Sunday, April 08, 2007

துறைமுகத் திட்டம் : சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 03-04-2007 அன்று வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரியில் அமைக்கப்பட இருந்த துணை நகர திட்டத்தைக் கைவிட்டு சட்டப் பேரவையில் அறிவித்துள்ள முதல்வர் ரங்கசாமி அவர்களை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் மனதார பாராட்டுகிறேன்.

விளைநிலங்களை வீட்டுமனைகளாக்கி துணைநகரம் அமைக்கப்பட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்த்துப் போராடியதற்கு வெற்றி கிடைத்துள்ளது.

இதேபோல், மக்கள் நலனுக்கு எதிரான துறைமுக விரிவாக்கத் திட்டம், சிறப்பு பொருளாதார மண்டலம், விமான நிலைய விரிவாக்கம் போன்றவைகளையும் கைவிட முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து தேங்காய்திட்டு மக்களும், பல்வேறு அமைப்புகளும் தீவிரமாகப் போராடி வருகின்றனர். துணைநகர திட்டத்தைக் கைவிட்ட அரசு துறைமுக விரிவாக்கத் திட்டம் பற்றி சட்டப் பேரவையில் எந்த அறிவிப்பும் செய்யாதது போராடும் மக்களிடையே கொந்தளிப்பான சூழ்நிலையை உண்டாக்கியுள்ளது.

02-04-2007 அன்று சட்டப்பேரவையில் துறைமுக விரிவாக்கத் திட்டம் குறித்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதல் அமைச்சர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் பதில் அளிப்பதாக இருந்தது. சட்டப்பேரவை அலுவல் பட்டியலில் இருந்தும் திடீரென எவ்வித காரணமுமின்றி துறைமுக விரிவாக்கத் திட்டம் பற்றிய கேள்விகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிப் போடப்பட்டுள்ளன. இது பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்களுக்கு வழி வகுத்துள்ளது.

துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கொண்டுவரும் தனியார் நிறுவனம் துறைமுக துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வல்சராஜ் உள்ளிட்ட பல்வேறு அரசு உயர் அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டுள்ளதாக பல்வேறு அரசியல் கட்சிகள் புகார் கூறிவருகின்றன. இதுகுறித்து புதுவை அரசு உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்.

இதை வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உள்ளிட்டோருக்கு விரிவான புகார் மனு ஒன்றை அனுப்ப உள்ளோம்.

No comments: