Monday, April 09, 2007

துறைமுகத் திட்டம் : சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிக்கை

புதுச்சேரி, தேங்காய்த்திட்டு வீடு, மனை, நிலம் ஆர்ஜீத எதிர்ப்புக் குழு சார்பில் கட்சிகள், இயக்கங்கள் ஆலோசனைக் கூட்டம் 6-4-2007 அன்று மாலை 6 மணியளவில் தேங்காய்த்திட்டு ஜெயராம் நாயக்கர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைப்பாளர் எஸ்.காளியப்பன், கவுன்சிலர் எஸ்.பாஸ்கரன் தலைமை தாங்கினர்.

கூட்டத்தில் விஸ்வேஸ்வரன், பாரதிய ஜனதா கட்சி, மா.இளங்கோ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அபிசேகம், சலீம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சு.பாவாணன், விடுதலைச் சிறுத்தைகள், குமாரவேல், தேமுதிக., கணேசன், மதசார்பற்ற ஜனதாதளம், சடகோபன், மறுமலர்ச்சி தி.மு.க., சி.எச். பாலமோகனன், அமைப்பாளர், மக்கள் பாதுகாப்புக் குழு, கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, லோகு.அய்யப்பன், பெரியார் திராவிடர் கழகம்,ஆனந்தராஜ், அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம், இரா. அழகிரி, தமிழர் தேசிய இயக்கம், பா.சக்திவேல், கவுன்சிலர், வீராம்பட்டினம், விஸ்வநாதன், மீனவர் விடுதலை வேங்கைகள்,இருதயராசு, பகுஜன் சமாஜ் கட்சி, ஜெகநாதன், கிராம பஞ்சாயத்து ஒருங்கிணைப்பு ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு :

1. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசியபோது, `துறைமுகம் வேண்டுமா? வேண்டாமா? என்பது பற்றி வல்லுநர் குழு அமைத்து, மக்கள் பாதிக்கப்படுவதாக இருந்தால் நல்ல முடிவு எடுக்கப்படும்' எனக் கூறியுள்ளார். இதனை இக்கூட்டம் நிராகரிக்கிறது.

கடந்த 23-03-2007 அன்று வணிக வரித்துறை வளாகத்தில் முதல்வர் அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் வல்லுநர் குழு அமைத்து முடிவு எடுக்கப்படும் என முதல்வர் கூறியபோதே அதை போராட்டக் குழுவினர் ஒப்புக்கொள்ளவில்லை. மீண்டும் அதையே சட்டமன்றத்தில் கூறியுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.

ஏற்கனவே, துறைமுக விரிவாக்கம் குறித்து டில்லியுள்ள தேசிய துறைமுக மேலாண்மைக் கழகம் (சூயவiடியேட ஐளேவவைரவந டிக ஞடிசவ ஆயயேபநஅநவே (சூஐஞஆ)) அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில் புதுச்சேரிக்கு இந்த துறைமுக விரிவாக்கம் தேவையற்றது, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது.

துறைமுக விரிவாக்கத் திட்டத்தை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் அரசுக்கு தாக்கல் செய்துள்ள சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தினால் கடுமையான பாதிப்புகள் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளது.

உண்மைநிலை இப்படியிருக்க, மீண்டும் வல்லுநர் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்வது போராட்டத்தை திசை திருப்பி மழுங்கடிக்கும் செயல் என்பதை இக்கூட்டம் அரசுக்கு சுட்டிக்காட்டுகிறது.

எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டுமென இக்கூட்டம் வற்புறுத்துகிறது. நடைபெறும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இதற்கான அறிவிப்பை முதல்வர் அவர்கள் வெளியிட வேண்டுமென்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

2. துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளிக்காதபோதே கடந்த பிப்ரவரி 2-ந் தேதியன்று துறைமுகத்தையும், அதையொட்டிய 153 ஏக்கர் நிலத்தையும் புதுச்சேரி அரசு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. தற்போது வல்லுநர் குழு கருத்தறியும் வரை துறைமுக விரிவாக்கப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக முதல்வர் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். துறைமுகத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டு திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல. எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ள துறைமுகத்தையும் 153 ஏக்கர் நிலத்தையும் திரும்பப்பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

3. துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கொண்டுவரும் தனியார் நிறுவனம் துறைமுக துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வல்சராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடரில் இதுகுறித்து உறுப்பினர்களும் புகார் கூறியுள்ளனர். புதுச்சேரி அரசு இது குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென இக்கூட்டம் வற்புறுத்துகிறது.

No comments: