Friday, October 21, 2011

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ஆதரவு

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 21.10.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:


கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து இடிந்தகரையில் நடந்து வரும் மக்களின் தொடர் போராட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது.

திருநெல்வேலி மாவட்டதில் உள்ள கூடங்குளத்தில் ரஷ்ய அரசின் உதவியுடன் அணுமின் நிலையம் ஒன்றை மத்திய அரசு அமைத்து வருகிறது. இந்த அணுமின் நிலையம் அபாயகரமானது என்றும், இது செயல்பட தொடங்கினால் ஏற்படும் கதிர்வீச்சால் மக்களுக்கு பேராபத்து உண்டாகும் என அறிவியல் வல்லுநர்களும், சமூக ஆர்வலர்களும் ஆதாரத்துடன் கூறி வருகின்றனர்.

இந்த அணுமின் நிலையத்தை எதிர்த்து இடிந்தகரை கிராமத்தில் கூடங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 18ந் தேதியன்று மூன்றாவது கட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

இதனிடையே, மத்திய அரசு இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய 15 பேர் அடங்கிய நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழுவில் போராடும் மக்களின் பிரதிநிதிகள் யாரும் சேர்க்கப்படவில்லை எனக் கூறி போராட்டக் குழுவினர் நிபுணர் குழுவை நிராகரித்துள்ளனர்.

இந்நிலையில், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மனித உரிமைக்கான மக்கள் கழகத்தின் தமிழக தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், அந்த அமைப்பைச் சேர்ந்த மதுரை வழக்கறிஞர் ரஜினி, பழனிச்சாமி ஆகியோர் நாளை (22.10.2011) இடிந்தகரைக்கு நேரில் சென்று போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளனர்.

மேலும், அம்மக்களிடம் கலந்துரையாடி அவர்களின் உணர்வுகளை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளனர்.

Friday, October 14, 2011

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது தாக்குதல்: இந்துத்துவ சக்திகளுக்கு கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 13.10.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷன் இந்து மதவாத சக்திகளால் தாக்கப்பட்டதை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

நேற்றைய தினம் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்திற்கு எதிரில் உள்ள வழக்கறிஞர்களின் அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டிடத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு அத்துமீறி நுழைந்த இந்து மதவாத கும்பலைச் சேர்ந்தவர்கள் அவரை தாக்கியுள்ளனர். தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த வன்முறை செயலுக்கு ராம் சேனா என்ற அமைப்புதான் காரணம் என்பது சம்பவ இடத்தில் பிடிபட்டவரிடம் நடந்த முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ராம் சேனா கடந்த 2008ம் ஆண்டு கர்நாடகாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மிகப் பெரிய தாக்குதலை நடத்திய வன்முறை கும்பல் என்பது குறிப்பிடத்தக்கது.
 
காஷ்மீர் தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இது கருத்து சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவாலாகும். காஷ்மீர் பிரச்சனையை பேசுவது ஒன்றும் தேச விரோத செயல் அல்ல.

பிரசாந்த் பூஷன் ஒரு சிறந்த சட்ட வல்லுநர் மட்டுமல்ல, சமூக தளங்களில் பல்வேறு பிரச்சனைகளை முன்னெடுத்து, அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் தொடர்ந்து செயலாற்றி வருபவர். ஊழலுக்கு எதிராக போராடி வரும் அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்தவர். குறிப்பாக நீதித்துறையில் நடக்கும் ஊழலுக்கு எதிராக உறுதியாக போராடி வருபவர்.

பிரசாந்த் பூஷனை தாக்கிய அனைவரையும் போலீசார் உடனடியாக கைது செய்வதோடு, இத்தாக்குதல் குறித்த பின்னணியை கண்டறிந்து அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

தமிழையும், தலைவர்களையும் இழிவுப்படுத்திய பேராசிரியரை காப்பாற்றிய செயலர் மேத்யூ சாமுவேல் மீது நடவடிக்கை கேட்டு ஆர்ப்பாட்டம்

தமிழையும், தலைவர்களையும் இழிவுப்படுத்திய பேராசிரியரை காப்பாற்றிய கலைப் பண்பாட்டுத் துறை செயலர் மேத்யூ சாமுவேல் மீது நடவடிக்கை கேட்டு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன் போன்ற தலைவர்களை இழிவுப்படுத்தியும், தமிழ் மொழியை பழித்தும் பேசிய பாரதியார் பல்கலைக்கூட பேராசிரியர் போஸ் மீதான நடவடிக்கையை ரத்து செய்த கலைப் பண்பாட்டுத்துறை செயலர் மேத்யூ சாமுவேல் மீது நடவடிக்கை கோரி 10.10.2011 அன்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் தலைமை அஞ்சலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். இலக்கிய பொழில் இலக்கிய மன்ற தலைவர் பராங்குசம் முன்னிலை வகித்தார்.

சாகித்ய அகாடமி விருதாளர் ம.இலெ.தங்கப்பா தொடங்கி வைத்து கண்டன உரை ஆற்றினார். போராட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் அழகிரி, சிங்காரவேலர் முன்னேற்ற கழகத் தலைவர் சந்திரன், புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை அமைப்பாளர் மூர்த்தி, கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெகன்நாதன், அகில இந்திய பாரவட் பிளாக் கட்சி பொதுச்செயலாளர் முத்து, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் நா.மு.தமிழ்மணி, மக்கள் சிவில் உரிமைக் கழக தலைவர் அபிமன்னன், தமிழ்நாடு முன்ஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் அஷ்ரப், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முகம்மது சலீம், பூவுலகின் நண்பர்கள் அமைப்புத் தலைவர் சீனு.தமிழ்மணி, இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் அபுபக்கர், புதுச்சேரி மக்கள் விழிப்புணர்ச்சி இயக்கச் செயலாளர் பா.சரவணன், தமிழர் களம் தலைவர் பிரகாசு, அத்தியப்பா தொழிலாளர் நலச் சங்கத் தலைவர் சின்னப்பா மற்றும் பல்வேறு அமைப்பு, இயக்கத்தைச் சார்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் தமிழ் உரிமைக் கூட்டமைப்பு தலைவர் புலவர் கி.த.பச்சையப்பன் நிறைவுரை ஆற்றி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

Monday, October 03, 2011

தமிழைப் பழித்து பேசிய பேராசிரியரை காப்பாற்ற முயற்சிக்கும் அதிகாரி மீது நடவடிக்கை: கட்சி, இயக்கங்கள் கோரிக்கை

புதுச்சேரி ஆக. 2: பாரதியார் பல்கலைக்கூடத்தில் தமிழை பழித்துப் பேசிய பேராசிரியரை காப்பாற்ற முயற்சிக்கும் அதிகாரி மேத்யூ சாமுவேல் மீது நடவடிக்கை எடுக்க கட்சி, இயக்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கட்சி, இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை வணிக அவையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் இரா. அழகிரி, தலைவர், தமிழர் தேசிய இயக்கம், கோ. செ. சந்திரன், தலைவர், ம. சிங்காரவேலர் முன்னேற்ற கழகம், கோ. அ. ஜெகன்நாதன், முன்னாள் தலைவர், கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்றம், முனைவர் க. தமிழமல்லன், தலைவர், தனித்தமிழ் இயக்கம், சி. மூர்த்தி, அமைப்பாளர், புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை, உ. முத்து, பொதுச்செயலாளர், அகில இந்திய பார்வட் பிளாக், எம். ஏ. அஷ்ரப் (எ) ரகமத்துல்லா, மாவட்ட தலைவர், கமால் பாஷா, மாவட்ட பொருளாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இர.அபிமன்னன், தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம், கு.இராம்மூர்த்தி, தலைவர், செம்படுகை நன்னீரகம், பெ. பராங்குசம், தலைவர், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம், சீனு.தமிழ்மணி, தலைவர், பூவுலகின் நண்பர்கள், சி. எம். புரட்சிவேந்தன், தலைவர், மக்கள் ஜனசக்தி இயக்கம், புதுவை தமிழ்நெஞ்சன், செயலாளர், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம், சூ.சின்னப்பா, தலைவர், அத்தியப்பா கெமிக்கல்ஸ் தொழிலாளர் நலச் சங்கம், சாது.அரிமாவளவன், பொறுப்பாளர், அட்லஸ் அமைப்பு உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1.  பாரதியார் பல்கலைக்கூடத்தில் இசைத் துறையில் பேராசிரியராக பணியாற்றி வரும் பி.வி.போஸ் என்பவர் மகாத்மா காந்தி பாடல்களைப் பாடுவது நேரத்தை வீணாக்குவது என்றும், மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன் போன்ற தலைவர்களின் சிலைகளுக்கு முன்பு பாடல்கள் பாடுபவர்கள் பிச்சைக்காரர்கள் என்றும், பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து அரசு விழாக்களில் பாடுவதற்கு தகுதியற்றது என்றும் பல்கலைக்கூடத்தில் இசைத்துறை தலைவர் அறையில் நடந்த கூட்டத்தில் கூறியுள்ளார். மேலும், செய்தி மற்றும் விளம்பர துறை சார்பில் நடக்கும் தலைவர்களின் விழாக்களுக்குப் பாடல்கள் பாட மாணவர்களை அனுப்ப மறுத்துள்ளார். மேலும், மாணவர்களுக்கு தமிழில் பாடம் நடத்தாமலும், தமிழ் மொழியைப் பழித்தும் எதிராகவும் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

இதுகுறித்து பல்கலைக்கூட மாணவர்கள் போராட்டம் நடத்தி அரசு உயரதிகாரிகளுக்கு கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த 29.11.2010 அன்று அவர் மீது துறை ரீதியான விசாரணக்கு உத்தரவிடப்பட்டு, அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். அப்போதைய கலைப் பண்பாட்டுத் துறைச் செயலர் கண்ணாஜி தலைமையில் நடந்த விசாரணையில் தமிழறிஞர் மன்னர் மன்னன் உட்பட பல்கலைக்கூட பேராசிரியர்கள் 8 பேர் வாக்குமூலம் அளித்து சாட்சியம் கூறியுள்ளனர். இதன் அடிப்படையில் கடந்த 07.02.2010 அன்று செயலர் கண்ணாஜி ‘எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் பணிநீக்கம் செய்யப்படுவீர்’ என எழுத்து மூலம் அவருக்கு எச்சரிக்கை மெமோ (Warning Memo) விடுத்துள்ளார். இந்நிலையில், கலைப் பண்பாட்டுத் துறைச் செயலராக பொறுப்பேற்ற மேத்யூ சாமுவேல் தலைவர்களை இழிவுப்படுத்திய போஸ் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அவருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மெமோவை ரத்து செய்து கடந்த 06.05.2011 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த போஸ் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சுதந்திரத்திற்காகவும், சமூக விடுதலைக்காகவும், மொழி உரிமைக்காவும் அர்ப்பணிப்போடு பணியாற்றிய தலைவர்களையும், தமிழையும் இழிவுப்படுத்தி பேசிய பேராசிரியர் போஸ் மீதான நடவடிக்கையை ரத்து செய்ததன் மூலம் செயலர் மேத்யூ சாமுவேல் வெளிப்படையாகவே தவறுக்கு துணைப் போனதோடு, சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்டுள்ளார். மேலும், போஸ் தன் சொந்த மாநிலமான கேரளவை சேர்ந்தவர் என்பதால்தான் அவரை காப்பாற்ற மேத்யூ சாமுவேல் முயற்சித்துள்ளார் எனத் தெரிகிறது.
மேத்யூ சாமுவேலின் இந்த போக்கை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. எனவே, புதுச்சேரி அரசு இதுகுறித்து உடனடியாக தலைமைச் செயலர் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது. குற்றமிழைத்த பேராசிரியர் போஸ் மீதான விசாரணையை தொடர்ந்து நடத்தி அவரை பணிநீக்கம் செய்ய வேண்டுமெனவும், தவறுக்கு துணைப் போன செயலர் மேத்யூ சாமுவேல் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இக்கூட்டம் அரசை வலியுறுத்துகிறது.

2. பாரதியார் பல்கலைக்கூடத்தில் இசைத்துறையில் பணியாற்றும் பேராசிரியர்  அன்னபூர்னா என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் வகுப்பு எடுக்கும் வீணை பிரிவில் மாணவர்கள் சேராததால், அவர் வேலையே செய்யாமல் சம்பளம் பெற்று வருகிறார். கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாரதியார் பல்கலைக்கூடத்தில் அவருக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் தண்டமாக சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. பாரதியார் பல்கலைக்கூடத்தில் இருந்து பேராசிரியர்களை பாலர் பவனுக்கு இடமாற்றம் செய்யலாம் என்ற ஆட்சிமன்ற குழுவின் முடிவின்படி பேராசிரியர் அன்னபூர்னாவை உடனடியாக பாலர் பவனுக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென இக்கூட்டம் அரசை வலியுறுத்துகிறது.

3. பாரதியார் பல்கலைக்கூடத்தில் உறுப்பினர் செயலாராக இருக்கும் குப்புசாமி என்பவர் தொடர்ந்து தேவையில்லாத பிரச்சனைகளை கிளப்பி பல்கலைக்கூட ஊழியர்களை அச்சுறுத்தி அவர்களிடம் இருந்து லஞ்சமாக பணத்தைக் கறப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் அரசு உயரதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர். அதன் பின்னரும்கூட குப்புசாமி தன் போக்கை மாற்றிக் கொண்டதாக தெரியவில்லை. இவர் ஏற்கனவே வீட்டு வசதி வாரியத்தில் பணியாற்றிய போது செய்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு அவர் மீது தற்போது புதுச்சேரி நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக குப்புசாமி மீது துறை விசாரணைக்கு உத்தரவிட்டு அவரை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
4. மேற்சொன்ன கோரிக்கைகளை முன் வைத்து வரும் 10.10.2011 திங்களன்று காலை 10 மணிக்கு, தலைமைச் செயலகம் அருகில், அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Saturday, September 17, 2011

மனித நேயத்திற்கு எதிராக காங்கிரசார் போராட்டம் நடத்துவதா? மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கண்டனம்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 16.09.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மூவரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வலியுறுத்தி மனித நேயத்திற்கும், மனித உரிமைக்கும் எதிராக அரசியல் லாபத்திற்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய காங்கிரசாரின் போக்கை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற கோரி காங்கிரசார் இன்று புதுச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளனர். காங்கிரசாரின் இப்போராட்டம் மனித நேயமுடைய அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்ததோடு, கடும் கண்டனத்திற்குரியதாகும்.

ராஜீவ் கொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதிகள் ஜெயின், வர்மா ஆகியோரின் தலைமையிலான விசாரணை கமிஷன்கள் அளித்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு பல்நோக்கு விசாரணைக் குழு ஒன்றை அமைத்து, அந்த குழுவும் ராஜீவ் கொலையின் பின்னணி பற்றி விசாரணை செய்து வருகிறது.

இவ்விசாரணை முற்றுப் பெறாத நிலையில் அவ்வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள மூவரையும் தூக்கிலிடுவது எந்த வகையில் நியாயம்? ஒருவேளை இந்த விசாரணையில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டால் தூக்கிலிடப்பட்டவர்களின் உயிர்கள் திரும்ப வருமா?
காங்கிரசாருக்கு உண்மையில் ராஜீவ்காந்தி மீது அன்பிருந்தால் இந்த விசாரணையை வேகப்படுத்தி, இக்கொலைக்கு பின்னணியில் உள்ள அனைவரையும் கண்டறிந்து சட்டத்தின்முன் நிறுத்த கோருவதுதான் சரியான வழி முறையாக இருக்கும். அதைவிடுத்து மூவரையும் தூக்கிலிட உண்ணாவிரதம் இருப்பது சரியல்ல.

மூவரின் உயிரோடு தொடர்புடைய மனித உரிமைப் பிரச்சனையை காங்கிரசார் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதைப் பொதுமக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். உடல்நலம் குன்றி வெளிநாட்டில் சிகிச்சைப் பெற்று சோனியா காந்தி நாடு திரும்பிய பின்னர்தான் இதுபோன்ற போராட்டங்கள் நடப்பதைக் கவனிக்க வேண்டும்.

ராஜீவ்காந்தி படுகொலையும்  பதிலளிக்கப்படாத கேள்விகளும், கேட்கப்படாத கேள்விகளும் (The Assassination of Rajiv Gandhi – Unansered Questions and Unasked Queries)  என்ற தலைப்பில் சுப்பிரமணியன் சுவாமி எழுதிய புத்தகத்தில் ராஜீவ் காந்தி கொலையில் தற்போதைய காங்கிரஸ் தலைவருக்கு தொடர்பு உள்ளது என கூறியுள்ளதற்கு காங்கிரசார் யாரும் இதுவரையில் பதில் அளிக்காமல் மௌனமாக இருப்பது ஏன்? ராஜீவ் கொலையில் அவிழ்க்கப்படாத முடிச்சுகள் பல உள்ள நிலையில் குற்றவாளிகள் எனக் கூறி மூவரையும் தூக்கிலிடுவது சரியா? என்பது பற்றி காங்கிரசார் விளக்க வேண்டும்.

இன்று உலக அளவில் ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் கணக்குப்படி 139 நாடுகள் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழித்துள்ளன. இந்தியா உள்ளிட்ட 58 நாடுகள் மரண தண்டனையை நடைமுறையில் வைத்துள்ளன. மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டுமென உலகம் தழுவிய பிரச்சாரமும் போராட்டமும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் மரண தண்டனைக்கு ஆதரவாக காங்கிரசார் போராடுவது உலக அரங்கில் இந்தியாவிற்கு மிகப் பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தும்.

“சிறைத் தண்டனையை திரும்பப் பெற முடியும். உடலுக்கு ஊறு செய்யும் தண்டனைக்கு ஆளானவருக்கும் கூட இழப்பீடு செய்ய முடியும். ஆனால், ஒருவரை சாகடித்து விட்டால், அந்த தண்டனையை திரும்பப் பெற முடியாது. இழப்பீடு செய்யவும் முடியாது” என மகாத்மா காந்தி கூறியதை மரண தண்டனைக்கு ஆதரவாக போராடும் காங்கிரசாருக்கு நினைவுப்படுத்த விரும்புகிறோம்.

இந்நிலையில், அரசியல் லாபத்திற்காக காங்கிரசார் நடத்தும் போராட்டத்தை பொது மக்கள் புறந்தள்ளி மனித உரிமைகளைக் காக்க உறுதியேற்க வேண்டுமென மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

மரண தண்டனையை ரத்து செய்ய கோரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, ஆக. 31: மரண தண்டனையை ரத்து செய்ய கோரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பினர் இன்று (ஆகஸ்ட் 31) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும், பாராளுமன்றம் தாக்குதல் வழக்கில் அப்சல் குரு உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள தூக்கு தண்டனை சிறைவாசிகளின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும், நாகரீக சமூகத்திற்கு ஏற்படையதல்லாத, மனித உரிமைகளுக்கு எதிரான மரண தண்டனையை சட்டப் புத்தகத்தில் இருந்து முற்றிலுமாக நீக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் சுதேசி பஞ்சாலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமை தாங்கினார். தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி தொடக்க உரையாற்றினார். மனித உரிமை கழக தலைவர் சக்திவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகன்நாதன், புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை அமைப்பாளர் மூர்த்தி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச்செயலாளர் உ.முத்து, மதிமுக முன்னாள் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வேணுகோபால், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது சலீம், கான்சிராம் பகுஜன் சமாஜ் கட்சியின் அமைப்பாளர் முனுசாமி, செம்படுகை நன்னீரகம் தலைவர் ராம்மூர்த்தி, மக்கள் ஜனசக்தி இயக்க தலைவர் புரட்சிவேந்தன், மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் அபிமன்னன், இலக்கிய பொழில் இலக்கிய மன்ற தலைவர் பெ.பராங்குசம், கலைமாமணி வேல்முருகன், புதுவை தமிழ் எழுத்தாளர் கழக செயலாளர் தமிழ்நெஞ்சன், ஹோப் நிறுவன் பொறுப்பாளர் விக்டர், ஆதிதிராவிடர் உரிமைக் கழகத் தலைவர் பாலசுந்தரம், கிராமப்புற கல்வி, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் மேம்பாட்டு இயக்கம், தமிழர் களம் பிரகாசு, அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் தொழிலாளர் நலச் சங்கத் தலைவர் சின்னப்பா, புதுச்சேரி மக்கள் விழிப்புணர்ச்சி இயக்க செயலாளர் சரவணன், மரண தண்டனைக்கு எதிரான இளைஞர் மாணவர் இயக்க தலைவர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

Monday, August 22, 2011

ராஜீவ் கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனையாக குறைக்க வலியுறுத்தல்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 21.08.2011 அன்று காலை 10 மணியளவில் புதுச்சேரி ரெவே சொசியால் சங்கத்தில் கட்சி மற்றும் சமூக அமைப்புகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, ம. சிங்காரவேலர் முன்னேற்ற கழகத் தலைவர் கோ.செ.சந்திரன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் உ.முத்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் எம்.ஏ.அஷ்ரப் (எ) ரகமத்துல்லா, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முகம்மது சலீம், புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, மக்கள் சிவில் உரிமைக் கழக இணைச் செயலாளர் ஜா.பாஸ்கரன், செம்படுகை நன்னீரகம் தலைவர் கு.இராம்மூர்த்தி, இலக்கிய பொழில் இலக்கிய மன்ற தலைவர் பெ.பராங்குசம், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் அபுபக்கர், பூவுலகின் நண்பர்கள் தலைவர் சீனு. தமிழ்மணி, மக்கள் ஜன்சக்தி இயக்கத் தலைவர் புரட்சிவேந்தன், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் புதுவை தமிழ்நெஞ்சன், அத்தியப்பா கெமிக்கல்ஸ் தொழிலாளர் நலச் சங்கத் தலைவர் சூ.சின்னப்பா, கிராமப்புற கல்வி, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் மேபாட்டுக் கழகத் தலைவர் மு.மஞ்சினி, தமிழர் களம் பொறுப்பாளர் கோ.பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்துவிட்ட நிலையில் தூக்குத் தண்டனயை எதிர்நொக்கி உள்ள ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் மற்றும் பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தண்டனைப் பெற்று சிறையிலுள்ள அப்சல் குரு உள்ளிட்ட அனைவரின் மரண தண்டனையையும் ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணை இன்னமும் முற்றுப் பெறாத நிலையில் அவ்வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்கிலிடுவது இயற்கை நீதிக்கு எதிரானது என்பதோடு, ஒருவேளை இவ்விசாரணையில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டால் தூக்கிலிடப்பட்டவர்களின் உயிர்கள் திரும்பவும் வராது என்பதாலும் மரண தண்டனையை ரத்து செய்வது அவசியம் என்பதை இக்கூட்டம் சுட்டிக்காட்டுகிறது.

குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்து விட்ட பின்னரும் கூட 1957-ல் கேரளத்தில் கம்யூனிஸ்ட் தலைவர் சி.ஏ. பாலன், தமிழகத்தில் 1974-ல் நக்சலைட் தலைவர் புலவர் கலியபெருமாள் ஆகியோரது மரண தண்டனை கேரள மற்றும் தமிழக அரசுகளின் முயற்சியால் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, இவற்றை முன்னுதாரணமாக கொண்டு பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது மரண தண்டனையை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

மரண தண்டனை விதிக்கப்பட்டு இரண்டு ஆண்டு காலத்திற்கும் மேலாக அது நிறைவேற்றப்படாததால் ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் அந்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல் ஜியான்சிங் எதிர் பஞ்சாப், டி.வி. வேதீஸ்வரன் எதிர் தமிழ்நாடு, தாயாசிங் எதிர் இந்திய அரசு போன்ற வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பல ஆண்டுகள் கழிந்தும் அது நிறைவேற்றப்படாததால் அத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையிலும், பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்டோர் 20 ஆண்டு காலம் சிறையில் உள்ளதாலும் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதில் சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லை என்பதை இக்கூட்டம் சுட்டிக்கட்டுகிறது.

சர்வ தேச மனித உரிமை அமைப்பான “ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்” கணக்குப்படி உலக அளவில் 139 நாடுகள் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழித்துள்ளன. இந்தியா உள்ளிட்ட 58 நாடுகள் மரண தண்டனையை நடைமுறையில் வைத்துள்ளன. எனவே, இந்திய அரசு மனித உரிமைக்கு எதிரான மரண தண்டனையை சட்ட புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27.08.2011 சனிக்கிழமை காலை 10 மணியளவில் புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

Wednesday, May 18, 2011

ஐ.நா. அறிக்கைப்படி இலங்கையில் நடந்த போர்க் குற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 18.05.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

இலங்கையில் நடந்த போரின் போது அரங்கேறிய மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா. சபை அறிக்கையை ஏற்று, அங்கு நடந்த போர்க் குற்றம் பற்றி உரிய விசாரணைக்கு உத்தரவிட இலங்கை அரசுக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. சபை 3 பேர் அடங்கிய உயர்மட்ட குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பி வைத்தது. இக்குழு அங்கு ஆய்வு செய்து கடந்த மார்ச் 31 அன்று தனது 214 பக்க அறிக்கையை ஐ.நா. சபையிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை பரிசீலித்த ஐ.நா. சபை கடந்த ஏப்ரல் 26 அன்று அதனை முறைப்படி வெளியிட்டது.

இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டவர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் மனித உரிமையில் நம்பிக்கை உள்ளவர்கள் மத்தியில் இந்த அறிக்கை அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. குறிப்பாக இலங்கை அரசு மீது 5 குற்றச்சாட்டுகளும், போராடிய இயக்கத்தின் மீது 6 குற்றச்சாட்டுகளும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

இலங்கை அரசு போரில் சிக்கியுள்ள பொதுமக்களின் உயிருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் செயல்படுவோம் என உறுதி கூறியதை மீறி அப்பட்டமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைப் பிரகடனங்களையும், சட்டங்களையும் வெளிப்படையாக மீறியுள்ளது.

செப்டம்பர் 2008 முதல் 19 மே 2009 வரையில் நடந்த போரில் வன்னிப் பகுதியில் மட்டும் 3 லட்சத்து 30 ஆயிரம் பொதுமக்கள் போரில் சிக்கித் தவித்துள்ளனர் என்றும், 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர் எனவும் ஐ.நா. அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் மீது கொத்துக் கொத்தாக குண்டு வீசி தாக்குதல், மருத்துவமனை மீது குண்டு வீசி தாக்குதல், போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் மறுப்பு, போரினால் இடம்பெயர்ந்த பொதுமக்கள் மற்றும் விடுதலைப்புலிகள் என சந்தேகப்படுவோர் மீது மனித உரிமை மீறல்கள், போர் நடந்த பகுதிக்கு வெளியே ஊடகத் துறையினர், அரசை விமர்சித்தவர்கள் மீது நடந்த மனித உரிமை மீறல்கள் என 5 குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு மீது ஐ.நா. சபை சுமத்தியுள்ளது.

மேலும், இந்த கொடிய போர்க் குற்றம் குறித்து இலங்கை அரசு உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், போரில் உயிரிழந்தோர் உடல்களைக் கண்டுபிடித்து இறுதி சடங்கு செய்வதற்காக அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும், போரினால் காணாமல் போனவர்கள் பற்றி விசாரித்து கண்டுபிடிக்க வேண்டும், முகாம்களில் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் அவர்களது வீடுகளுக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உரிய நிவாரணம் வழங்க வேண்டும், இலங்கையில் நிலவும் அவசர கால உத்தரவை திரும்ப பெற்று, அங்கு அமலிலுள்ள அடக்குமுறை சட்டங்களை சர்வதேச மனித உரிமை பிரகடனங்களுக்கு உட்பட்டு திருத்த வேண்டும் என பல்வேறு பரிந்துரைகளை இலங்கை அரசுக்கு கூறியுள்ளது.

ஆனால், ஐ.நா. சபையின் அறிக்கையை குப்பையில் போட்ட இலங்கை அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளையும் நிறைவேற்ற இதுநாள்வரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது உலகம் முழுவதுமுள்ள தமிழர்களைக் கவலை அடைய செய்துள்ளது. இலங்கை அரசின் இந்த போக்கை மனித உரிமையில் அக்கறை உள்ளவர்கள் கண்டிக்க வேண்டும்.

இலங்கையில் நடந்த போர்க் குற்றம் பற்றியும், அதற்கு முழுப் பொறுப்பான இலங்கை அதிபர் ராஜபட்சே மீது போர்க் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடத்தப்படவும் சர்வதேச சமுகம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

Monday, May 16, 2011

புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்கைக்கு மருத்துவ கவுன்சில் தடை: கண்டனம்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 05.05.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியில் அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள், மருத்துவ கருவிகள் போதுமான அளவு இல்லாத காரணத்தை சுட்டிக்காட்டி இந்த கல்வி ஆண்டின் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை ரத்து செய்து அகில இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு புதுச்சேரி அரசு பொறுப்பேற்பதுடன், இதுகுறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை உடனே வெளியிட வேண்டுமென மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி அரசு சுகாதார துறை செயலர், புதுவை பல்கலைக்கழகப் பதிவாளர், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ஆகியோருக்கு அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் இணைச் செயலாளர் டாக்டர் தவீந்தர் குமார் 11.04.2011 தேதியிட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில், புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் 2011 – 2012 கல்வி ஆண்டிற்கான இரண்டாவது அணி எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான அனுமதி அளிப்பதற்குப் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா மற்றும் போதுமான ஆசிரியர்கள் உள்ளனரா என்பது குறித்து அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் மதிப்பீட்டுக் குழு கடந்த 2011, பிப்ரவரி 18, 19 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்தது.

இக்குழு தாக்கல் செய்த மதிப்பீட்டு அறிக்கையை ஏற்று மருத்துவ கவுன்சிலின் ஆட்சிமன்ற குழு அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள், மருத்துவ கருவிகள் போதுமான அளவு இல்லாத காரணங்களாலும், மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ள பிற குறைபாடுகள், கருத்துக்கள் அடிப்படையிலும் 2011 – 2012 கல்வி ஆண்டிற்கான இரண்டாவது அணி எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை ரத்து செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் இந்த உத்தரவால் அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டிற்கான 150 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடத்த முடியாது. இதனால், அரசு மருத்துவ கல்லூரியில் குறைந்த கட்டணத்தில் எம்.பி.பி.எஸ். படித்து டாக்டராவோம் என மாணவர்கள் கண்ட கனவு நிறைவேறாமல் தகர்ந்துள்ளது. 

மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் புதுச்சேரி அரசு அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள், போதிய ஆசிரியர்கள் நியமனம் போன்ற மருத்துவ கவுன்சில் சட்ட விதிகளில் கூறப்பட்டுள்ளவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்த காரணத்தால்தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள 7 தனியார் மருத்துவ கல்லூரிகள் அரசு ஒதுக்கீடான 50 சதவீத எம்.பி.பி.எஸ். இடங்களைக்கூட வழங்காமல் மாணவர்களை ஏமாற்றி வருகின்றன. தனியார் மருத்துவ கல்லூரிகளை நிர்பந்தித்து 50 சதவீத இடங்களைப் பெற அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மாணவர்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து எம்.பி.பி.எஸ். இடங்களைப் பெற வேண்டியுள்ளது. இதனால், ஏழை, எளிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவ கல்வி பயில முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டிருப்பதன் மூலம் தனியார் மருத்துவ கல்லூரிகள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க புதுச்சேரி அரசே வழிவகுத்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகங்கள் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அரசு மருத்துவ கல்லூரியை வளர்ச்சி அடைய செய்யாமல் முடக்கி, ஒரு கட்டத்தில் மூடிவிட புதுச்சேரி அரசு முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் காரைக்காலில் புதிதாக அரசு மருத்துவ கல்லூரி ஒன்று தொடங்கப்படும் என அறிவித்துள்ளார். ஏற்கனவே தொடங்கப்பட்ட அரசு மருத்துவ கல்லூரியை மேம்படுத்தவே முடியாத இவர்கள் புதிதாக மருத்துவ கல்லூரி தொடங்குவோம் எனக் கூறுவது மக்களை ஏமாற்றுவதாகும்.

எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக அரசு மருத்துவ கல்லுரியில் இந்த ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதியை பெற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் மாணவர்கள், பொதுமக்களை ஒன்றுதிரட்டி அரசை எதிர்த்துப் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கிறோம்.

இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டி அனைத்துக் கட்சி மற்றும் இயக்கத் தலைவர்களுக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளோம்.

காவல் மரணம்: மேட்டுப்பாளையம் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு ஐ.ஜி.யிடம் மனு

மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் தாமோதரன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை தற்காலிக பணிநீக்கம் செய்யவும், கரிக்கலாம்பாக்கம் கிராம பஞ்சாயத்து தலைவர் ஜெகன்நாதன் மீது தொடர்ந்து பொய் வழக்குப் போட்டு வரும் தெற்குப் பகுதி எஸ்.பி. நந்தகோபால் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய இயக்கங்கள் சார்பில் இன்று (2.5.2011) ஐ.ஜி (பொறுப்பு) சுக்லா, டி.ஐ.ஜி. அதுல் கத்தார் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமையில் கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பாளர் கோ.அ.ஜெகன்நாதன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, ம.சிங்காரவேலர் முன்னேற்ற கழகத் துணைத் தலைவர் உத்தராடம், செயலாளர் மனோஜ், மக்கள் சிவில் உரிமைக் கழகத் தேசிய கவுன்சில் உறுப்பினர் இர.அபிமன்னன், அகில இந்திய பார்வட் பிளாக் கட்சி பொதுச்செயலாளர் உ.முத்து, கான்சிராம் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை செயலாளர் கஸ்பர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் எம்.ஏ. அஷ்ரப் (எ) ரகமத்துல்லா, வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு பொறுப்பாளர் மு.மதுரை, கல்வி, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மேம்பாட்டு கழகத் தலைவர் அ.மஞ்சினி, மக்கள் விழிப்புணர்ச்சி இயக்க செயலாளர் பா.சரவணன், மக்கள் மன்றத் தலைவர் மு.நாராயணசாமி, ஈழத் தமிழர் ஆதரவு கூட்டமைப்பு பொறுப்பாளர் கலைப்புலி சங்கர், சதுப்புநில காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தலைவர் செல்வ.மணிகண்டன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழு உறுப்பினர் சு.காளிதாஸ் ஆகியோர் இன்று காலையில் ஐ.ஜி (பொறுப்பு) சுக்லா, டி.ஐ.ஜி. அதுல் கத்தார் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜெயசங்கர் கொலை வழக்கு விசாரணைக்காக மேட்டுப்பாளையம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தாமோதரன் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி, சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வழக்கின் முக்கிய சாட்சிகளை குற்றமிழைத்த போலீசார் மிரட்டி வருகின்றனர். எனவே, இந்த காவல் நிலைய கொலையோடு தொடர்புடைய மேட்டுப்பாளையம் காவல்நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாரை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும். சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகன்நாதன், அவரது குடும்பத்தினர் மீது தெற்குப் பகுதி எஸ்.பி. நந்தகோபால் உத்தரவின் பேரில் போலீசார் இதுவரையில் 6 பொய் வழக்குகள் போட்டுள்ளனர். மேலும், கடந்த ஏப்ரல் 12ந் தேதியன்று இரவு, தேர்தலுக்கு முந்தைய நாள் எஸ்.பி. நந்தகோபால் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்நாதன் வீட்டை சுற்றி வளைத்து அவரையும் அவரது குடும்பத்தினரையும் சட்டவிரோதமாக வீட்டுக் காவலில் வைத்தனர். அப்போது பொதுமக்கள் முன்னிலையில் எஸ்.பி. நந்தகோபால் வெளிப்படையாக ஆளும் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பேசியுள்ளார். இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்ட எஸ்.பி. நந்தகோபால் மற்றும் போலீசார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஐ.ஜி. (பொறுப்பு) சுக்லா, டி.ஐ.ஜி. அதுல் கத்தார் ஆகியோர் அதன்மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கட்சி, இயக்கத் தலைவர்களிடம் உறுதி அளித்தனர்.

இந்நிலையில், வரும் 4ந் தேதியன்று கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த ஐ.ஜி அலுவலக முற்றுகைப் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.