Thursday, February 14, 2008

புதுச்சேரி காவல் ஆய்வாளர் வெங்கடசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் - படங்கள்




புதுச்சேரி, வில்லியனூரில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தடியடி நடத்தி தாக்கிய போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 13-02-2008 புதன்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, வில்லியனூர் கிராமப்புற மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை சார்பில் இப்போராட்டம் நடைபெற்றது.

சுதேசி பஞ்சாலை எதிரே நடைபெற்ற இப்போராட்டத்துக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் கோ.சுகுமாரன் தலைமை தாங்கினார். கிராமப்புற மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத் தலைவர் முத்து (எ) பாஸ்கர் முன்னிலை வகித்தார். சிறப்புத் தலைவர் சந்திரசேகரன் வரவேற்றுப் பேசினார்.

வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாராயணசாமி தன்னுடைய தொகுதியில் வளர்ச்சிப் பணிகளைச் சரிவர நிறைவேற்றவில்லை என்று கூறி வில்லியனூர் பகுதி கவுன்சிலர்கள், பொதுமக்கள் கடந்த 31-01-2008 அன்று போராட்டம் நடத்தினர்.

அப்போது போலீசார் போராட்டம் நடத்தியவர்கள் மீது தேவையில்லாமல் தடியடி நடத்தினர். அப்போது வில்லியனூர் காவல் ஆய்வாளர் வெங்கடசாமி பெண்களை கேவலமாக பேசி கடுமையாக தாக்கினார். ஏராளமான் பெண்கள் உட்பட பலர் காயமடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் குறிப்பாக கர்ப்பிணிப் பெண் உட்பட 16 பேர் புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் மற்றும் அவரது நண்பர்கள் சென்றிருந்தனர். அங்கு சிகிச்சை பெற வந்தவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது குறுக்கிட்டு சிகிச்சை அளித்து முடித்த பிறகு விசாரணை நடத்துங்கள் என்று கோ.சுகுமாரன் கூறியுள்ளார்.

அப்போது மேட்டுபாளையம் காவல் உதவி ஆய்வாளர் பழனிவேல் தகாத சொற்கள் கூறி கோ.சுகுமாரன் மற்றும் உளவாய்க்கால் சந்திரசேகரன் ஆகியோரை தாக்க வந்துள்ளார். இதுகுறித்து கோ.சுகுமாரன் பெரியக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் கோ.சுகுமாரன் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக உதவி ஆய்வாளர் பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, அச்சுறுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

• போராடிய மக்கள் மீது தடியடி நடத்தி தாக்கிய வில்லியனூர் காவல் ஆய்வாளர் வெங்கடசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

• மேட்டுப்பாளையம் உதவி ஆய்வாளர் பழனிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

• மனித உரிமை ஆர்வலர் கோ.சுகுமாரன் உள்ளிட்டோர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும்.

• பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ம.தி.மு.க. சார்பில் சந்திரசேகரன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு தலைவர் கே.இராம்குமார், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கத் தலைவர், கவுன்சிலர் பா.சக்திவேல், பொறையாறு கவுன்சிலர் பொன்.சுந்தரராசு, தேங்காய்த்திட்டு கவுன்சிலர் எஸ்.பாஸ்கரன், செம்படுகை நன்னீரகம் அமைப்புச் செயலாளர் பார்த்திபன், சமூக நீதிப் போராட்டக் குழு பாகூர் மஞ்சினி, புதுவைக் குயில் இலக்கியப் பாசறை ச.ஆனந்தகுமார், வெள்ளையணுக்கள் இயக்கத் தலைவர் பாவல், கிருத்துவ மக்கள் கூட்டமைப்புத் தலைவர் சாமி.ஆரோக்கியசாமி உட்பட பல்வேறு கட்சி, அமைப்பு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் உட்பட பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் திரளாக கலந்துக் கொண்டனர். போலீசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

1 comment:

Anonymous said...

Dear Sugumaran,

How long you will fight against the Police? Any other way to stop the atrocities against downtrodden? Please think over it.