாதான் காசு. எங்களுக்கு என்னக்கிதான் சாவு வருதுன்னு கிடையாது. சாவு வந்தா தான் வருமானமே. சாவு எப்போ வருமோன்னு உட்கார்ந்துன்னு இருப்போம். சாவு வந்தாதான் சமைப்போம்.

சங்கர் என்னோடதான் இந்த வேலையை செய்யாறான். எனக்கு 84-லிலே கல்யாணம் நடந்துச்சி. அவர் குருசுக்குப்பம். அவர் சின்ன வயசிலேயே இந்த ஊருக்கு வந்திருந்து என்னை பஞ்சாயத்து மூலம் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அவர் 85-லிருந்தே இங்கே வேலை செய்யறாரு. முனிசிபாலிடிலே இருக்கிற சுப்பையா டாக்டர்தான் வேலை கொடுத்தாரு. நீ வேலை செஞ்சிகினே இரு. மூணு மாசம் கழிச்சி போஸ்டிங் போட்டுத் தர்றேன்னு சொன்னாரு. அவரும் போட்டுத் தரலே. போய் கேக்கற சமயத்துல இதோ...இதோன்னு...சொன்னாரு. அவரும் மாத்திகினு போயிட்டாரு. அவருக்கு சர்வீஸ் முடிஞ்சிபோச்சி இப்போ.

அனாதைப் பொணம், ஒப்பித்தாலே போஸ்ட் மார்டம் பண்ணி அழுகிப் போனது, கடலிலே, ஆத்துல செத்து ஒரு மாசம் 15 நாள் ஆனது, அழுகிப் போய் புழு கொட்டுற மாதிரி இருக்கிற பொணத்தைத்தான் தூக்கிட்டு வருவாங்க. அப்போ ரோட்லே போற வர்றவங்க எல்லாம் திட்டுவாங்க. இதுமாதிரி எடுத்துக்கின்னு போறீங்களே, இது கிடையாதா? நாங்கெல்லாம் ரோட்டுல நடக்குறமே மனுசாலா மாடா. ஒரு தடவை பஞ்சாயத்துக்காரங்க, போற வர்ற ஜனங்க எல்லாம் எங்களை அடிக்க வந்துட்டாங்க.

வீட்டுக்கு ஏட்டு பி.சி.யும் வருவாங்க. தகவல் சொல்லுவாங்க. அந்த வண்டியை எடுத்துகின்னு போய் பாடியைக் கொண்டு வருவோம். இங்கே புதைப்போம். பாடியை புதைச்ச உடனே காசு கொடுக்க மாட்டாங்க. பில் போட்டோம்னா ஒரு மாசம் ஆகும். இந்த மாசம் போட்டமுன்னா அடுத்த மாசம் தருவாங்க. அவருக்கு வேலை கொடுத்ததிலிருந்தே 15 வருஷமா வேலை செஞ்சுகின்னு வந்தார். அப்புறம் 98-லே செத்துட்டாரு. செத்த உடனே நான் போய் முனிசிபாலிடிலே வேலை கேட்ட உடனேயே இந்த வேலை கொடுத்தாங்க.

நான் இல்லாம இங்க ரெண்டு ஆம்பளை வேலை செய்யறாங்க. அவங்களும் எங்களை மாதிரிதான். அவங்களும் நிரந்தரம் கிடையாது. அவங்க இங்கே பாடியை எரிச்சாதான் காசு. பாடியை புதைச்சாதான் எங்களுக்கு காசு. செத்தவங்களை கொளுத்தறது அவங்க. அனாதை பாடியைப் புதைக்கிறது எங்க வேலை. அனாதைப் பொணத்தை எடுக்கிறதனாலே, போலீஸ் ஒரு பாடிக்கு 50 ருபா கொடுப்பாங்க. எந்த நேரத்திலும் போலீஸ்காரங்க வருவாங்க. நைட் எத்தனை மணியாக இருந்தாலும் வந்து கூப்பிடுவாங்க.

பிரச்சனைதான் சார். என்ன பண்றது. இதை நம்பித்தானே சாப்பிட்டுக்கினு இருக்கோம். நைட்லே வந்து கூப்பிடறது தொந்தரவாதான் இருக்குது. போஸ்டிங் போட்டுக் கொடுத்து சம்பளம் போட்டுக் கொடுத்தாங்கன்னா, நாங்க எதையுமே கேக்க மாட்டோம்.

தகவல் வந்த உடனே போவோம். ரோட்லே கிடக்கிறது, கடலிலே விழுந்து செத்துன்னு எல்லாத்தையுமே எடுக்கினு வருவோம். கூட என் பையன் சங்கர் வருவான். நான் வண்டியை புடிச்சிக்குவேன் அவன் பாடியை தூக்கி உள்ளே போடுவான். ரோட்டுலே கிடக்கிற பாடியா இருந்தா இங்கதான் எடுத்துக்கிட்டு வருவோம். ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கிட்டுப் போக மாட்டோம். தண்ணில விழுந்தது. கடலிலே போனது. கிணத்துல விழுந்து சாவறது. மருந்து குடிச்சி செத்தா ஆஸ்பத்திரிக்குப் பொய் ஒரு வாரம் வரைக்கும் வச்சிருந்து பாப்பாங்க. அப்புறம் பாடி ரொம்ப உப்பிப் போச்சுன்னா போலீஸ் வந்து எங்களைக் கூட்டிக்கிட்டுப் போவாங்க.

கடல்லே எல்லாம் விழுந்துட்டா, நம்மள வந்து போலீஸ்காரங்க கூப்பிடுவாங்க. வண்டியிலே எடுத்து வச்சி ஆஸ்பத்திரிலே வைச்சிட்டு வந்துருவோம். அப்புறம் பேப்பர்லே போட்டா போட்டு அவங்க ஜனங்க வரவரைக்கும் காத்திருப்பாங்க. ஜனங்க வரலைன்னா அதுக்கு மேல்பட்டு நம்மள வந்து கூட்டிக்கிட்டுப் போவாங்க. அங்க ஆஸ்பத்திரியிலே இருந்து பாடியை வண்டியிலே வைச்சி எடுத்துக்கிட்டு வருவோம். இங்க வெச்சி நாங்களே குழி தோண்டி பள்ளம் எடுப்போம். நாங்களே புதைச்சிடுவோம். எரிக்க மாட்டோம். புதைக்கிறதோட சரி.

இதெல்லாம் பழக்கமாகிப் போச்சு. கரண்ட் கிடையாது இங்கே. ஒரே எருக்கம் செடியெல்லாம் முளையுது. பயமா இருக்குது. மதில் கிடையாது. கேட் கிடையாது. எதுவுமே கிடையாது. எவன் எவனோ வர்றான். இங்கேயே குடிக்கறானுங்க. எல்லா வேலையும் நடக்குதுன்னா பாருங்க. இங்கே முள் செடியிலே தூக்கு மாட்டிக்கிட்டான் ஒருத்தன். அதனாலே பயமா இருக்குது. முனிசிபாலிடிலே|” போய்க கேட்டா இன்னும் ரெண்டு மாசத்துல மதில் போட்டுத்தர்றேன், கேட் போட்டுத் தர்றேன்னு சொல்றாங்க.

சிலபேர் வர்றாங்க. நாங்க புதைச்சு ஒரு மாசம், இரண்டு மாசம் கழிச்சு வந்து கேட்டா, நாங்க குழியைக் காட்டுவோம். அவங்க வந்து கற்பூரம் கொளுத்திப் படைப்பாங்க. இதபோல வெளியூர் ஜனங்க நிறைய பேர் வருவாங்க. படைச்சிட்டுப் போவாங்க. அவங்க எங்களுக்கு காசு கொடுக்க மாட்டாங்க. சிலபேர் இஷ்டப்பட்டு 10 ரூபா, 20 ரூபா கொடுத்துட்டுப் போவாங்க, அதான். அதுக்கு மேலே கிடையாது.

பக்கத்துல இருக்கிற தொழு நோயாளிங்க பொணத்தை இங்க தான் புதைப்போம். அங்க செத்துப் போயிட்டா யாராவது நோயாளியை விட்டு சொல்லி அனுப்புவாங்க. ராத்திரி பகல் எந்த நேரமானாலும் வீட்டுக்கு அனுப்புவாங்க. உடனே நாங்க போய் எடுத்துக்கின்னு வந்து புதைச்சிடுவோம். இங்கேயே பள்ளம் எடுத்து புதைச்சிடுவோம். அவங்க ஒரு பொணத்துக்கு 100 ரூபா கொடுப்பாங்க. இந்தப் பொணத்துக்கு முனிசிபாலிட்டிலேகாசு கொடுக்கமாட்டாங்க. இந்த ஆஸ்பத்திரிகாரங்கத்தான் கொடுப்பாங்க. அனாதைப் பொணத்துக்குத்தான் முனிசிபாலிடிபணம் கொடுப்பாங்க.

அனாதைப் பொணம் வந்துச்சின்னா அப்படியே பள்ளம் எடுத்து புதைச்சிடுவோம். பொணத்தை அப்படியே பள்ளத்திலே இறக்கி வைச்சி புதைச்சிடுவோம். அவ்வளவுதான். அவங்க நாலு நோயாளிங்க வருவாங்க. அவங்க மாலை போட்டு கற்பூரம் கொளுத்திட்டுப் போவாங்க. எயிட்ஸ் நோய், பெரிய வாயு நோய், அவங்க எல்லாம் எங்ககிட்டேதான். எயிட்ஸ் நோயாளி பொணம் நெறைய வந்திருக்கு. ஆறு மாசத்துக்கு முன்னேகூட ஒரு பாடி வந்திச்சி. தாயாரம்மா ஆஸ்பத்திரி. பெரிய ஆஸ்பத்திரி. நல்லாம் கிளினிக் இப்படி எல்லா இடத்திலே இருந்தும் வரும்.

பயமா இருக்காது. எங்களுக்கு அதுக்கு அதுக்கு ஒரு ஊசி போடுவாங்க. டி.டி.ன்னு பேரு அதுக்கு. நாங்க போய்க் கேட்டா இந்த டி.டி.யை தர்றோம் நீ போய்ப் போட்டுக் கோன்னு சொல்றாங்க. அவ்வளவுதான். டாக்டர் சொல்லுவாரு. இது எய்ட்ஸ் நோய், பார்த்து எடுத்துகிட்டுப் போய் புதைங்கன்னு சொல்லுவாரு. உடனே வண்டியிலே எடுத்துக்கிட்டு வருவோம். இந்த வண்டியிலே எடுத்து வெச்சி அப்படியே திரையைப் போட்டு எடுத்துக்கிட்டு வருவோம். பாதுகாப்பு எல்லாம் ஒண்ணும் கிடையாதுங்க. யாரும் இது பத்தி ஒண்ணும் கேட்கமாட்டாங்க. அப்படியே எடுத்துகிட்டு வந்து பள்ளம் தோண்டி புதைச்சிடுவோம்.

எயிட்ஸ் நோய், பெரிய வாயு நோய், டி.பி.நோய், காச நோய், யானைக்கால் நோய், நாய்க்கடி நோய் எல்லாம் வரும். நாய்க்கடிச்சிடுச்சின்னு வச்சிக்க அந்த பாடியை வீட்டுக்கே கொடுக்க மாட்டோம். அதை வீட்டுக்கு எடுத்துக்கினு போக அனுமதியே கிடையாது. உடனே என்னைக் கூப்பிட்டு அனுப்பி நான் பெற்றுக் கொண்டேன்னு கையெழுத்துப் போட்டு வாங்கிக்கனும். நானே பாடியை வாங்கிக்கின்னு நானே மேரியிலே (நகராட்சி) அடக்க உத்தரவு வாங்கிக்கனும். பார்டிங்க எங்கக்கூட வந்தாகூட அவங்க எட்டதான் நிக்கணும். கிட்டே வரக்கூடாது. நாய்கடி பாடியை பிளீச்சிங் பவுடர் போட்டுப் புதைப்போம். ஈச்சம் பாயைப் பெரிய மார்க்கெட்டில் வாங்கிட்டு வருவோம். இதுக்கு யாரும் காசு கொடுக்க மாட்டாங்க. சொந்தக்காரங்க வந்தா அவங்க வாங்கிக் கொடுப்பாங்க. ஒப்பிதால்லே கீழே போட்டு படுக்கிற பாயை வாங்கிட்டு வந்து போடுவோம்.

என் வீட்டுக்காரர் செத்துட்ட உடனே பாடி எடுக்க ஆள் இல்லேன்னு பேப்பர்ல போட்டுட்டாங்க. பாடி புழு பூத்திருச்சு, எடுக்கிறதுக்கு ஆளே கிடையாதுன்னு போட்டாங்க. அப்போ எங்கெங்கேயோ ஆள் தேடனாங்க. உப்பளத்து கல்லறையில் இருந்து இரண்டு பேரை இட்டுக்கின்னு வந்தாங்க. ஒரு பத்து நாள் அவங்க எடுத்தாங்க. பத்தாவது நாள் அவங்க வண்டியைப் போட்டுட்டு ஓடிட்டாங்க. அதுக்கு அப்புறம் பாடி எடுக்கிறதுக்கு ஆளே கிடையாது. அதுக்கப்புறம் எனக்கு ஆள்விட்டு அனுப்பி கூப்பிட்டாங்க. நான் போனேன். உடனே நீ வேலை செய். ஆறு மாசம் கழிச்சி வேலை போட்டுத் தர்றேன்னு சொன்னாங்க. அப்புறமேட்டு நான் பர்ஸ்ட் பெரிய மார்க்கெட் போலிஸ்காரர் வந்து என்னை எடுக்கச் சொன்னாரு . அப்போ அவர் 50 ருபா கொடுத்தாரு. அதை எடுத்துகினு வந்து புதைச்சோம்.

கஷ்டமாகத்தான் சார் இருந்துச்சி. அது எடுத்தாதான் சாப்பாடு. பழக்கமாயிடுச்சி இப்போ. எங்க வீட்டுக்காரரு செத்துப் போயிட்ட பிறகு ரொம்ப கஷ்டப்பட்டோம். எங்களுக்கு யார் உதவியும் கிடையாது. நான் சம்பாதிச்சாதான் மூணு பிள்ளைகளும் சாப்பிடும். எங்க வீட்டுக்காரர் சொன்னார், நீ எதுக்கும் கவலைப்படாதே. நான் செத்துட்டா போய்க் கேளு, கவர்மெண்ட் வேலை போட்டுக் கொடுப்பாங்கன்னு சொன்னாரு.

எங்க வீட்டுக்காரார் தண்ணி போட்டுட்டு இந்த வேலையைச் செய்வாரு. நான் அப்படி இல்லேங்க. கஷ்டமாகத்தான் இருக்குது. கவர்மென்ட் வேலைக்காகத்தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இதை செஞ்சிக்கிட்டு இருக்கேன். முனிசிபாலிடி கமிஷனரே சொல்றாரு. உங்களை விட்டா வேற ஆள் கிடையாது. நீங்கதான் பாடியை எடுக்கனும்னு சொல்றார். அப்புறம் நான் என்ன செய்யறது. வேறவேலை செய்யனும்னு தோணல. இதே பழகிடுச்சு. இதே வேலைதான் செய்வோம். யாரும் செய்யாத வேலையா இருக்குது. அதான் செய்யறோம். மனசிலேயும் திருப்தி.

மார்ச்சுவரியிலே போய்க் கேட்டா ஒண்ணும் தரமாட்டாங்க. அந்த பாடியைக் கூட பிடிச்சு தூக்கி வைக்க மாட்டாங்க. எல்லாமே நம்மளே உள்ளே போய் நம்மளே தூக்கி வரணும். நானும் என் மகனும் தூக்கி வருவோம். கையிலே மாட்டிக்கிறதுக்கும், மூஞ்சியை மூடிக்கிற துணியும் கேட்டா கொடுக்க மாட்டாங்க. பலராமன் டாக்டரைப் பொய்க் கேளுன்னு சொல்வாங்க. முனிசிபாலிடியிலே கொடுக்க மாட்டாங்க. பலராமன் டாக்டர் சில சமயம் கேட்டா கொடுப்பார். சோப், துண்டு எதுவும் கொடுக்க மாட்டாங்க. முனிசிபாலிடியிலே மற்ற தொழிலாளர்களுக்கு கொடுக்கும் போது எங்களுக்கு ரெண்டு லைப்பாய் சோப் கொடுப்பாங்க. துண்டு எல்லாம் கொடுக்க மாட்டாங்க. மூணு மாசம் கழித்து ஆறு சோப் இப்பத்தான் கொடுத்தாங்க.

என் வீட்டுக்காரர் இருக்கும போது, பழைய முதலமைச்சர் வைத்தியலிங்கம் வெள்ளத்தைச் சுத்திப் பார்க்க இங்க வந்த போது மனு கொடுத்தோம். அவர் படிச்சிப் பார்த்திட்டு ஆபிசுக்கு வாங்கம்மான்னு சொன்னாரு. ஆபிசுக்குப் போனபோது, அந்த சீட்டிலே கையெழுத்து போட்டுக் கொடுத்தார். எல்.ஏ.டி. (உள்ளாட்சித் துறை) ஆபிசுக்குப் போய்க் கொடுத்த உடனே மேரிக்கு போன் பண்ணி, இது போல அல்பேர் என்கிறவர் வைத்திலிங்கம் சிபாரிசிலே வந்திருக்காருன்னு சொல்லி அனுப்பினார். அப்போ மேரி ஆபிசிலே எங்க வீட்டுக்காரரை செமத்தியா திட்டானங்க சார். நீ எப்படி எங்க உத்தரவு இல்லாமல் எல்.ஏ.டி.க்குப் போகலாம்ன்னு திட்டானாங்க.

பாடி உப்பிடுச்சுன்னு வெச்சுக்கிங்க வண்டியை இழுக்க முடியாது. வண்டி வரும்போது பாடியிலே இருந்து நீர் ஒழுகிக் கிட்டே வரும். சொட்டு சொட்டா ஊத்திக்கிட்டே வரும். ஒரே நாத்தம், பயங்கர நாத்தம் அடிக்கும். ரோட்டுலே போற வர்றவங்க எல்லாம் திட்டுவாங்க. பயங்கரமா திட்டுவாங்க.

பி.எம். பண்ணா பாடியை ஒழுங்கா தைக்க மாட்டாங்க, இப்போ புது பஸ்டாண்ட் எதிரிலே அம்மாவும், புள்ளையும் கொன்னுட்டாங்களே, அதுலே பாடியை தைக்கவே இல்லேங்க. ஒரு வாராமா மார்ச்சுவரிலே வெச்சிருந்தாங்க சார். சரியா தைக்கவே இல்லை. போலீஸ்காரரே பார்த்து பயந்துட்டார். பாடியைக் கட்டும்போது கொடலும் மற்றதும் அப்படியே கொட்டிக்கிச்சி. இதப் போய் கேட்டா, இப்படித்தான் தைப்போம், உனக்கு இடம் இருந்தா தூக்கு, இல்லேன்னா போங்கன்னு சொல்றாங்க. டாக்டர்கிட்டே கம்ப்ளய்ண்ட் செஞ்சா இரண்டு நாளைக்கு ஒழுங்கா செய்யறாங்க.

ரோட்டெல்லாம் ரத்தம் சொட்டு சொட்டா ஊத்திக்கிட்டு வரும். எல்லாரும் திட்டுவாங்க. ரெண்டு மூணுபேர் அடிக்க வருவாங்க. அடியெல்லாம் வாங்கி இருக்கோம். ரோட்டுப் பக்கம் வர ஜனங்க அடிப்பாங்க. கையை ஓங்கிக்கிட்டே வருவாங்க. நாங்க உடனே பாடியை இப்படியே நடுரோட்ல போட்டுட்டு போயிடுவோம்னு சொன்னா கொஞ்சம் பேசாமா இருப்பாங்க. போலீசிலே போய் சொல்லுவோம்னு சொல்லுவோம். போலீஸ்காரங்க பின்னால வர்றாங்கன்னு சொல்லுவோம் சார்.

அனாதை பாடி போஸ்ட்மார்டம் பண்ணாதான் அப்படி செய்யறாங்க. மற்ற பிணம் வந்தா நல்லா செய்யறாங்க. அனாதை பாடி கடலில் விழுந்தது, தண்ணியிலே விழுந்தது, கிணத்துலே விழுந்தது இதெல்லாம் வந்தா இப்படிதான் செய்யறாங்க. எவ்வளவு பெனாயில் ஊத்தினாலும் நாத்தம் வரும் சார். வீட்டுக்குப் போய் சாப்பிடும்போது அதே நாத்தம் அடிக்கிற மாதிரி இருக்குசார். என்ன செய்யறது வயித்துப் பிழைப்பு. பிள்ளைங்க இருக்குது.

அவங்க ஊருக்காரங்க வந்து எதுவுமே என்ன நினைக்கமாட்டாங்க. கஷ்டப்படுது இந்தப் பொண்ணு, ஆம்பளை மாதிரி கஷ்டப்படுது இந்தப் பொண்ணு. இது நல்ல பொண்ணு. நல்ல வேலை செய்யுது. இந்த பொண்ணுக்கு எந்தக் குறையும் வரக்கூடாதுன்னு வேண்டிக்குவாங்க. எங்க ஊரிலே இருக்கறவங்க எல்லாம் என்னை நிரந்தரம் பண்ணிட்டா பாடி ஒழுங்கா எடுக்க மாட்டேன்னு நினைக்கிறாங்க. உன்னை நிரந்தரம் பண்ணிட்டா பாடி எடுக்க மாட்டேன்னு கமிஷனரே சொல்றாரு. அப்போ எப்படி நாங்க செய்யாம விட்டுடுவோம். இந்த வேலையை நம்பித்தானே பிழைச்சிக் கிட்டிருக்கோம்.

ஜுன், 2003-இல் அவர் அளித்த வாக்குமூலம்.

அண்மையில் இரண்டு நாட்களுக்குமுன் கிருஷ்ணவேணி அவர்களை புதுச்சேரி நீதிமன்றம் அருகில் பார்த்தேன். வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அரசு நலத் திட்ட உதவிக்காக விண்ணப்பம் வாங்கப் போய்க் கொண்டிருப்பதாக கூறினார். என்னைப் போன்ற பலர் அவருக்கு அறிமுகம் இருந்தும் எங்களைப் பயன்படுத்தி வேலையை முடிக்கக்கூட தெரியாமல், சமூகத்தின் அடித்தட்டில் உழலும் கிருஷ்ணவேணி அவர்களை என்றும் என்னால் மறக்க முடியாது.

நமக்கு தெரிந்து ஒரு கிருஷ்ணவேணியின் நிலையே இதுவென்றால் இன்னும் நம் கண்ணுக்குப் புலப்படாத கிருஷ்ணவேணிகள் எங்கொ ஓர் மூலையில் துயரங்களோடு உழன்றுக் கொண்டிருப்பார்கள்.

கிருஷ்ணவேணியின் வாழ்க்கை சந்நியாசித்தோப்புச் சுடுகாட்டோடும், மனதை அறுக்கும் துயரத்தோடும் தொடர்ந்துக் கொண்டிருப்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதது...

Tuesday, February 05, 2008

தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) - நான் பார்த்ததும், உணர்ந்ததும்..


ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU)


நூலகம்


ஜனநாயக மாணவர் சங்கம்..


தந்தை பெரியார் பிறந்த நாள் விழா


பகுஜன் சமாஜ் கட்சி மாணவர் அமைப்பு
பெரியார் பிறந்த நாளுக்கு...



போலி மோதல் கொலை தொடர்பாக...


மதவாத ஏ.பி.வி.பி.


பாலியல் தொந்தரவுக்கு எதிராக...


மக்கள் இடம்பெயர்வது பற்றி...


ஜே.என்.யூ-வில் படித்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த
சந்திரசேகர். சி.பி.ஐ.(மா-லெ) கட்சியில்
இருந்ததால் கொல்லப்பட்டார். அவருக்கு அஞ்சலி.

உலக வங்கியின் தாக்கங்கள் பற்றி புதுதில்லியில் நடந்த மக்கள் தீர்ப்பாயத்தில் கலந்து கொள்ள நானும், நண்பர் தேவநேயன் அவர்களும் தில்லி சென்றோம். சென்ற 2007, செப்டம்பர் 21 முதல் 24 வரை, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழத்தில் (ஜே.என்.யூ) நடைபெற்ற இத்தீர்ப்பாயத்தில் இந்தியா முழுவதும் இருந்தும், உலக அளவிலும் ஏராளமான அறிஞர்கள் கலந்துக் கொண்டு கட்டுரை படித்தனர். மிகவும் பயனளிக்க கூடிய வகையில் நடந்த இந்நிகழ்ச்சியில் நிறைய நண்பர்கள் எனக்கு அறிமுகமாயினர்.

எல்லாவற்றையும்விட ஜே.என்.யூ. சூழல் என்னை மிகவும் கவர்ந்தது. ஜே.என்.யூ. பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தும் நேரில் பார்த்த போது அதன் பரிமாணத்தைப் புரிந்துக் கொள்ள முடிந்தது.

ஜே.என்.யூ. கல்வி நிலையில் முன்னணியில் இருக்கும் பல்கலைக்கழகம் என்பது அனைவரும் அறிந்ததே. இங்கு இந்தியா முழுவதும் மற்றும் உலகமெங்கும் இருந்து ஏறக்குறைய 4000 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 50 சதவீதத்திற்கு மேல் மாணவிகள். தமிழ்நாட்டிலிருந்து 130 பேர் படிக்கின்றனர். மற்ற மாநிலத்தைக் காட்டிலும் இது ஒப்பீட்டளவில் மிக மிக குறைவு. கேராளாவிலிருந்து 400 பேர் படிக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.

ஜே.என்.யூ.வில் பணியாற்றும் பேராசிரியர்கள் அறிவுநிலையில் கற்றுத் தேர்ந்தவர்களாக உள்ளனர். பேராசிரியர்களில் 90 சதவீதத்தினர் ‘பார்ப்பன, ‘மேல்சாதிக்காரர்கள் என்பது உற்று கவனிக்க வேண்டியது.

இங்கு பயின்றவர்களில் ஆண்டுக்கு 30 முதல் 35 பேர் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர். இங்குள்ள சமூக அறிவியல், அரசியல் துறைகள் மிகப் பிரபலம். இங்கு பயின்ற பலர் இன்றும் இந்திய அரசியலில், அரசில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.

மாணவர்கள் பயிலுவதற்கு நல்ல சூழல் நிலவுகிறது. படிப்பதற்கேன்றே தனியே படிப்பறைகள் உள்ளன. இங்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். கனவுகளோடு மாணவர்கள் இரவு முழுவதும் படித்துக் கொண்டிருந்ததைக் காணமுடிந்தது.

ஒவ்வொரு துறையிலும் குளிர்வசதி செய்யப்பட்ட கருத்தரங்க அறைகள் உள்ளன. நாள்தோறும் கல்வி சார்ந்து கருத்தரங்கங்கள் நடைபெறுகின்றன. ஜே.என்.யூ. பேராசிரியர்களும், வெளியிலிருந்து வரும் அறிஞர்களும் படிப்பு, அரசியல் சார்ந்தும் உரை நிகழ்த்துகின்றனர். மாணவர்கள் மட்டுமல்லாது, வெளியிலிருந்தும் நிறைய பேர் இக்கருத்தரங்க உரைகளைக் கேட்க வருகின்றனர்.

இங்குள்ள நூலகம் மிகப் பிரபலம். வானுயர்ந்து நிற்கும் 9 மாடிக் கட்டடம். இதில் 5 லட்சம் அளவில் நூல்கள், பத்திரிகைகள், ஆவணங்கள், குறுந்தகடுகள் உள்ளன. படிப்பதற்கென்று அனைத்து வசதிகளுடன் அரங்குகள் உள்ளன. இங்கு கிடைக்காத நூல்கள் இந்தியாலுள்ள வேறு நூலகங்களில் இருக்கிறதா என்பதை இணையம் மூலம் கண்டறிகின்றனர். அவ்வாறு வெளி நூலகத்திலுள்ள நூல்களைப் பெற்றுத் தரும் வசதி இங்கு உள்ளது. மாணவர்கள் அல்லாதவர்களும் இந்நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

தமிழகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்நூலகத்திற்கு வருவது மிக மிக குறைவு என்றும், தமிழ்நாட்டிலிருந்து வே.ஆனைமுத்து அவர்கள் இந்நூலகத்திற்கு வருவதுண்டு என்றனர் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள்.

ஜே.என்.யூ-வில் நல்ல புத்தகக் கடைகள் உள்ளன. பல துறை பாட புத்தகங்கள் தவிர மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் நூல்கள், முற்போக்கு இலக்கிய, அரசியல் நூல்கள் இங்கு கிடைக்கின்றன.

மாணவ-மாணவிகள் தங்கிப் படிக்கும் பல்கலைக்கழக விடுதிகள் நிறைய உள்ளன. இந்த விடுதிகளுக்கு இந்தியாலுள்ள நதிகளின் பெயர்களைச் சூட்டியுள்ளனர். ஒவ்வொரு விடுதியின் அருகேயும் ‘கேன்டீன்கள் உள்ளன. இங்கு உணவுப் பொருட்கள் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன.

மாணவர்கள் விடுதிக்குள் மாணவிகள் செல்ல தடையில்லை. மாணவிகளை ஈவ் டீசிங் செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுகின்றனர். இதற்கென மாணவ–மாணவிகள் அடங்கிய குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் தாண்டி, என்னை மிகவும் கவர்ந்தது அங்கு அரசியல் செயல்பாடுகளுக்கு சுதந்திரம் உள்ளதுதான்.

மாணவர் அமைப்புகள் வலுவாக உள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் முதல் மாவோயிஸ்ட் வரையிலான கட்சி சார்ந்த மாணவர் அமைப்புகள் உள்ளன. அந்தந்த மாணவர் அமைப்பு சார்பில் அன்றன்றைக்கு என்ன பிரச்சனை அரசியலில் களத்தில் உள்ளதோ அதுபற்றி ஒரு கருத்தரங்கம் நடக்கிறது. அதில் கலந்துக் கொள்ளும் பேராசிரியர்கள் குறிப்பாக ஜே.என்.யூ-வில் பணிபுரியும் பேராசிரியர்கள் அரசை விமர்சித்தும், பிரதமர் போன்ற அதிகாரத்தின் உயர்பொறுப்பில் இருப்பவர்களையும் கடுமையாக, வெளிப்படையாக விமர்சித்தும் பேசுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது.

நான் அங்கு இருந்த போது, அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தை எதிர்த்து ஜே.என்.யூ மாணவர் பேரவை சார்பில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் பிரதமர் வி.பி.சிங், சி.பி.எம். பிரகாஷ் காரத் மற்றும் ஜே.என்.யூ பேராசிரியர்கள் பலர் கலந்துக் கொள்வதாக அறிவிக்கபட்டிருந்தது. வி.பி.சிங் ‘டையாலிசிஸ் செய்துக் கொள்ள வேண்டியிருந்ததால் கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை. அவரைப் பார்க்க வேண்டுமென்பதற்காக கூட்டத்திற்குச் சென்றோம். அக்கூட்டத்தில், ஜே.என்.யூ பொருளாதார துறை பேராசிரியை ஒருவர் பிரதமரையும், அவரது பொருளாதார கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்தார். இக்கூட்டத்தைக் கண்டித்து மாணவ காங்கிரஸ் அமைப்பினர் பிரகாஷ் காரத் உருவ பொம்மையை அரங்கத்தின் வெளியே எரித்தனர்.

இடதுசாரி இயக்க மாணவர் அமைப்புகள் வலுவாக உள்ளன. குறிப்பாக மாவோயிஸ்ட், சி.பி.ஐ. (எம்.எல்.), சி.பி.எம்., சி.பி.ஐ. போன்றவற்றை சொல்லலாம். தற்போது கூட மாணவர் பேரவைத் தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சியின் ‘ஜனநாயக மாணவர் சங்கத்தைசார்ந்த மாணவர் ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாணவ-மாணவியர் தங்கள் கருத்துக்களை எளிய சுவரொட்டிகள் மூலம் தெரியப்படுத்துகின்றனர். அச்சடிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டக் கூடாது என்று மாணவர்கள் தங்களுக்குள்ளேயே ஒரு முடிவு செய்து, அதைக் கடைபிடிக்கின்றனர். வசதி வாய்ப்புள்ள அமைப்புகள் பெரிய பெரிய சுவரொட்டிகளை ஒட்டுவார்கள். போதிய நிதி இல்லாத அமைப்புகள் அந்தளவுக்கு ஒட்ட முடியாது என்று இந்த முடிவுக்கு வந்ததாக மாணவர் ஒருவர் கூறினார்.

சமற்கிருத துறைப் பேராசிரியர் ஒருவர் 9 மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததைக் கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாணவிகள் சுவரொட்டி ஒட்டியிருந்தனர்.

கேன்டீன்கள்அரசியல் தலைவர்களைக் கிண்டலடித்து கையால் வரையப்பட்ட சுவரொட்டிகள் நிறைந்துக் காணப்படுகின்றன. குறிப்பாக மதவாத பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத், ஏ.பி.வி.பி ஆகியவற்றை எதிர்த்து நிறைய சுவரொட்டிகளைக் காண முடிந்தது.

சிறப்புப் பொருளாதார மணடலங்களுக்கு எதிராக மேற்குவங்க சி.பி.எம். கட்சியைக் கடுமையாக விமர்சித்து ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கலையரசன், வீரமணி, பிரியா போன்றவர்கள் பெரியார் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்கின்றனர். பெரியார் பிறந்த நாள் விழா நடத்தியுள்ளனர். வே.ஆனைமுத்து அவர்கள் ஒருமுறை இங்கு மாணவர்களிடம் நிறைய நேரம் உரையாடியுள்ளதை கூறினர்.

இரவு 10 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை விடுதிக் ‘கேன்டீன்களில் அரசியல் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இது மாணவர்களின் அரசியல் களமாகத் திகழ்கிறது.

ஜே.என்.யூ-வில் மாணவர்கள் உரிமைக்காகத் தீரமாகப் போராடுகின்றனர். சில எடுத்துக்காட்டுக்களை மட்டும் சொல்கிறேன்.

ஜே.என்.யூ-வில் நேரு சிலை ஒன்று அமைக்கப்பட்டு அதனை பிரதமர் மன்மோகன்சிங் திறப்பதாக அறிவிக்கப்பட்டது. மன்மோகன்சிங் ஜே.என்.யூ-விற்கு வருவதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சிலை திறப்பு விழாவன்று கறுப்புக் கொடி காட்டுவோம் என மாணவர்கள் அறிவித்தனர். இதனால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டது. விழாவன்று சிலையைத் திறந்து வைத்து மன்மோகன்சிங் பேசும் போது மாணவிகள் தங்கள் ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த கறுப்புக் கொடியை எடுத்துக் காட்டி அவரை வெளியேறுமாறு முழக்கமிட்டுள்ளனர். தொடர்ந்து பேச முடியாமல் மன்மோகன்சிங் கூட்டத்தைவிட்டு வெளியேறியுள்ளார்.

அதேபோல், மகாராஷ்டிரா மாநிலம், கயர்லாஞ்சியில் தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, உயிரோடு தீ வைத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டதை யாராலும் எளிதில் மறக்க முடியாது. இச்சம்பவம் நடந்த பின்பு அம்மாநிலத்தின் முதலமைச்சர் விலாசராவ் தேஷ்முக் ஒரு கூட்டத்தில் பேச ஜே.என்.யூ வந்துள்ளார். அப்போது, மாணவர்கள் ‘தலித் விரோதிக்கு ஜே.என்.யூ-வில் இடமில்லை என்று கூறி அவரை எதிர்த்துப் போராட்டம் நடத்தியுள்ளனர். அவர் போலீஸ் பாதுகாப்போடு வெளியே தப்பியோடியதை மாணவர்கள் கூறினர்.

அண்மையில், பாராளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள ஜே.என்.யூ-விற்குச் சென்றுள்ளார். அவரை முற்றுகையிட்டு அவரை வெளியேற சொல்லி மாணவர்கள் பெரும் போராட்டம் நடத்தியுள்ளனர். நந்திகிராம், சிங்கூர் பிரச்சனைகளுக்காக இப்போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

அதோடுமட்டுமல்லாமல், ஊழியர்களின் பிரச்சனைகளுக்காகவும் மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். குறிப்பாக கடைநிலை ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமைக் கொடுத்துப் போராடுகின்றனர்.

ஜே.என்.யூ. கல்வி வழங்குவதில் மேம்பட்டும், அரசியல், ஜனநாயக களமாக திகழ்வதும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது.

அண்மையில் பேராசிரியர் மார்க்ஸ், நானும் இந்திய அளவில் அரசியல் சிறைவாசிகள் விடுதலை குறித்து நடந்த கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக தில்லி சென்று வந்தோம். அப்போது ஜே.என்.யூ-வில் இரண்டு கூட்டங்கள் நடந்தன. ஒன்று தமிழகத்திலிருந்து பயிலும் மாணவர்களோடு கலந்துரையாடல். இரவு 10.30 மணிக்குத் தொடங்கி 12.30-க்கு முடிந்தது. பெரியார், மார்க்சியம் சார்ந்த செய்திகளை மார்க்ஸ் முன்வைத்துப் பேசினார். அதன்பின், இரவு 1.00 மணிக்குத் தொடங்கி 2.30 வரை ஜனநாயக மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவ-மாணவியரோடு கலந்துரையாடல். மார்க்சியம், அரசியல், இந்திய அளவில் நடக்கும் போராட்டங்கள், தமிழகச் சூழல் என பலவற்றைக் குறித்து விவாதம் நடந்தது.

இவ்வாறு ஜே.என்.யூ-வோடு என் உறவு தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. நல்ல கல்வி பெற்று உயர்நிலை அடைய வேண்டும் என்பவர்களுக்கும், என் போன்ற சமூக ஆர்வலர்களுக்கும் ஜே.என்.யூ-வில் படிக்கவில்லையே என்ற ஏக்கம் ஏற்படுவது இயல்புதான். இதைப் படிக்கும் உங்களுக்கும் ஏற்படும் என்று நம்புகிறேன்...

தமிழ் மொழி உரிமைக்காகப் போராடியவர்கள் மீது தமிழக காவல்துறை தாக்குதல் - கண்டனம்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மொழி உரிமைக்காக்கப் போராடியவர்கள் மீது தமிழக காவல்துறை மேற்கொண்ட அடக்குமுறை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது குறித்து அக்கட்சியின் உறுப்பினர் க.பாலகுமரன் காவல் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள புகார் மனு:

நான் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியில் உறுப்பினராக செயல்பட்டு வருகிறேன். 25-01-2008 அன்று தமிழ் மொழி காக்க உயிர் நீத்த மொழிப் போர் தியாகிகள் நாள் என்பதால், எங்கள் கட்சி தமிழக அரசு கடைப்பிடிக்கும் ஆங்கிலத் திணிப்புக் கொள்கையையும் தமிழ் புறக்கணிப்புப் போக்கையும் கண்டிக்கும் வகையில் அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டுள்ள ஆங்கில எழுத்துக்களை அழிக்கும் போராட்டம் நடத்தியது. அதில் நானும் கலந்து கொண்டேன்.

25-01-2008 காலை சுமார் 10.00 மணிக்கு சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்துகளில், தமிழ் மொழியாக்கம் கூட செய்யப்படாமல் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்டிருந்த 'அல்ட்ரா டீலக்ஸ்', 'எஸ்.இ.டி.சி;' போன்ற எழுத்துக்களை கருப்பு மைபூசி அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோம். நானும் எங்கள் கட்சித் தோழர்களும் அமைதியான முறையில் பேருந்துகளுக்கு எந்த சேதமும் இல்லாத வகையில் கருப்பு மைபூசி அழித்தோம்.

அப்போது அங்கு வந்த கோயம்பேடு காவல்நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், காவலர்களும் எந்த விசாரணையும் செய்யாமல் எங்கள் போராட்டத்தைக் கைவிடும்படி அறிவிக்காமல் திடுதிடுவென அனைவரையும் பலமாக தடியால் திரும்பத் திரும்ப அடித்தனர். நாங்கள் ஆங்கில எழுத்துக்களை அழிப்பதை நிறுத்தி கொண்டோம். அதன் பிறகும் அங்கு கூட்டம் கூடிய மக்களெல்லாம் வேடிக்கை பார்க்கும் நிலையில் எங்களை மீண்டும் மீண்டும் தடியால் அடித்தும் பூட்ஸ் காலால் உதைத்தும் துன்புறுத்தியதுடன் எங்களை பெற்ற தாய்மார்களை இழிவு படுத்தும் வகையில் காமகுரோத வார்த்தைகளால் கேவலமாகப் பேசியும் அவமானப்படுத்தினார்கள்.

கோயம்பேடு காவல் நிலையத்தைச் சேர்ந்த தேன்தமிழ்வளவன் (என்கிற) தேன்தமிழ்வாணன் என்பவரும் அவரோடு சேர்ந்து மேலும் இரண்டு காவலர்களும் என்னைச் சுற்றி வளைத்துக் கொண்டு தடியால் தொடையிலும், இடது கையிலும், முகத்திலும் மாறி மாறி அடித்தார்கள். தேன்தமிழ்வளவன் தடியால் என் முகத்தில் ஓங்கி அடித்ததால் என் மூக்கிலிருந்து இரத்தம் கொட்டியது. உதடு கிழிந்தும் இரத்தம் வழிந்தது. முகம், கை ஆகிய இடங்கள் வீங்கியது. இடதுகைப் புஜத்தில் காயம் ஏற்பட்டது. அத்துடன் மேற்படி தேன்தமிழ்வளவன் என்னை நோக்கி "தேவடியாமவனே, ரூபாய் நோட்டில் இந்தியும் இங்கிலீசும் இருக்கு அத கிழிச்சி போட்ருவியாடா" என்று கத்திக் கொண்டே மறுபடியும் முதுகில் தடியால் அடித்தார்.

போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைச் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.பத்மநாபன், போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் பொறியாளர் இரா.பாலசுப்பிரமணியம், கோவை பா.தனசேகர், பா.சங்கரவடிவேலு, சேலம் ச.பிந்துசாரன், கோ.தமிழ்ச்செல்வன், ஓசூர் கோ.மாரிமுத்து, சிவபெருமாள், செந்தில்மாறன், பெண்ணாடம் முருகன்குடி க.முருகன், பழனிவேலு, இராமகிருஷ்ணன், தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் காமாட்சிபுரம் க.காமராசு, நந்தவனப்பட்டி செந்தில், நீ. மாரியப்பன் ஆகிய 16 பேரையும் மேற்படி தேன்தமிழ்வளவனும் காவலர்களும் கடுமையாகத் தடியால் அடித்துத் துன்புறுத்தினர். அதன் பிறகு எங்களைக் கைது செய்திருப்பதாக அறிவித்து ஒரு பேருந்தில் ஏறச் சொன்னார்கள்.

பேருந்துக்குள் ஏறி உட்கார்ந்தவுடன் தேன்தமிழ்வளவன் என்னை மீண்டும் தடியால் அடித்தார். பேருந்தில் வைத்து கோயம்புத்தூர் பா.தனசேகர் இடது கையில் மேற்படி தேன்தமிழ்வளவன் கடுமையாக தடியால் அடித்தார். இதில் அவரது இடது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. பேருந்திலும் அனைவரையும் மீண்டும் மீண்டும் காவல் துறையினர் அடித்தனர். கோயம்பேடு காவல் நிலையத்தில் பேருந்திலிருந்து இறங்கிச் செல்லும் பொழுதும் எங்களை காவல் துறையினர் தடியால் அடித்தனர். காவல் நிலையத்திற்குள் வைத்தும் எங்களைத் தடியால் அடித்தனர். பூட்ஸ் காலால் உதைத்தனர்.

இச்சம்பவங்கள் அங்கு பேருந்துக்காக காத்திருந்த பூவிருந்தவல்லி திரு. என்.ஆறுமுகம், புதுச்சேரி பொறியாளர் க.அருண், சிதம்பரம் சிவஞானம், குரோம்பேட்டை மா.கௌரி பாலன் ஆகியோருக்குத் தெரியும்.

பிறகு, கோயம்பேடு காவல்நிலையத்திலிருந்து சரக்குகள் ஏற்றும் ஒரு மினிடோர் வண்டியில் எங்களை ஏற்றிச் சென்று சேமத்தம்மன் நகரில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்துக் கதவுகளைப் பூட்டி விட்டனர். எங்களைப் பார்க்க வந்த உறவினர்களையும், நண்பர்களையும் பார்க்க அனுமதிக்கவில்லை.

எங்களில், மிகக் கடுமையாகக் காயம் பட்டு பாதிக்கப்பட்ட 1. க.பாலகுமரன், 2. கோவை பா.தனசேகர், 3. கோவை பா.சங்கரவடிவேலு, 4. ஓசூர் கோ.மாரிமுத்து, 5. சேலம் ச.பிந்துசாரன், 6. சேலம் கோ.தமிழ்ச்செல்வன், 7. ஓசூர் செந்தில்மாறன், 8. முருகன்குடி க.முருகன், 9. முருகன்குடி பழனிவேலு ஆகிய 9 பேரையும் கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் திரு நடராசன் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்கள் எங்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

எங்களை அன்று (25-01-2008) பிற்பகல் சுமார் 2.30 மணிக்கு விடுதலை செய்துவிட்டதாக ஆய்வாளர் அறிவித்தார். அதன்பிறகு தடியடிபட்டு பாதிக்கப்பட்ட எங்களுக்குத் தாங்கமுடியாத வலி இருந்ததால் உடனடியாக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றோம். அவ்வாறு சிகிச்சை பெற்றவர்கள் 1. க.பாலகுமரன், 2. பா.தனசேகர், 3. பா.சங்கரவடிவேலு, 4. ச.பிந்துசாரன், 5. கோ.மாரிமுத்து, 6. கோ.தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஆவர். இதில் பா.தனசேகருக்கு எக்ஸ்-ரே ஆய்வில் இடது முன் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு அதற்குரிய மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான சீட்டுகளின் நகல்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

ஆங்கில எழுத்துகளை அழிக்கும் போராட்டம் பற்றி முன்கூட்டியே பத்திரிக்கை அறிக்கை வாயிலாகவும், பல்லாயிரக்கணக்கான துண்டறிக்கைகள் மூலமாகவும், சுவரொட்டிகள் ஒட்டியும், சுவரெழுத்துகள் எழுதியும், பதாகைகள் கட்டியும் அறிவித்திருந்தோம். கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளருக்குத் தொலைபேசி வழியிலும் தெரிவித்திருந்தோம். எனவே சனநாயக வழியில் அறிவித்துவிட்டு பகிரங்கமாக நடந்த ஒர் அடையாளப் போராட்டம் தான் இது.

சட்டவிரோதமாகவும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியும் மேற்கண்ட எங்களைத் தடியால் அடித்துக் காயப்படுத்தி, பூட்ஸ் காலால் மிதித்து, இழிவுபடுத்தி எங்களைப் பெற்ற தாய்மார்களை "தேவடியாள்" என்று கேவலப்படுத்திப் பேசி வன்முறையில் ஈடுபட்ட மேற்கண்ட காவல்துறையினரிடம் இதுகுறித்து விசாரித்து தாங்கள் கிரிமினல் நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்'

இவ்வாறு அவர் புகார் கூறியுள்ளார்.

இந்தியை தார்பூசி அழித்து வளர்த்த கட்சி நடத்தும் ஆட்சியில் இவ்வாறு மொழி உரிமைக்காகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது அடக்குமுறை ஏவியதை ஏற்றிக் கொள்ள முடியாது. உடனடியாக தமிழக அரசு குற்றமிழைத்த காவ்ல் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Monday, February 04, 2008

போராடிய மக்கள் மீது போலீஸ் அடக்குமுறையும், என் மீது பொய் வழக்கும்..

மனித உரிமை ஆர்வலர்கள் சந்திக்கும் அடக்குமுறைகள் ஏராளம். பல நேரங்களில் அவர்களுக்கு அதிகார அமைப்புகளிடமிருந்து அச்சுறுத்தல் வருவதுண்டு. ஆந்திர சூழலில் பல மனித உரிமை ஆர்வலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ்கத்தில், புதுச்சேரியில் அந்தளவுக்கு சூழல் மோசமில்லை என்றாலும், மனித உரிமை ஆர்வலர்கள் மீது பல்வேறு பொய் வழக்குப் போடுவது என்பது சாதாரணமாகிவிட்டன.

திண்டிவனத்தில் இருக்கும் பேராசிரியர் கல்யாணி மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்ட்த்தில் பொய் வழக்குப் போட்ட உதாரணமும் உண்டு. இத்தனைக்கும் அவர் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் அமைத்து போராடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல நிறைய கூற முடியும்.

புதுச்சேரியில் துறைமுக விரிவாக்கத் திட்ட்த்தை எதிர்த்துப் போடாடியதற்காக நான் உட்பட பலர் மீது காவல் ஆய்வளரைக் கொல்ல முயன்றதாக இ.பி.கோ. பிரிவு 307 பொய் வழக்கு உள்ளது.

இந்நிலையில், கடந்த 31-01-2008 அன்று வில்லியனூரில், அத்தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் நிட் நாராயணசாமி, அரசு ஒதுக்கிய நிதியினை செலவு செய்யவில்லை என்பதை எதிர்த்து போராட்டம் நடத்திய உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் மீது போலீஸ் காட்டுமிராணடிதனமாக தாக்குதல் நடத்தியது. இதில் காயமடைந்த கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்காக உதவிட போன இடத்தில் நடந்த சம்பவத்தில் என் மீது மற்றுமொரு பொய் வழக்கு போட்டுள்ளது புதுச்சேரி போலீஸ்.

நடந்த சம்பவம் குறித்து நான் போலீசிடம் அளித்த புகார் விவரம்:

“31-01-2008 அன்று காலை சுமார் 11.30 மணியளவில், வில்லியனூர் உளவாய்க்கால் ஊரைச் சேர்ந்த என்னுடைய நண்பர் சந்திரசேகர் தொலைபெசியில் என்னிடம் “வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் நாராயணசாமியை எதிர்த்துப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது வில்லியனூர் காவல் ஆய்வாளர் வெங்கடசாமி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் தடியடி நடத்தி தாக்கியதால், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பலர் காயமடைந்து சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு வந்திருப்பதாக” கூறினார். மேலும் அவர், போலீசார் தாக்கியதால் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்துள்ள மக்களுக்கு உதவி செய்திட உடனடியாக என்னை மருத்துவமனைக்கு வருமாறு கூறினார்.

நான் உடனடியாக என்னுடைய நெருங்கிய நண்பர்களான லோகு.அய்யப்பன், சாமிஆரோக்கியசாமி மற்றும் சிலரோடு மேற்சொன்ன மருத்துவமனைக்குச் சென்றேன். மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் இருந்தனர். அப்போது அங்கு பணியிலிருந்த மருத்துவர் ஒவ்வொருவராக அழைத்து விசாரித்து சிகிச்சை அளித்துக் கொண்டு இருந்தார். அவருக்கு முன்னாள் இருந்த இருக்கையில் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் பழனிவேல் அமர்ந்துக் கொண்டிருந்தார்.

அப்போது நான் அங்கிருந்த மேற்சொன்ன சந்திரசேகரிடம் என்ன நடந்தது என்று விசாரித்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கிருந்த மேற்சொன்ன காவல் உதவி ஆய்வாளர் காயம்பட்டு சிகிச்சைக்காக வந்திருந்த மக்களிடம் கடுமையான முறையில் விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது நான் தலையிட்டு, “காயம்பட்டு மயக்க நிலையில் பொதுமக்கள் உள்ளனர், நீங்கள் உங்கள் விசாரணையை சிகிச்சை முடிந்த பின்னர் மேற்கொள்ளுங்கள்” என்று அவரிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டேன். உடனடியாக அவர் கோபத்துடன் என்னை நோக்கி தகாத வார்த்தைகளைக் கூறி திட்டி, மிரட்டினார். வழக்குப் போட்டு சிறையில் தள்ளிவிடுவேன் என்று அச்சுறுத்தினார். மேலும், அவர் என்னை நோக்கித் தாக்க வந்தார். அப்போது, அவருடன் இருந்த போலீசார் என்னை அங்கிருந்து வெளியே அழைத்துக் கொண்டு வந்தனர். என்னுடன் வந்தவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் கேட்காமல் என்னிடம் கடுமையாக நடந்துக் கொண்டார். இத்தனைக்கும் மேற்சொன்ன காவல் உதவி ஆய்வாளர் எனக்கு நன்கு அறிமுகமானவர்.

கடந்த 1989 முதல் மனித உரிமைக்ககாகப் பாடுபட்டுவரும் என்னிடம் மேற்சொன்ன காவல் உதவி ஆய்வாளர் பழனிவேல் இவ்வாறு நடந்துக் கொண்டது எனக்கு மிகுந்த மன உளைச்சலை அளிக்கிறது. நான் உடனடியாக மதியம் சுமார் 1.30 மணியளவில் இச்சம்பவம் குறித்து, பெரியக்கடை காவல்நிலையப் பொறுப்பு அதிகாரிக்கு தந்தி மூலம் நடந்தவற்றை தெரிவித்தேன்.

மேற்சொன்ன வில்லியனூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட நேர்ந்ததால் உடனடியாக நான் காவல்நிலையம் வந்து புகார் அளிக்க முடியவில்லை. எனவே, நான் தற்போது தங்களிடம் இப்புகார் மனுவை அளிக்கின்றேன். தாங்கள் இப்புகாரை விசாரித்து வழக்குப் பதிவு செய்து, சட்டத்திற்குப் புறம்பாக என்னை தகாத வார்த்தைகள் கூறி மிரட்டி, அச்சுறுத்தி, தாக்க வந்த மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் பழனிவேல் மீது உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.”

இதுதான் நான் அளித்த புகார் மனு. இதனைப் பெற்றுக் கொண்ட பெரியக்கடை போலீசார், நான் புகார் கொடுத்த ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக புகார் கொடுத்த்து போல், என்னை தாக்க வந்த உதவி ஆய்வாளரிடம் ஒரு புகாரை எழுதி வாங்கி என் மீது வழக்குப் பொட்டுள்ளனர்.

அதாவது இ.த.ச. 353 (அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் அச்சுறுத்தித் தடுத்தல்), 506(1) (குற்ற எண்ணத்தோடு மிரட்டுதல்) மற்றும் பல பிரிவுகளில் வழக்குப் போட்டுள்ளனர். நான் கொடுத்த புகார் மீது இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், போலீசார் என்னை எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என்ற நிலை உள்ளது.

இந்திய அளவில் பல மனித உரிமை ஆர்வலர்கள் மக்கள் உரிமைக்காகப் போராடி உயிர் நீத்துள்ளனர். அவர்களை எல்லாம் ஒப்பிடும் போது இது ஒன்றும் பெரிதில்லை என்றாலும், நம் பணியை முடக்க அரசும், போலீசும் செய்யும் ஒரு தந்திரமே இது.

தமிழ்மணத்திற்கு நன்றி: நிகழ்வுகளை நாள்தோறும் எழுதுவோம்...

தமிழ்மணம் என்னை “நட்சத்திர” பதிவராக தேர்வு செய்து, அதற்கான வாய்ப்பை அளித்தமைக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்மணம் என்னை எதற்காக “நட்சத்திர” பதிவராக தேர்வு செய்தது என்று எனக்குத் தெரியாது. இருப்பினும் வலைப்பதிவர்களையும், வலைப்பக்கங்களைப் படிப்பவர்களையும் நான் மிகவும் மதிப்பவன் என்ற அடிப்படையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நான் சார்ந்த மனித உரிமைத் தளத்தில் பெற்ற பட்டறிவை உங்களோடு பகிர்ந்துக் கொள்ளலாம் என்ற நினைக்கின்றேன். அதற்காகவே இந்த வாய்ப்பை நான் ஏற்றுக் கொண்டேன்.

களத்தில் பணியாற்றுபவர்கள் எழுதுவது என்பது மிகவும் குறைவு. விதிவிலக்காக ஓரிருவர் இருக்கலாம். குறிப்பாக சொல்லப்போனால், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்களைச் சொல்லலாம். அவர் கொள்கைச் சார்ந்து நிறைய எழுதி இருந்தாலும், அவர் எழுத வேண்டியவை நிறைய உள்ளன. பெருந்தலைவர் காமராசர் அவர்களோடு அவருக்கு இருந்த உறவு பற்றி அவர் எழுத வேண்டிய செய்திகள் ஏராளம் உள்ளன. அவரோடு நான் பயணம் செய்யும் போது அவர் கூறும் பல்வேறு தகவல்கள் பலரும் அறிந்து கொள்ள வேண்டியவை. களத்தில் உடனுக்குடன் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதால் அவரால் நிறைய எழுத முடியாமல் உள்ளது. நல்ல எழுத்தாற்றல் உள்ள பழ.நெடுமாறன் அவர்கள் (அவரது உரைநடை பாணி மிகவும் கவனத்திற்குரியது. இதுபற்றி யாராவது ஆய்வு செய்யலாம். இதுபற்றி பிரிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்) நிறைய எழுத வேண்டுமென அவரிடம் பல முறை முறையிட்டுள்ளோம்.

அடுத்து, மார்க்க்சிய-பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் வே.ஆனைமுத்து அவர்கள். தன் கட்சி சார்ந்தும், அவர் நடத்தும் இதழ்களிலும் நிறைய அறிவுப்பூர்வமாக எழுதிக் கொண்டிருப்பவர். அவர் தொகுத்த பெரியார் சிந்தனைகள் மூன்று தொகுதி நூல்கள் தான் இன்றைக்கும் தந்தை பெரியாரை ஆதரிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும் ஆதாரமாக உள்ளன. தந்தை பெரியார் பேசியவை, எழுதியவை இன்னமும் முழுமையாக தொகுக்கப்படவில்லை. தற்போது ஆனைமுத்து அவர்கள் இதுவரை தொகுக்கப்படாதவற்றை தொகுப்பதாக தகவல். அதோடு பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. தந்தை பெரியார் எழுத்துக்களை தொகுக்கும் பணியே பெரிய பணியாக உள்ள போது பெரியார் பற்றி அவருடைய கருத்துக்களையும், பார்வையையும் எப்போது அவர் எழுதப் போகிறார் என்று தெரியவில்லை.

புலவர் கலியபெருமாள் வாழ்க்கை வரலாறான “மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” புத்தகம் வந்த போது, பலரும் முன்வைத்த விமர்சனம். அது முழுமையான வரலாறாக வரவில்லை என்பதுதான். காரணம் அவர் முதுமை அடைந்து, போதிய நினைவு இல்லாத போது அவர் சொல்லச் சொல்ல தொகுத்தவை. அதில் பல செய்திகள் விடுபட்டுள்ளன. பல நிகழ்வுகள் இன்றைக்கும் வழக்கு நிலுவையில் இருப்பதால் எழுத முடியாதவையாக இருந்துள்ளன.

தினசரி பத்திரிகைகளில் எழுத வாய்ப்பிருந்தவர்கள் நிறைய எழுதியுள்ளனர். எடுத்துக்காட்டாக தந்தை பெரியார் விடுதலை, குடியரசு ஆகியவற்றிலும், கலைஞர் கருணாநிதி முரசொலியிலும் ஏராளமாக எழுதியுள்ளனர். அதனால்தான், பெரியார் எழுத்துக்களைத் தொகுக்க முடிந்தது, முடிகிறது. கருணாநிதியின் வரலாறு “நெஞ்சுக்கு நீதி” பல பாகங்களாக வெளிவந்துள்ளது.

புதுச்சேரியை ஆண்ட பிரஞ்சு அரசிடம் “துபாஷியாக” மொழிபெயர்ப்பாளராக இருந்த ஆனந்த ரங்கப்பிள்ளை எழுதிய நாட்குறிப்புதான், புதுச்சேரியின் வரலாற்றை எழுத உதவியாக உள்ளது. நாள்தோறும் எழுதுவது மிக மிக அவசியம்.

நாளேடு நடத்த வசதி இல்லாதவர்கள் எழுதியவை குறைவுதான். வேகமான அரசியல், சமூக மாற்றங்கள் நிகழும் இக்காலக் கட்டத்தில் உடனுக்குடன் நிகழ்வுகளை எழுதுவது அவசியம்.

இதற்கு நமக்கு போதிய வசதி வாய்ப்பு வேண்டும். ஆனால், தற்போது இணையம் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக நான் கருதுகிறேன். குறிப்பாக, வலைப்பூக்கள் அதற்கான சூழலை விரிவுபடுத்தி உள்ளன.

அன்றாட நிகழ்வுகளை கணினி, இணைய இணைப்பு இருந்தால் போதும் உடனுக்குடன் பதிவு செய்துக் கொள்ளலாம். நாட்குறிப்பு போல் வலைப் பக்கங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பலர் அவ்வாறு பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

சிலர் கொள்கை அடிப்படையில் தளத்தைத் தொடங்கிவிட்டு தற்போது எங்கோ, எதற்கோ தேவையில்லாமல் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ்மணத்தைத் தொடர்ந்து கூர்ந்துக் கவனித்தால் அது யாரென்று புரியும்.

இதையெல்லாம் தாண்டி வலைப்பூக்களை முழுமையாக பயன்படுத்துவது பற்றி வலைப்பதிவர்கள் சிந்திக்க வேண்டும். இதுகுறித்து வாய்ப்புள்ள இடத்தில் வலைப்பதிவர்கள் ஒன்றுகூடிப் பேசினால் நல்லது.

மேலே நான் குறிப்பிட்டவை ஒரு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. நாமும் நமது பட்டறிவுகளை உடனுக்குடன் பதிய முயலுவோம். நான் சொல்வது அனைவருக்கும் பொருந்தாது என்றாலும், என்னைப் போன்ற களப்பணியாளர்கள் பலருக்கும் பொருந்தும். ஏனென்றால், தமிழ்மணம் “நட்சத்திர” பதிவராக பிப்ரவரி 4 முதல் தொடங்கும் என்று முன்னரே எனக்கு தகவல் தெரிவித்தும், என்னால் உடனடியாக பதிவிட முடியாமல் போய்விட்டது. காரணம் எந்த நேரத்திலும் நான் கைது செய்யப்படலாம் என்ற நிலை. இதற்கான காரணத்தை அடுத்த பதிவில் எழுதுகிறேன்...

Wednesday, January 16, 2008

ஜல்லிக்கட்டுக் காளைகள் மைதானத்திற்குள் நடந்துதான் வர வேண்டும் - உச்சநீதிமன்றம் நிபந்தனை


புகைப்படம்: கோ.சுகுமாரன்
(2007-இல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் போது எடுத்தப் படம்)


ஜல்லிக்கட்டுக் காளைகள் மைதானத்திற்குள் நடந்துதான் வர வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகளை விதித்து உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் விழாவையொட்டி ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு நடைபெறும் வழக்கம். இதில் காளைகளைக் கொடுமைப்படுத்துவதாகக் கூறி விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு கடந்த 11-01-2008 அன்று தடை விதித்தது.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தடையை மீறி பல கிராமங்களில் ஜல்லிக்கட்டுகள் நடத்தப்பட்டன. பல இடங்களில் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடந்தன. அரசியல் கட்சிகள் ஜல்லிக்கட்டு நடைபெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தன.

ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூரில் 15-01-2008அன்று பொங்கல் விழா கருப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தடையை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு 15-01-2008 அன்று தலைமை நீதிபதி பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது 400 ஆண்டு காலமாக பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதற்குத் தடை விதிப்பதால் மக்களின் மத உணர்வைப் பாதிக்கும் என்று அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

தடையை நீக்காவிட்டால் சட்டம்- ஒழுங்கு நிலைப் பாதிக்கப்படும். தடையை மீறி வழக்கம் போல ஜல்லிக்கட்டு நடத்த சில கிராமங்களில் மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள் என்று உளவுத்துறை தகவல் தெரிவித்து இருப்பதையும் தமிழக அரசு சார்பில் சுட்டிக் காட்டப்பட்டது.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத உணர்வு பற்றிய பிரச்சினையை இழுத்ததற்கு உச்சநீதிமன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், ஆர்.வி. ரவிந்திரன், ஜே.எம். பச்சால் ஆகியோரை கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் கூறுகையில், "11-ஆம் நாளன்று வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யும்படி (தடையை நீக்க) தமிழக அரசு கூறும் காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது'' என்று தெரிவித்தனர்.

இந்த வழக்கில் மத உணர்வை தமிழக அரசு இழுப்பது ஏன் என்று தெரியவில்லை. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இன்னொரு வழக்கில்
(சேது சமுத்திரத் திட்ட வழக்கு) அவர்களது (தமிழக அரசு) நிலை என்ன என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அந்த இன்னொரு வழக்கு என்ன என்பதை நாங்கள் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பவில்லை'' என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

உச்சநீதிமன்றம் சில நிபந்தனைகளின் பேரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி தீர்ப்பு கூறியது. அவை:

1) ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள் நல்ல உடல் நிலையில் தான் உள்ளன என்று கால்நடைத்துறை அதிகாரிகள் சான்றிதழ் வழங்க வேண்டும்.

2) காளைகள் கொடுமைப்படுத்தப்படவில்லை என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

3) ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.

4) காளைகளை ஓட ஓட துரத்தக் கூடாது. அவை மைதானத்துக்கு நடந்து தான் வர வேண்டும்.

5) காளைகள், பார்வையாளர்கள் காயமடைவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

6) ஜல்லிக்கட்டு நடத்துவோர் 3 நாட்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.

7) விலங்குகள் நல வாரியத்தைச் சேர்ந்தவர்கள் ஜல்லிக்கட்டை மேற்பார்வையிட அனுமதிக்க வேண்டும்.

8) ஜல்லிக்கட்டு நடந்த பின் 2 வாரங்களில் ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ஜல்லிக்கட்டை எதிர்த்து வெளிநாட்டுப் பெண் போராட்டம்:

இதற்கிடையே இன்று (16-01-2008) கோவையில் வெளிநாட்டு பெண் ஒருவர் காந்தி சிலையின் கண்களை கறுப்பு துணியால் மூடியபடி ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கக் கோரி முழக்கமிட்டுப் போராட்டம் நடத்தினார்.

'பீட்டா' விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்த ஒரு வெளிநாட்டுப் பெண் காந்தி பூங்காவிற்குச் சென்று காந்தி சிலையின் கண்கள் மீது கறுப்புத் துணியைக் கட்டி விட்டு, ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்குமாறு முழக்கமிட்டுச் சென்று விட்டார்.

இது குறித்து காலதாமதமாக கேள்விப்பட்ட போலீசார் அங்கு ஓடி வந்தனர். அந்தப் பெண்ணைத் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தையடுத்து மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்குப் பலத்தப் போலீசு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அஞ்சலி: ஓவியர் ஆதிமூலம் காலமானார் - அவரது கோட்டோவியங்கள் சில..







ஓவியர் ஆதிமூலம் வரைந்த கோட்டோவியங்கள். இவை www.saffronart.com என்ற தளத்திலிருந்து எடுத்து கையாளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு நன்றி.

ஓவியர் ஆதிமூலம் அவர்களுக்கு இரங்கல் செய்தி

Tuesday, January 15, 2008

புகழ் பெற்ற ஓவியர் கே.எம். ஆதிமூலம் காலமானார்.


தமிழகத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற ஓவியர் கே.எம்.ஆதிமூலம் (வயது:70), 15-01-2008 செவ்வாய் இரவு 7.00 மணியளவில் சென்னையில் காலமானார். அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். அவரது இறுதிச் சடங்கு 16-01-2008 அன்று மாலை 4.00 மணியளவில் பெசண்ட் நகர் சுடுகாட்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1938-ஆம் ஆண்டு திருச்சி, துறையூர் அருகேயுள்ள கீராம்பூர் என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். பள்ளிப் பருவம் முதற் கொண்டே ஓவி்யத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக திகழ்ந்தார். இவர் பாடத்தை விட படத்திலேயே அதிக கவனம் செலுத்தினார்.

1959-ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த உடனேயே சிற்பி தனபால் தொடர்பு ஏற்பட்டு, அவரால் அறிமுகப்படுத்தப்பட்டு சென்னை கலை மற்றும் கைவினைக் கல்லூரில் சேர்ந்தார். 1961-66 வரை அக்கல்லூரியில் பயின்று 'டிப்ளமா' பெற்றார்.

சென்னையில் இருந்த காலகட்டத்தில் தான் ஓவியர் ஆதிமூலத்திற்கு தமிழின் நவீன இலக்கியவாதிகள் பலரோடு தொடர்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிறுபத்திரிகைகளில் வெளிவந்த கவிதைகள், கதைகள், கட்டுரைகள் ஆகியவற்றில் அவரது ஓவியங்கள் இடம்பெற்றன.

1966-இல் காந்தியாரின் நூற்றாண்டு விழாவையொட்டி காந்தியாரின் பல்வேறு பரிமாணங்களைக் வெளிப்படுத்தும் வகையில் 100 ஓவியங்களை வரைந்தார். அவர் அன்றைக்கு வரைந்த காந்தியாரின் ஓவியங்கள் இன்றைக்கும் பேசப்படுகின்றன. அதன்பின்னர், தமிழ்ச் சூழலில் ஓவியர் ஆதிமூலம் வரைந்த ஓவியங்கள் வலம் வந்து ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.

லலித் கலா அகடாமியின் தேசிய விருது, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய மாநிலங்களின் ஓவிய சங்கங்களின் உயர் விருதுகள் உள்ளிட்டு ஏராளமான விருதுகளைப் பெற்றவர். ஓவியத் துறை சார்ந்த பல்வேறு பதவிகள் வகித்தவர்.

இவரது ஓவியங்கள் பல உலகப் புகழ் பெற்றவை. இவர் துருக்கி, சிங்கப்பூர், இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஓவியக் கலையைப் பரப்பியவர்.

இவரது ஓவியங்கள் தேசிய ஓவியக் கூடம், சென்னை அருங்காட்சியம் உட்பட பல இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவர் ஏராளமான ஓவிய முகாம்கள், பட்டறைகள் ஆகியவற்றில் கலந்துக் கொண்டு தன் ஆற்றலை வெளி உலகிற்குக் காட்டியுள்ளார்.

தமிழகத்திலிருந்து வெளிவரும் வெகுமக்கள் இதழ்களான 'ஜீனியர் விகடன்,''ஆனந்த விகடன்' போன்ற இதழ்களிலும் இவரது ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இது போன்ற இதழ்களில் இவரது ஓவியங்கள் வெளிவந்தது இவரை மேலும் பிரபலப்படுத்தியது.

வண்ண ஓவியங்களிலும், வரைகலையிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர் ஓவியர் ஆதிமூலம். 'நான் துரத்தும் நிலம்' என்ற தலைப்பில் வெளிவந்த அவரது தைல வண்ண ஓவியங்கள் வண்ணத்திற்கு வண்ணம் தீட்டுயவை. அவரது கோட்டு ஓவியங்கள் மிகப் பரபலமானவை.

'நான் நேரிடையான எனது படைப்புச் சக்தியை மட்டுமே சார்ந்திருக்கிறேன். இந்த அழகின் காட்சிப்படுத்துதலை அடிப்படையாக வைத்துதான் நான் பிறரது படைப்புகளைப் புரிந்துக் கொள்ளவும், எனது படைப்புகளின் மூலம் வெளிப்படுத்த விரும்புகிறேன்' என்று அவர் படைப்பாக்கம் பற்றி கூறியது அவரது அறிவடக்கத்தைக் காட்டுகிறது.

புள்ளிகளில் தொடங்கி கோடுகளில் உருவம் பெற்ற ஓவியர் ஆதிமூலத்தின் படைப்புலகம் கவனம் பெற்றவை. அவரின் கோட்டோவியங்கள் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க இயலாதது.

இதுபற்றி, 'அந்திமழை' இணைய இதழில் வெளிவந்த அவரது நேர்காணலில், "A Line immediately breaks the space’ ஒரு வெள்ளைப் பேப்பர்ல ஒரு dot வைச்சா அது ‘A planet in the space’ன்ற மாதிரியாயிடுதுல்ல. அந்தக் கோட்டை Horizontal ஆ left to right நீட்டினா தானாகவே மேலேயிருக்கிறது ‘Space’ கீழேயிருக்கிறது ‘land’ னு ஆயிடுது. ஒரு பேப்பர்ல புள்ளி வைச்சவுடனேயே அதோட flat surface போயிடுது. ஆதி மனிதன் அவனை கோடுகளில்தான் வெளிப்படுத்தினான். குகை ஓவியங்கள். அவன் வரைந்த விலங்குகள் வேட்டைக் கருவிகள் எல்லாமே கோடுகள்தான். கோடு, கோடுகளுக்கப்புறம்தான் எழுத்து, மொழி, இலக்கியம் எல்லாம். ஓவிய வெளிப்பாடுதான் மனித நாகரிகத்தின் முதல்படி, எறும்புகள் எப்படி வரிசையா போகுதோ அது மாதிரிதான் புள்ளிகளெல்லாம் ஒன்றாகி கோடாகுது. பல வருஷங்களா communicate பண்ணுது" என்று கூறியுள்ளது புள்ளியும், கோடும் அவரை எந்தளவுக்குப் பாதித்துள்ளது என்பதைப் புரிந்துக் கொள்ள முடிகிறது.

ஓவியர் ஆதிமூலம் அவர்களின் இழப்பு என்பது ஓவிய சமூகத்திற்கு மட்டுமல்ல, தமிழகத்தின் வெகுமக்களுக்கும் தான்.

அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.