Sunday, April 25, 2021

தமிழறிஞர் பிரான்சுவா குரோ மறைந்தார்: தமிழுக்குப் பேரிழப்பு!

நாங்கள் எல்லாம் செல்லமாக “தாத்தா” என்று அழைக்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் பிரான்சுவா குரோ (Francois Gros) தனது 88ஆவது அகவையில் காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் இந்தியவியல் துறையின் ஆய்வாளரான கண்ணன்.எம். மூலம் அறிமுகமானவர். கற்றுத் தேர்ந்த, அறிவார்ந்தத் தமிழறிஞர். பழகுவதற்கு எளிய மனிதர். அவருடன் தேநீர் கடையில் தேநீர் பருகியபடி உரையாடிய நாட்களை நினைத்தால் கண்கள் கலங்குகின்றன. நிறை குடம் அவர். என்றும் தளும்பியது கிடையாது.

1960களின் தொடக்கத்திலிருந்து தமிழில் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த பிரான்சுவா குரோ (1933 – 2021) பாரீசில், பாரீஸ் பல்கலைக்கழகத்தின் Ecole Pratique Des Hautes Etudes என்ற உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தென்னிந்திய வரலாறு மற்றும் மொழியியலுக்கான (Philology) பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இந்தியவியல் துறையில் தனது ஆராய்ச்சிப் பணியைத் துவக்கிய பிரான்சுவா குரோ 1977 முதல் 1989 வரை தூரக் கிழக்கு நாடுகளுக்கான பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராகப் பணிபுரிந்தார்.

சங்கத் தமிழிலிருந்து தற்காலத் தமிழ்வரை நீளும் இவரது ஈடுபாடு பல்வேறு தமிழ்ப் படைப்புகளைப் பிரெஞ்சு மொழிக்குக் கொண்டு சென்றுள்ளது. பரிபாடல் (1968) திருக்குறள் காமத்துப்பால் (1993) இரண்டும் பிரெஞ்சில் நூல் வடிவம் பெற்றுள்ளன. காரைக்கால் அம்மையார் குறித்த நூலையும் பிரெஞ்சுக்கு மொழிபெயர்த்துள்ளார். தற்காலத் தமிழ்ச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பும்  வெளிவந்துள்ளது.

அவர் இடைக்காலத் தென்னிந்திய வரலாறு மற்றும் தொல்லியல் குறித்த நூல்களும் வெளியிட்டுள்ளார். குறிப்பாக உத்திரமேரூர், திருவண்ணாமலை  உள்ளிட்ட கோயில் நகரங்களின் வரலாறு  பற்றியும் ஆய்வு செய்துள்ளார்.

பிரான்சுவா குரோ, கண்ணன்.எம். ஆகியோர் இணைந்து பாரதியார் தொடங்கி ஆத்மாநாம், பிரமிள், வில்வரத்னம் (இலங்கை) போன்றோரது கவிதைகள் உள்ளடக்கிய 200 கவிதைகளைப் பிரெஞ்சில் மொழிபெயர்த்துள்ளனர். அதேபோல், தேர்த்ந்டுக்கப்பட்ட 20 சிறுகதைகளையும் பிரெஞ்சில் மொழிபெயர்த்துள்ளனர்.  

தென்னிந்திய வரலாற்று அட்லஸ் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில் கி.பி. 1600  வரலாற்றுக்கு முந்தைய தென்னிந்திய வரலாற்றை வரைபடங்களாகச் சித்தரித்துள்ளார்.  இது உலகிலேயே சிறந்த, அரிய தொகுப்பு என்கிறார் கண்ணன்.எம்.

இலக்கியம் மட்டுமன்றி வரலாறு, பண்பாடு, தொல்லியல் மீதும் ஆர்வம் கொண்டிருந்தார். புகழ்ப் பெற்ற வரலாற்றிஞர் ரொமீலா தாப்பரின் சகோதரர்  ரோமேஷ் தாப்பருடன் நட்பாக இருந்துள்ளார். அதேபோல், பிபின் சந்திரா, லோகேஷ் சந்திரா போன்றோருடன் நட்புடன் இருந்துள்ளார்.  கலை வரலாற்றறிஞர் கபில வட்சாயயன் உடனும் நட்புடன் இருந்தார். அவருடனான நட்பு பயன் தரக் கூடியது என்று பிரான்சுவா குரோ கூறியுள்ளார்.

புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தஞ்சைப் பெரிய கோயில், கங்கைகொண்டசோழபுரம் கோயில் குறித்த நூல்கள் வெளிவர காரணமாக இருந்துள்ளார்.

பிரெஞ்சு, சமற்கிருதம், லத்தீன, கிரேக்க மொழிகள் மட்டுமின்றி தமிழிலும் புலமைப் பெற்ற அறிஞராக இருந்துள்ளார். 1994-இல் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நடந்த மாநாடு தவிர்த்து, 1996-இல் கோலாலம்பூர் தொடங்கி 1995-இல் தஞ்சாவூரில் நடந்தது வரையில் அனைத்து உலகத் தமிழ் மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளார். இம்மாநாடுகளில் கல்விக் கற்பிக்கும் முறைக் குறித்து அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டிருந்ததாகவும்  கூறியுள்ளார்.

பிரான்சுவா குரோவிற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின்கீழ் செயல்படும் மத்திய செம்மொழி உயராய்வு நிறுவனத்தால் வழங்கப்படும் 2008 – 2009 ஆண்டிற்கான குறள்பீட விருதும், ரூ. 5 லட்சம் தொகையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.  

பிரான்சுவா குரோ பிரான்சின் தென்கிழக்கில் உள்ள லியோன் நகரத்தில் வாழ்ந்துவந்தார்.  ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதக் காலத்தைப் புதுச்சேரியில் தனது ஆராய்ச்சிப் பணிகளுக்காகச் செலவிட்டு வந்தார். அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் புதுச்சேரிக்கு வராமல் பிரான்ஸ் நாட்டிலேயே தங்கியிருந்தார். பிரான்சுவா குரோ தன்னிடமிருந்த ஆயிரக்கணக்கான அரிய நூல்களைக் கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்துக்கு வழங்கியுள்ளார்.

“தமிழ் மொழிக்குச் செம்மொழித் தகுதி அறிவித்தது மட்டும் போதாது. அருங்காட்சியகத்தில் உள்ள செவ்வியல் கலைப்பொருட்கள் இறந்துப் போய்விடுகின்றன. அவற்றை அருங்காட்சியகத்தில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும். அவற்றை வெகுமக்களின் பொது பண்பாட்டிற்குள் எடுத்துச் செல்ல வேண்டும். இதைச் செய்வதற்கான ஆய்வு, சிறந்த கல்வி கற்பிக்கும் முறைகள், தமிழில் கல்விச் சார்ந்த மொழிநுட்பங்கள் (Education tools in Tamil) உருவாக்க வேண்டும். இது தமிழ்நாடு மேலைநாடுகளுக்குத் தமிழைக் கற்றுத் தர ஏதுவாக இருக்கும்” என்று பிரான்சுவா குரோ கூறியுள்ளார்.

ஒரே மகனான இவருக்கு, பொறிஞரான அவரது தந்தையார் இலக்கிய நூல்களைக் கொடுத்து ஊக்கப்படுத்தி உள்ளார். தந்தையின் ஊக்கத்தால் உலகப் புகழ்ப் பெற்ற அறிஞராக மிளிர்ந்துள்ளார் பிரான்சுவா குரோ.

பிரான்சுவா குரோவின் மறைவு தமிழ் செவ்வியல் இலக்கியத்திற்கு மட்டுமின்றி, நவீனத் தமிழ் இலக்கியத்திற்கும் பேரிழப்பாகும். மொத்தத்தில், தமிழ் மொழிக்குப் பேரிழப்பாகும்.

துயரமான இத்தருணத்தில் அவருடனான உறவை எண்ணிப் பெருமை அடைகிறேன்..

அவருக்கு என் ஆழ்ந்த அஞ்சலி..

கோ.சுகுமாரன்

Sunday, April 18, 2021

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை சாதித்தோம்: அய்யா ஆனைமுத்து பாராட்டினார்!

2004-இல், புதுச்சேரியில் வன்னியர், மீனவர், நாவிதர், முடிதிருத்துவோர், ஒட்டர், எருகுலா உள்ளிட்ட சாதிகளுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென ‘சமூக நீதிப் போராட்டக் குழு’ சார்பில் வணிக அவையில் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றினோம்.

கம்பன் கலையரங்கில் ‘சமூக நீதி மாநாடு’ நடத்தினோம். மிகவும் பிற்படுத்தப்படோர் சமூக அமைப்புத் தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஒருங்கிணைத்தோம். அய்யா ஆனைமுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு, தனக்கே உரிய பாணியில் மிகச் சிறந்த உரையாற்றினார்.

அப்போழுது முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சி. அவரைப் பலமுறை சந்தித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டையினால் விளையும் பயன்களை எடுத்துச் சொன்னோம். அதோடு, புதுச்சேரி யூனியன் பிரதேச அரசுக்கு இடஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளதையும் சட்ட ரீதியாக விளக்கினோம்.

நாங்கள் கூட்டம் நடத்தி சரியாக மூன்று மாதத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியில் மட்டும் 20% வழங்கி அரசாணைப் பிறப்பித்தார் முதல்வர் ரங்கசாமி. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி தங்கமணி அரசுக்கு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அரசாணை நகல் அய்யா ஆனைமுத்து பார்த்து சரியென சொன்ன பின்னால் பிறப்பிக்கப்பட்டு, அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

இந்த வரலாற்று சாதனைக் குறித்து ‘சிந்தனையாளன்’ இதழில் தலையங்கம் எழுதினார் அய்யா ஆனைமுத்து. இதற்காக சீனு.அரிமாப்பாண்டியன் வழியாக என்னிடமிருந்த ஆதாரங்கள், யார் யார் போராடினார்கள் போன்ற விவரங்களைப் பெற்று அவற்றை முறையாக பதிவு செய்திருந்தார்.

முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு கிடைக்கப் பாடுபட்ட அனைவரது பெயர்களையும் குறிப்பிட்டு எழுதியிருந்தார். அதில் என்னைக் குறிப்பிட்டதோடு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை மூன்றே மாதத்தில் சாதித்த என்னைப் பெருமைப்படுத்தி எழுதியிருந்தார்.

பின்னர், 2006-இல் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலைவாய்ப்பிலும் 20% இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டார் முதல்வர் ரங்கசாமி. இந்த இடஒதுக்கீட்டினால் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த விளிம்புநிலை மக்கள் பெரிதும் பயன்பெற்றனர், பயன்பெற்று வருகின்றனர்.

நான் பெரியாரை பார்த்ததில்லை. வாழும் பெரியாராக வாழ்ந்து காலமான அய்யா ஆனைமுத்து என்னைப் பாராட்டியது உலகளவில் எந்தவொரு பெரிய விருதைக் காட்டிலும் சிறந்தது. அதைவிட வேறு என்ன பெருமை வேண்டும்.

 

Wednesday, April 14, 2021

மேலவளவு தலித்துகள் படுகொலை வழக்கு: அதிமுக, திமுகவும் ஒரே நிலைதான் எடுத்தன...

கர்ணன் படச் சர்ச்சைக் குறித்து பலரும் பேசி வருகின்றனர். 1995 என்பதற்குப் பதிலாக 1997 என்று கொடியன்குளம் சம்பவம் நடந்த காலத்தை மாற்றி சொல்லியுள்ளது தவறுதான். 1991 – 1996 ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி. 1996 – 2001 வரை கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி. உதயநிதி ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, அதனைத் திருத்திவிடுவதாக இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியதாக செய்தி வந்துள்ளது.

இந்தத் தவறை வைத்துக் கொண்டு ஏதோ அதிமுக ஆட்சியில் மட்டும்தான் தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் நடந்தது போலவும், திமுக ஆட்சியில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும் பலரும் எழுதியுள்ளனர். மனுஷ்யபுத்திரன் தீக்குளித்துவிடுவார் போல. ஆனால், அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் அரங்கேறின என்பதுதான் உண்மை.

1996-இல் மேலவளவில் பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உட்பட 6 தலித்துகள் அப்பகுதியிலுள்ள ஆதிக்கச் சாதியினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். பேருந்தில் பயணம் செய்த முருகேசன் தலையை வெட்டி வீசினர் சாதி வெறியர்கள். முருகேசன் திமுகவைச் சேர்ந்தவர்.

இச்சம்பவம் நடந்த நாள் முதலே வழக்கறிஞர் பொ.இரத்தினம், உடன் பல்வேறு வழக்கறிஞர்கள் குழுவாகப் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு நீதிக் கிடைக்கப் பாடுபட்டனர். அம்மக்களுக்குச் சட்ட ரீதியாக உதவிகள் செய்தனர்.

இவ்வழக்கில் 41 பேர் குற்றம்சாட்டப்பட்டனர். இவ்வழக்கு விசாரணை உயர்நீதின்ற உத்தரவின் அடிப்படையில் சேலத்திற்கு மாற்றப்பட்டு நடந்தது. விசாரணை முடிந்து 27.06.2001 அன்று தீர்ப்பு அளித்த நீதிபதி ஏ.ஆர்.இராமலிங்கம் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், மீதமுள்ள 24 பேரையும் விடுதலை செய்தும் தீர்ப்பளித்தார். விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென அரசு வழக்கறிஞர் (அதிமுக) அரசுக்கு அறிக்கை அளித்தும், அபோதைய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு மேல்முறையீடு செய்யவில்லை.

தண்டனைப் பெற்ற குற்றவாளிகள் அனைவரும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.சதாசிவம், என்.பால்வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு 19.04.2006 அன்று தீர்ப்பு வழங்கியது.

அத்தீர்ப்பில் விசாரணை நீதிமன்றம் 17 பேருக்கு வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. மேலும், மீதமுள்ளவர்களுக்குப் போதிய ஆதாரங்கள் இருந்தும் அரசு மேல்முறையீடு செய்யாத காரணத்தால் தண்டிக்க முடியவில்லை எனத் தீர்ப்பில் நிதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.

“52 …. we have concluded that there is enough material to hold against all the accused. But, unfortunately, the State has not preferred appeal against the acquittal of the remaining accused”

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டுமென அப்போதைய திமுக அரசுக்கு வழக்கறிஞர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பிலும் மனு அளிக்கப்பட்டது. ஆனால், திமுக அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. முதல்வர் கருணாநிதி தண்டனைப் பெற்ற குற்றவாளிகள் மேல்முறையீடு செய்வார்கள், அதில் பார்த்துக் கொள்ளலாம் எனக்கூறி மேல்முறையீடு செய்ய வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி.சிர்புர்க்கர், தீபக் வர்மா ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு 22.10.2009 அன்று குற்றவாளிகள் 17 பேரின் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. விடுதலை செயப்பட்ட 24 பேருக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யாததால் உச்சநீதிமன்றமும் இவர்களுக்குத் தண்டனை வழங்கவில்லை.

அதிமுக, திமுக என இரண்டு அரசுகளும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டன. இதனால், மீதமுள்ள 24 கொடும் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டனர்.

தலித்துகளின் வழக்குகளில் அதிமுக, திமுக இரண்டுமே ஆதிக்கச் சாதிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றை விட்டு ஒன்றை நியாயப்படுத்துவது சரியல்ல.

மேலவளவு தலித்துகள் படுகொலை வழக்கில் வழக்கறிஞர் பொ.இரத்தினம் உள்ளிட்ட வழக்கறிஞர்களின் பங்களிப்பு அளப்பரியது. அதுகுறித்து விரிவாக எழுத வேண்டும்.

Friday, September 18, 2020

துரோகம் தானே?

விழுப்புரத்தில் புதிதாக அமையவுள்ள பல்கலைக்கழகத்திற்குத் திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தை அளித்தவரும், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தவரும், திமுக முன்னாள் அமைச்சருமான மறைந்த ஏ.கோவிந்தசாமி பெயர் வைக்க வேண்டுமென மருத்துவர் இராமதாசு தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். ஏ.கோவிந்தசாமி முதுபெரும் திமுக தலைவர்களில் முகாமையானவர். இத்தனைக்கும் பாமக திமுகவைக் கடுமையாக விமர்சித்து வருகிற கட்சி.

திமுக சின்னத்தில் போட்டியிட்டு விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரை.ரவிக்குமார் வள்ளலார் பெயர் வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். வள்ளலார் பெயர் வைக்கக் கூடாது என்பதல்ல. ஆனால், திமுகவின் முதுபெரும் தலைவர் ஒருவர் பெயர் வைக்க வேண்டும் என பிற கட்சியிலிருந்து கோரிக்கை வரும் போது, அதை ஆதரிக்காமல் வேறொருவர் பெயர் வைக்க வேண்டுமென கோருவது சரியானதல்ல.

தலித் மக்களின் விடிவுக்கு உழைத்திட்ட, காங்கிரஸ் தலைவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எல்.இளையபெருமாள் பெயர் வைக்கக் கோரி இருந்தாலும், அதில் ஒரு நியாயம் இருந்திருக்கும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர், தன்னைத் தலித் அறிஞராக அடையாளப்படுத்திக் கொண்டவர் என்ற அடிப்படையில் கோருகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். இந்திய அளவில் தலித் மக்களின் நிலைக் குறித்து ‘இளையபெருமாள் குழு அறிக்கை’ மிக முக்கியமான ஒன்று. திமுக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சாராக இருந்த போது அவருக்குத் தமிழக அரசின் ‘அம்பேத்கர் விருது’ அளித்து சிறப்பித்தார். புதிய பல்கலைக்கழகத்திற்குப் பெயர் வைக்கும் அளவுக்குத் தகுதியான தலைவர்.

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற துரை.ரவிக்குமார் திமுகவிற்கும் தலித் அரசியலுக்கும் இழைக்கும் துரோகம் அல்லவா இது?

கோ.சுகுமாரன் / 18.09.2020

 

Sunday, September 06, 2020

வாங்க தோழர்..

1987-இல் எனக்கு வயது 20. கொல்லப்படுவதற்கு முன்பே தோழர் தமிழரசன் எனக்கு நெருக்கம். அவரோடு நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்கெடுத்ததில்லை. ஆனால், தமிழ்நாடு விடுதலை என்ற அரசியல் முழக்கத்திற்காக வீச்சுடன் உழைத்திட்ட காலம். தோழர் தமிழரசன் வழியில், மீன்சுருட்டி சாதி ஒழிப்பு அறிக்கையின் அடிப்படையில் சாதி ஒழிப்புடன் கூடிய தமிழ்நாடு விடுதலையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டோம்.

தோழர் பொழிலன் வழிகாட்டலில் தமிழ்நாடு இளைஞர் பேரவை, தமிழ்நாடு மாணவர் பேரவையில் செயல்பட்ட காலம். செப்டம்பர் 1, 1987-இல் பொன்பரப்பியில் தோழர்கள் தமிழரசன், தருமலிங்கம், ஜெகன்நாதன், பழனிவேல், அன்பழகன் காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்டனர். தோழர்களின் இழப்பு ஒருபுறம் அரசின் மீது கடும் சினத்தை ஏற்படுத்தியது. மறுபுறம் நினைக்கும் போதெல்லாம் கண் கலங்கி உள்ளுக்குள் அழுவேன். ஈடு செய்ய முடியாத இழப்பு எனினும், ஈடு செய்தே ஆக வேண்டிய இழப்பு என்பதால் பின்னாளில் அவர் பாதையில் பயணித்து வழக்கு, சிறை எனத் திசை மாறியது வாழ்க்கை.

தோழர் தமிழரசனின் தாயார் பதூசி அம்மாளை நேரில் சென்று பார்க்க வேண்டும் என முடிவு செய்தோம். சொந்த ஊர் மதகளிர்மாணிக்கம் என்றாலும், அப்போது அவர் தமிழரசனின் தங்கை திருமணம் செய்துகொடுத்த ஊரான பொன்பரப்பி குடிக்காட்டில் இருந்தார். புலவர் கலியபெருமாள், பொழிலன், நான் ஆகிய மூவரும் பேருந்தில் சென்றோம். பொன்பரப்பி செல்வது அதுவும் புலவர் கலியபெருமாள் உடன் செல்வது மிகவும் ஆபத்தானது. கண்காணிப்புக் கடுமையாக இருந்த நேரம். நாங்கள் பிடிபட்டிருந்தால், அதுவும் பொன்பரப்பி செல்கிறோம் என்று தெரிந்திருந்தால் கட்டாயம் காவல்துறையின் கடும் சித்திரவதையைச் சந்தித்திருப்போம். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்போம். ஆனால், இதையெல்லாம் நன்கு அறிந்திருந்த புலவர் எங்களைப் பாதுகாப்போடு அழைத்துச் சென்றார். பேருந்தில் இருந்து ஒரு ஊரில் இறங்கினோம். அங்கிருந்து நீண்ட பயணம் போல் மிதிவண்டியில் பயணமானோம். புலவர் ஒரு மிதிவண்டியிலும், நானும் பொழிலனும் ஒரு மிதிவண்டியிலும் பயணமானோம். நான் ஒல்லியாக இருந்ததால் என்னை ஏற்றிக் கொண்டு மிதிவண்டியை ஓட்டிய பொழிலனுக்கு சிரமம் இருந்திருக்காது என்றே எண்ணுகிறேன்.

இன்று நினைத்தாலும் சிலிர்க்கிறது. பயணம் முழுவதும் அடர்ந்த முந்திரிக் காட்டின் வழியாக ஒத்தையடிப் பாதையில். விவசாயிகள் விளைவிக்கும் முந்திரிக்கு விலை வைக்க முடியாமல் யாரோ நிர்ணயிக்கும் விலைக் கொடுக்க வேண்டிய நிலை. இதை எதிர்த்துப் போராடியதுதான் தோழர் தமிழரசனின் முதல் போராட்டம் என்றுகூட சொல்லலாம். இதன்பின்னர், கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டன. விவசாயிகள் ஓரளவுக்குப் பயன்பெற்றனர். பொதுவுடமைத் தத்துவம் விதைக்கப்பட்ட செம்மண் பூமி அது. முந்திரிக் காட்டைவிட்டு வெளியே வந்ததும், எங்கெல்லாம் மக்கள் கூட்டம் இல்லாத வழியில் சென்று பொன்பரப்பி அடைந்தோம். பதூசி அம்மாளை சந்திக்க அவ்வீட்டிற்குள் சென்றோம்.

இந்திய ஒன்றிய அரசையே உலுக்கிய முனைமழுங்கா மாவீரனை ஈன்றெடுத்தத் தாயைக் காணப் போகிறோம் என்ற ஆவல். கறுத்த நிறம், நெடிய, திடமான ரவிக்கை அணியாமல் சேலை மட்டுமே உடுத்தி இருந்த கம்பீரமானப் பெண்மணி. எங்களைப் பார்த்ததும் “வாங்க தோழர்” என்று வரவேற்றார். இன்றும் அச்சொல் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. புலவர் மட்டுமே அவருக்கு அறிமுகம். ‘இவங்க நம்ம தோழர்கள்’ என்று மட்டுமே சொல்லி அறிமுகப்படுத்தினார். அவரும் எங்களைப் பற்றி தெரிந்த கொள்ள ஆர்வமாக இல்லை. அது அன்றைய அரசியல் நடைமுறை. பெரும்பாலும் தலைமறைவுத் தோழர்களையே சந்தித்தவர்.

தோழர் தமிழரசன் மற்றும் தோழர்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் குறித்து தனக்குத் தெரிந்த தகவல்களை எல்லாம் சொன்னார். அழுது புலம்பவில்லை. ஆனால், பெற்ற பிள்ளையை இழந்துவிட்டோம் என்ற சோகம் இழையோடியது. புலவரால் தீவிரப் பொதுவுடமை அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டவர் தோழர் தமிழரசன். ஆனால், இப்படி ஒரு அரசியல் வாழ்க்கைக்குக் கொண்டு சென்று பலியாக்கிவிட்டீரே என்ற சராசரி பெண்கள் நினைக்கும் சூழலில், அதுபற்றிய கவலை துளியும் இல்லாமல், புலவருடன் மிகுந்த அன்புடனும், மதிப்புடன் பேசினார். எளிய சிற்றூர் புறத்தைச் சேர்ந்த பதூசி அம்மாளின் வீரமும், அரசியலும் அதில் வெளிப்பட்டது. அப்போது தன் மகன் கொல்லப்பட வாய்ப்பில்லை என்ற கருத்து நிலவுவதையும் கூறினார். பின்னர் அவரிடமிருந்து விடைப் பெற்றோம். மீண்டும் முந்திரிக்காட்டின் ஊடே மிதிவண்டிப் பயணம்.

அந்தச் சிறிய வயதில் எனக்குப் பெருமைதரும் பயணமாக அமைந்த ஒன்று. இதுபோல், எத்தனையோ ஆபத்தான சவால் நிறைந்தப் பயணங்களை மேற்கொண்டவன். பதூசி அம்மாவுக்கு வயது 104. இன்றும் தன் வேலைகளைத் தானே செய்கிறார். மாட்டுக்குத் தீனி வைப்பது என அன்றாட பிற வேலைகளையும் செய்து வருகிறார்.

“வாங்க தோழர்” – எவ்வளவு பெரிய அங்கீகாரம். என்ன விலைக் கொடுத்தும் பெற முடியாத தகுதி இது. அந்தத் தகுதி எனக்குக் கிடைத்தது பெரும் பேறுதான்.

Thursday, September 03, 2020

அய்யா வே. ஆனைமுத்து அறிக்கை...

1987, செப்டம்பர் 1 அன்று பொன்பரப்பி சிற்றூரில் தோழர்கள் தமிழரசன், தருமலிங்கம், ஜெகநாதன், பழனிவேல், அன்பழகன் ஆகியோரை தமிழகக் காவல்துறையினர் பொதுமக்கள் போர்வையில் அடித்துக் கொன்றனர். காயமடைந்து உயிரோடு இருந்தவர்களையும் சிகிச்சை அளிக்காமல் சாகடித்தனர். இதற்குக் காவல்துறை ரூ. 1 கோடி வரை செலவு செய்ததாக அப்போது கூறப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து அய்யா வே.ஆனைமுத்து அவர்கள் பொன்பரப்பி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்துள்ளார். வங்கிக் கொள்ளை நடந்த போதும், அதைத் தொடர்ந்த தாக்குதலையும் நேரடியாக பார்த்தவர்களைச் சந்தித்துள்ளார். கிடைத்தத் தகவல்களை ஆங்கிலத்தில் 18 பக்க அறிக்கையாக அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் பூட்டாசிங்கிற்கு அனுப்பியுள்ளார். அதில் தமிழரசன் மற்றும் தோழர்கள் உயிரைப் பறித்தது தவறு என்று தெளிவாகக் கூறியுள்ளார். அதோடு இதுகுறித்து தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார். ஆனால், காவல்துறை இத்தாக்குதலில் ஈடுபட்டது பற்றி எதுவும் கூறவில்லை. இதுபற்றி அவரிடம் கேட்க வேண்டும். இருப்பினும், தோழர்கள் கொல்லப்பட்டது குறித்து அவரின் அறிக்கை ஓர் வரலாற்று ஆவணம். 

Wednesday, July 08, 2020

கண்ணகி முருகேசன் – நினைவஞ்சலி!

08.07.2003 : கண்ணகி முருகேசன் இருவருக்கும் பூச்சி மருந்தை வாயில் திணித்து, உயிர் போகும் முன்னே எரித்துக் கொன்றனர் சாதி வெறியர்கள். கண்ணகி வன்னியர் சமூகத்திலும், முருகேசன் தலித்தாகவும் பிறந்ததைத் தவிர வேறொன்றும் இக்கோடூரப் படுகொலைக்குக் காரணமல்ல. 17 ஆண்டுக் காலம் இவ்வழக்கை நடத்திக் குற்றவாளிகளுக்குத் தண்டனைப்
பெற்றுத் தர போராடி வருகிறார் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம். உடன் நானும் பயணித்துக் கொண்டிருக்கிறேன். சில நல்லுள்ளம் படைத்த நண்பர்கள் உதவியாக உள்ளனர்.

சம்பவம் பற்றி அறிந்தவுடன் நேரில் சென்று விசாரித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. விசாரணைக் கோரி வழக்குத் தொடர்ந்தார் வழக்கறிஞர் இரத்தினம். 2004-இல் உயர்நீதிமன்ற நீதிபதி அசோக்குமார் இவ்வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார். ஆனால், சி.பி.ஐ. சட்டப்படியும், சரியாகவும் நடந்து கொள்ளவில்லை. முதலில் விசாரித்த சி.பி.ஐ. காவல் ஆய்வாளர் கே.சுப்பையன், பின்னர் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டப் பிரிவுகள் சேர்க்கப்பட்ட பின் விசாரித்த சி.பி.ஐ. காவல் துணைக் கண்காணிப்பாளர் வி.டி.நந்தகுமார் ஆகியோர் வழக்கைக் கெடுக்கச் செய்த குளறுபடிகள் ஏராளம்.

சி.பி.ஐ. முருகேசனின் தந்தை சாமிக்கண்ணுவின் உடன்பிறந்த தம்பி அய்யாசாமி (இரண்டாவது படத்தில் இருப்பவர்), மற்றொரு உறவினர் குணசேகரன் ஆகியோரை வழக்கில் சேர்த்து குற்றவாளியாக்கியது. கண் முன்னே நடந்த இக்கொடூரத்தின் நினைவுகள் ஒருபுறம், மறுபுறம் எந்தக் குற்றமும் செய்யாமல் இரு தலித்துகள் மிகுந்த மன உளைச்சல், துயரத்துடன் வழக்கை எதிர்கொண்டு வருகின்றனர். சம்பவத்தைக் கண்ணுற்ற சாட்சிகளைக் குற்றவாளிகளாக்கிப் பின் “அப்ரூவர்” ஆக்கும் சி.பி.ஐ. முயற்சிக்கு வழக்கறிஞர் இரத்தினம் ஒப்புக் கொள்ளவில்லை. இது காலத்திற்கும் தீராப் பழியாகிவிடும் என்பதால் யார்தான் இதை ஏற்றுக் கொள்ள முடியும்.

வழக்கறிஞர் திலகேஸ்வரன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரின் நிலைக் குறித்து விரிவாக எடுத்துக்கூறி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கும் குற்றம்சாட்டப்பட்ட இரு தலித்துகளுக்கும் நிவாரணம் அளிக்கவில்லை. சி.பி.ஐ. செய்தக் குளறுபடிகளைப் பட்டியலிட்டு கூடுதல் விசாரணை (Further Investigation) நடத்தவும், சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கவும் கோரப்பட்டதைத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு ஏற்கவில்லை. மாறாக விசாரணை நீதிமன்றத்தில் தீர்வுக் காணுங்கள் என்று உத்தரவிட்டது.

குற்றவாளிகளுக்குத் தண்டனைப் பெற்றுத் தர வேண்டும். அதே நேரத்தில் இரு தலித்துகளையும் காப்பாற்ற வேண்டும் என்ற சவால் நிறைந்தப் பணியை வழக்கறிஞர் இரத்தினம் தலைமையிலான வழக்கறிஞர் குழு மேற்கொண்டு வருகிறது. இவர்களுடன் உடன் இருந்து பணியாற்றுவதால் இதன் துயரங்களை நானும் சுமந்து கொண்டிருக்கிறேன்.

கடலூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில் குற்றவாளிகளின் மிரட்டலால் பெரும்பாலான சாட்சிகள் பிறழ் சாட்சிகள் ஆயினர். முருகேசனின் உறவினர்கள் சிலரும் பிறழ் சாட்சி ஆயினர். குற்றவாளிகளின் நேரடி மிரட்டலுக்கு அஞ்சி அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்ற சாட்சி மறுநாள் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல இருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டார். சி.பி.ஐ., தமிழகக் காவல்துறை இந்த உயிரிழப்பு பற்றித் துளியும் கவலைப்படவில்லை. இதில் உயர்நீதிமன்றமும் சேரும்.

கண்ணுற்ற சாட்சிகளாக ஆக்க வேண்டிய இரு தலித்துகளைக் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்த சி.பி.ஐ., சம்பவத்தைக் கூட்டத்தோடு கூட்டமாக மறைந்திருந்து பார்த்த முருகேசனின் அம்மா சின்னப்பிள்ளையை (சாமிக்கண்ணுவின் இரண்டாவது மனைவி) விசாரித்து கு.ந.ச. 161-இன்படி வாக்குமூலம் பெறவில்லை. அரசுத் சாட்சிகளின் படியலிலும் சேர்க்கவில்லை.

வழக்கு விசாரணையின் போதுதான் சி.பி.ஐ. சின்னப்பிள்ளையிடம் செங்கல்பட்டு நீதித்துறை நடுவர் முன் நிறுத்தி கு.ந.ச. 164-இன்படி வாக்குமூலம் பெற்றுள்ளது தெரிய வந்தது. அவ்வாக்குமூலத்தைப் பார்த்தால் சின்னப்பிள்ளை மிகத் தெளிவாக குற்றவாளிகளின் பெயர்கள் அனைத்தையும் கூறியதோடு, சம்பவத்தில் ஈடுபட்டு, வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்படாதப் பலரது பெயரையும் கூறியுள்ளார். இவரது இந்த வாக்குமூலம் ஒன்றே குற்றவாளிகளுக்குத் தண்டனைப் பெற்றுத் தரப் போதுமானது. அதனால்தான், சி.பி.ஐ. இவரை விசாரித்து சாட்சியாகச் சேர்க்கவில்லை.

சின்னப்பிள்ளையை நீதிமன்ற சாட்சியாக (Court Witness) விசாரிக்க வழக்கறிஞர் இரத்தினம் விசாரணை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய இருந்த நிலையில், சி.பி.ஐ. தரப்பு அரசு வழக்கறிஞர் அவசரம் அவசரமாக முந்திக் கொண்டு மனுத் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து சின்னப்பிள்ளை சாட்சியம் அளித்தார். நீதிமன்றத்தில் சின்னப்பிள்ளை சாட்சியம் அளிக்கும்போது குற்றவாளித் தரப்பு வழக்கறிஞர்கள் செய்த ரகளை நிதித்துறையின் மாண்பையே கேலிக்கூத்தாக்கியது.

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டப் பிரிவு 7(2)-இன்படி குற்றவாளிகளின் சொத்துக்களைப் பற்றுகைச் (Property attachment) செய்ய கடலூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுப் பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை சி.பி.ஐ. சொத்துப் பட்டியலைச் சேகரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.

இவற்றை எல்லாம் பட்டியலிட்டு, இவ்வழக்கில் வன்கொடுமைகள் தடுப்புச் சட்ட விதிகள் 5(1)-இன்படி பாதிக்கப்பட்டோர் தேர்வின்படி மூத்த வழக்கறிஞர் ஒருவரை அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கவும், சாட்சி செல்வராஜ் தற்கொலைக்குத் தூண்டியவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும், பிறழ் சாட்சிகளாக மாறிய முருகேசன் உறவினர்களை மீண்டும் விசாரிக்கவும், பணம் கொடுத்து சாட்சிகளைக் களைத்தக் குற்றவாளிகள் மீது குற்ற நடவடிக்கைக் கேட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பி.கே.இளவரசன், முத்துகுமரன் பெயரில் தொடரப்பட்ட இரண்டு பொதுநல வழக்குகளிலும் நியாயம் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் இவ்வழக்குகளை விசாரித்து உத்தரவிட்ட இரு நீதிபதிகள் அமர்வில் மூத்த நீதிபதி மணிக்குமார் ஆவார்.

சம்பவம் நடந்த போது விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யாமல் குற்றவாளிகளுக்குத் துணைப் போயினர். நக்கீரன் இதழில் செய்தி வந்தபின் கிராம நிர்வாக அதிகாரியிடம் புகார் பெற்று கண்ணகியின் தந்தை துரைசாமி, அண்ணன் மருதுபாண்டியன் உட்பட வன்னியர் நால்வர் கண்ணகிக்கு விஷம் கொடுத்து கொன்று எரித்ததாகவும், முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு, சித்தப்பா அய்யாசாமி உட்பட தலித்துகள் நால்வர் முருகேசனுக்கு விஷம் கொடுத்து கொன்று எரித்ததாகவும் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், எட்டுப் பேரையும் கைது செய்து கடலூர் நடுவண் சிறையிலும் அடைத்தனர். பின்னர் அனைவரும் பிணையில் வெளியே வந்தனர். பின்னர் இந்த வழக்கில் எட்டு பேர் மீதும் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.

இப்பொய் வழக்கில் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்த விருத்தாசலம் காவல்நிலைய அப்போதைய காவல் உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்த காவல் ஆய்வாளர் செல்லமுத்து ஆகியோரையும் சி.பி.ஐ. இவ்வழக்கில் குற்றவாளியாகச் சேர்த்தது. இதில் செல்லமுத்து காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர். தமிழ்மாறன் உளுந்தூர்பேட்டையில் காவல் ஆய்வாளராக இருந்து லஞ்சம் பெற்ற வழக்கில் ஊழல் மற்றும் கண்காணிப்புப் பிரிவுக் காவல்துறையால் கைது செய்யப்பட்டுப் பிணையில் உள்ளார்.

இந்நிலையில், தலித்துகள் நால்வர் மீது பொய் வழக்குப் போட்ட மேற்சொன்ன இரு காவல் அதிகாரிகள் மீது இ.த.ச. 201-இன்படி மட்டுமே குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன்படி குறைந்தப்பட்ச தண்டனை மட்டுமே கிடைக்கும். ஆனால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி குற்றசாட்டுப் பதிவு செய்யப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனைக் கிடைக்கும். எனவே, வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 2(1)-இன்படி குற்றச்சாட்டுப் பதிவு செய்ய தற்போது வழக்கை விசாரிக்கும் கடலூர் தனி நீதிமன்றத்தில் (Special Court for SC and ST Cases) மனுத் தாக்கல் செய்து வாதாடினார் வழக்கறிஞர் இரத்தினம். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இரு காவல் அதிகாரிகள் மீதும் மேற்சொன்ன சட்டப் பிரிவின்கீழ் குற்றச்சாட்டுப் பதிவு செய்ய உத்தரவிட்டது.

குற்றவாளிகள் தரப்பில் விடப்படும் கடும் அச்சுறுத்தல்களுக்கு இடையே முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு குடும்பத்தினர் உறுதியாக வழக்கை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் சாமிக்கண்ணுவின் தம்பி அய்யாசாமி, அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, வேப்பூர் காவல் நிலையத்தில் அய்யாசாமி மீது கொலை வழக்கொன்று பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர் பிணையில் வெளியே வந்துள்ளார். அவ்வழக்கின் குற்றப்பத்திரிகையைப் படித்தாலே இக்கொலை வழக்கில் அவர் பொய்யாகச் சேர்க்கப்பட்டது விளங்கும்.

அய்யாசாமியின் மனைவி பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார். ஊருக்குப் பல நன்மைகள் செய்து வருகிறார். இதனால், தேர்தலில் போடியிட்டுத் தோல்வி அடைந்த தரப்பினர் அய்யாசாமி குடும்பம் மீது கோபத்தில் உள்ளனர். அண்மையில் இதுகுறித்து நடந்த மோதல் ஒன்றில் அய்யாசாமி, அவரது மகன்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஈட்டியை கொண்டுக் காவல்துறையினரைக் கொல்ல முயன்றதாவும் விருத்தாசலம் காவல் உதவி ஆய்வாளர் கொடுத்தப் புகார் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்குகளில் கைது செய்யப்பட்டு அய்யாசாமி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அய்யாசாமியைக் கைது செய்த விருத்தாசலம் காவல்துறையினர் அவரைத் தாக்கியுள்ளனர். இதனால், அவர் உடம்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவரைக் காவல் அடைப்பு செய்த விருத்தாசலம் நீதித்துறை நடுவர் ’62 வயதாகும் இவரா ஈட்டிக் கொண்டுக் காவல்துறையினரைக் கொல்ல முயன்றார்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது மேற்சொன்ன பொய் வழக்குகளைப் பட்டியலிட்டு அய்யாசாமி மீது குண்டர் தடுப்புச் சட்டம் ஏவப்பட்டுள்ளது. விருத்தாசலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவல் துணைக் கண்காணிப்பாளர் இளங்கோவன் ஆகியோர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கண்ணகி முருகேசன் படுகொலை வழக்கில் இரு காவல் அதிகாரிகளுக்குத் தண்டனைக் கிடைக்கும் என்பதால் தொடர்ந்து சாமிக்கண்ணு, அய்யாசாமி குடும்பத்தினர் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் போடுகின்றனர் விருத்தாசலம் காவல்துறையினர். இதில் கண்ணகி முருகேசன் படுகொலை வழக்குக் குற்றவாளிகளின் தூண்டுதலும் உள்ளது.

அய்யாசாமி நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர். மேலும், குருதி அழுத்தம், சிறுநீரகக் கோளாறும் உள்ளது. இதனால், சிறையில் உடல்நிலை மோசமடைந்து தற்போது கடலூர் அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இவ்வளவு துயரங்களையும் சுமந்து கொண்டுக் கொலையுண்ட முருகேசனின் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.

வழக்கு ஆவணங்கள், கண்ணுற்ற சாட்சிகளின் வாக்குமூலங்கள் மூலம் எரிந்த உயிர்களின் அலறல்கள் எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தனியே கதறி அழலாம். ஆறுதல் அடையலாம். ஆனால், நீதிமன்றத்தில் அளிக்கப்படும் சாட்சியங்கள் காதில் விழும்போது விழியோரம் கண்ணீர் கசிவதைத் துடைத்துக் கொள்ளத்தான் முடிகிறது.

கண்ணகி முருகேசன் – இருவருக்கும் என் நினைவஞ்சலி!

கோ.சுகுமாரன்

08.07.2020

Tuesday, December 25, 2018

பிரபஞ்சன் எழுத்தாளர் மட்டுமல்ல, ஒரு செயற்பாட்டாளர்!

எழுத்தாளர் பிரபஞ்சன் 21.12.2018 அன்று காலை 11.30 மணிக்குக் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவர் வாழ்ந்த புதுச்சேரி, பாரதி வீதி – வ.உ.சி. வீதி சந்திப்பில் உள்ள பூர்வீக வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அவரது இறுதி நிகழ்வு 23.12.2018 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தியதோடு, அதே இடத்தில் நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் பேசினேன்.  

‘எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுச் செய்தி அறிந்தவுடன் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். என் 28 ஆண்டுக் கால நண்பர் அவர். அவருடனான நட்புக் குறித்துப் பேசினால் பலநாள் பேச வேண்டியிருக்கும். அவர் எல்லோரும் பேசியது போல சிறந்த எழுத்தாளர், படைப்பாளி, ஆளுமை, எல்லோரையும் சமமாக பாவிப்பவர். அதுமட்டுமல்ல, அவர் ஒரு செயற்பாட்டாளரும்கூட.

மண்டல் குழுப் பரிந்துரைப்படி அப்போதைய பிரதமர் வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கினார். அப்போது, புதுச்சேரியில் ‘சமூக நீதிப் பேரவை’ சார்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடுக் கேட்டுப் போராட்டம் நடத்தினோம். அப்போழுது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரா.விசுவநாதன் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அவரின் சட்டமன்ற உறுப்பினர் விடுதி அறையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவோம். அக்கூட்டங்களுக்குத் தவறாமல் வருவார். அதோடு போராட்டத் துண்டறிக்கைகள் எழுதிக் கொடுப்பார். அதைக் கொடுத்துவிட்டு, இதில் என்ன வேண்டுமானாலும் திருத்தம் செய்துக் கொள்ளுங்கள் என்று சொல்வார். அப்படிப்பட்ட ஜனநாயகவாதி அவர்.

காலையில் பேசிய அ.மார்க்ஸ் குறிப்பிட்டது போல, 1994-இல் இந்து முன்னணி அமைப்பினர் மிஷன் வீதியிலுள்ள புனித ஜென்மராக்கினி ஆலையம் சிவன் கோயிலை இடித்துவிட்டுக் கட்டியது என்று பிரச்சனையை எழுப்பினர். அதை இடிக்க வேண்டுமென்றும் கோரிப் போராட்டம் நடத்தினர். அப்போது, ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் “மசூதிக்குப் பிறகு மாதா கோயிலா” என்று ஒரு வெளியீடு கொண்டு வந்தோம். அதில் மாதா கோயில் சிவன் கோயிலை இடித்துவிட்டுக் கட்டவில்லை என்பதை ஆதாரங்களோடு நிறுவினோம். அந்த வெளியீட்டை வரலாற்று அடிப்படையிலான ஆதாரங்களைக் கொண்டு பிரபஞ்சன் எழுதினார். அ.மார்க்ஸ் அதற்கொரு முன்னுரை எழுதினார். அதன்பின்னர், இந்துத்துவ சக்திகள் அந்தப் பிரச்சனையைக் கைவிட்டனர். இன்று வரையில் அந்தப் பிரச்சனையை எழுப்பவில்லை.       

பிரபஞ்சன் ‘அப்பாவின் வேஷ்டி’ என்றொரு சிறுகதை எழுதியுள்ளார். அதில் அவரின் அப்பா கட்டிய பட்டுச் சரிகை வேட்டி கதையின் மையப் பொருள். பிரபஞ்சனின் அப்பா சாரங்கபாணி அவர்கள் வீட்டில் விஷேச நாட்களில் அந்தக் கதர்ப் பட்டு வேட்டியை கட்டிக் கொள்வது குறித்து விரிவாகப் பதிவு செய்துள்ளார். அந்த வேட்டி பெரிய அகன்ற அலமாரியில் பத்திரமாக இருக்குமாம். விஷேச நாட்களில் அவருடைய அப்பா அதை எடுத்துக் கட்டும் அழகுக் குறித்து அழகாக எழுதியிருப்பார். சிறுவயதில் அவருக்கு அந்த வேட்டியை கட்டிப் பார்க்க வேண்டுமென்ற ஆசை இருந்துள்ளது. அப்பா இறந்த பிறகு, வீட்டில் நடந்த ஒரு விஷேசத்தில், அதாவது பூஜையின்போது அந்த வேட்டியைக் கட்டிக் கொண்டு பூஜை செய்ய கீழே அமர்ந்துள்ளார். அந்த வேட்டி பின்பக்கமாக கிழிந்துப் போயுள்ளது. ‘பிறகு அந்த வேட்டியை மாற்றிவிட்டு பாலியஸ்டர் வேட்டியைக் கட்டினேன், அதுதான் நமக்கு சரிப்படும்’ என்றும் எழுதியிருப்பார். அப்பாவின் வேட்டியைக் கட்ட முடியாமல் போனதையும் மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்திருப்பார்.

பிரபஞ்சன் தன் அப்பாவின் வேட்டியைக் கட்ட முடியாமல் போனதுபோலவே அவர் புதுச்சேரி பற்றி நிறைய எழுத வேண்டுமென்று எண்ணம் ஈடேறவில்லை. ஏற்கனவே, புதுச்சேரி பற்றிப் பத்தாயிரம் பக்கங்கள் எழுதியுள்ளார். இன்னும் பத்தாயிரம் பக்கங்கள் எழுதியிருப்பார். அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

பிரபஞ்சன் மறைந்த செய்திக் கிடைத்த உடனேயே ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் அவரது உடலை அரசு மரியாதையுடன் தகனம் செய்ய வேண்டுமென்று புதுச்சேரி அரசுக்குக் கோரிக்கை வைத்தேன். அதேபோல, ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி’ மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. முதல்வர் நாராயணாசாமி எல்லோருடைய கோரிக்கையையும் ஏற்று பிரபஞ்சனுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடத்தப்படும் என அறிவித்து, அதனைச் செயல்படுத்தி உள்ளார். அவருக்கு நம் அனைவரின் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எழுத்தாளர் பிரபஞ்சனின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், இலக்கியவாதிகள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு என் வீரவணக்கம்.’  

Monday, November 23, 2015

மழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்

கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்த்து வந்தேன். மழைக்கு இதுவரையில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் வீடு, உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். பல இடங்களில் வீடு இருந்ததற்கான அடையாளமே இல்லாமல், மண் குவியலுக்குள் வாழ்ந்த குடும்பங்களின் வாழ்க்கைச் சுவடுகள் மூழ்கிப் போயிருந்த துயரத்தைக் காண முடிந்தது. நெய்வேலி அருகேயுள்ள பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தில் வெள்ளத்தில் அடித்துச் சென்ற அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 10 பேர் பலியாகி உள்ளனர். நாங்கள் சென்ற போது லட்சுமி என்ற பெண்ணின் உடல் கிடைத்தது. ஓடைக் கரையோரம் வீடுகளில் குடியிருந்ததால் வெள்ளம் மிக எளிதாக இவர்களை அள்ளிச் சென்றுள்ளது. இடிந்த வீட்டின் முன்பு தாய் தன் பிள்ளைகளின் சான்றிதழ்களைக் காய வைத்த காட்சி மனதை வாட்டியது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் முன்னறிவிப்பு இல்லாமல் தண்ணீரை வெளியேற்றியதாலும் கடும் பாதிப்பும், உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் முழுவதும் நீரில் மூழ்கி சேதமடைந்து மண் மேடாக காட்சியளிக்கின்றன. அந்நிலங்களைத் திருத்தி மீண்டும் விவசாயம் செய்ய நீண்ட காலமாகும். சொந்த நாட்டிலேயே மக்கள் பள்ளிக்கூடங்களில் அகதிகளாக உள்ளனர். தேர்தல் நேரம் என்பதால் அரசியல் கட்சியினர், சில தொண்டு நிறுவனத்தினர் சற்று ஆறுதல் தரும்படி நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர். தமிழக அரசும் இயன்றளவு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இவை அனைத்தும் அம்மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவாது. நல்லதொரு வாழ்க்கை வாழ்ந்து வந்த முந்திரிக்காட்டு மக்கள் வரிசையாக நின்று, தட்டு ஏந்தி உணவு வாங்கிச் சென்று உண்ட காட்சி துயரத்தின் உச்சம். நாம் மழையை சபிக்க முடியாது. அது இயற்கையின் வரம். ஆனால், எதுபற்றியும் கவலைப்படாமல் ஆளுகின்ற, ஆண்ட அரசுகளை நினைத்தால் கடும் கோபம் வருகிறது. எந்த முன்னேற்பாடுகளும் செய்யாமலும், நீர் ஓட வேண்டிய வாய்க்கால், ஓடை, இயற்கைத் நீர்த்தேக்கங்களான குட்டை, குளம், ஏரி ஆகியற்றை இல்லாமல் செய்ததும் என அரசின் திட்டமிட்ட இயற்கை அழிப்பே இந்த பேரிடருக்குக் காரணம். இதை வைத்துக் கொண்டு அரசியல் கட்சித் தலைவர்கள் அரங்கேற்றும் அரசியல் ஆபாசத்தின் உச்சம் எனலாம். இந்நேரத்தில் பிரான்ஸ் நாட்டில் நடந்த தாக்குதல் குறித்த அந்நாட்டு கட்சிகள், ஊடகங்களின் அனுகுமுறையை நினைத்துப் பார்க்கிறேன். எவ்வளவு நாகரீகமாக அதை எதிர்க் கொண்டார்கள். தமிழகம் இன்னும் சீரழியும் நிலை வருமோ என அஞ்சுகிறேன்.

புகைப்படம்: இயக்குநர் தங்கர்பச்சான்