Tuesday, April 17, 2007

துறைமுகத் திட்டத்தைக் கைவிட தொடர் முழக்கப் போராட்டம்




புதுச்சேரியில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி போராடிய தேங்காய்த்திட்டு பொதுமக்கள் மீது தடியடி நடத்திய சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், துறைமுக விரிவாக்கத் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி மக்கள் பாதுகாப்புக் குழு சார்பில் 16-04-2007 திங்கள்கிழமை தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

இப் போராட்டத்துக்கு நில ஆர்ஜித எதிர்ப்புக் குழுத் தலைவர் எஸ்.காளியப்பன், கவுன்சிலர் எஸ்.பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.இளங்கோ போராட்டத்தைத் தொடக்கி வைத்தார்.

புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் க.லட்சுமிநாராயணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பாலாஜி, மக்கள் பாதுகாப்புக் குழு அமைப்பாளர் சி.எச்.பாலமோகன், பாஜக தலைவர் விஸ்வேஸ்வரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அபிசேகம், சலீம், ஆனந்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் தங்க.கலைமாறன், விடுதலைச் சிறுத்தைகள் சு.பாவாணன், வீராம்பட்டினம் கவுன்சிலர் பா.சக்திவேல், கிராம பஞ்சாயத்துத் தலைவர் காங்கேயன், மத சார்ப்பற்ற ஜனதா தளத் தலைவர் கணேசன், சி.பி.ஐ. எம்-எல் சோ.பாலசுப்ரமனியன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் இர.அபிமன்னன், செம்படுகை நன்னீரகம் கு.இராம்மூர்த்தி, அரசு ஊழியர் சம்மேளனம் ஆனந்தராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முடிவில் மககள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் நன்றி கூறி போராட்டததை முடித்து வைத்தார்.

இப் போராட்டத்தையொட்டி தேங்காய்திட்டு பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 1000 பேர் பங்கேற்றனர்.

போராட்டத்தையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவையை சுற்றியும், துறைமுக துறை அமைச்சர் இ.வல்சராஜ் வீட்டிற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. புதுச்சேரி துறைமுகப் பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மக்கள் போராட்டத்தின் போது துறைமுக விரிவாக்கத் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும், பொதுமக்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

1 comment:

SurveySan said...

எதுக்காக துரைமுக விரிவாக்கத் திட்டத்தை கைவிடணும்னு விளக்கமா சொல்லலியே? வேற பதிவுல சொல்லியிரூந்தா, அதுக்கான link போடுங்க.