Monday, April 16, 2007

போலீஸ் தடியடி : உண்மை அறியும் குழு விசாரணை


தேங்காய்த்திட்டில் போலீசார் நடத்திய தடியடி சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பொ.இரத்தினம் தலைமையில் உண்மை கண்டறியும் குழு புதுச்சேரியில் 15-04-2007 ஞாயிறன்று தனது விசாரணையத் தொடங்கியது.

புதுச்சேரி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை தேங்காய்த்திட்டு நில ஆர்ஜித எதிர்ப்புக் குழு உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்த்துப் போராடி வருகின்றன. இந்தப் பிரச்னைக்காக சில தினங்களுக்கு முன்பு தேங்காய்த்திட்டு கிராமத்தில் அமைச்சர் வல்சராஜின் கொடும்பாவி எரிப்புச் சம்பவம் நடந்தது. அதைத் தடுக்க முயன்ற போலீசாருக்கும் தேங்காய்த்திட்டு மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள் காயம் அடைந்தனர். தேங்காய்த்திட்டு கிராம மக்கள் 257 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தடியடி சம்பவத்தை அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் கூட்டம் நடத்தி போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தன. கவுன்சிலர் பாஸ்கரன் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து புதுச்சேரி நகராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் போலீஸ் சீனியர் எஸ்.பி. ஸ்ரீகாந்தை சந்தித்துப் புகார் கொடுத்தனர். கவுன்சிலர் மற்றும் பொது மக்களைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் தேங்காய்த்திட்டு கிராமத்தில் நடந்த தடியடி சம்பவத்தின் உண்மை நிலையைக் கண்டறிந்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அறிக்கை தர குழு ஒன்று 15-04-2007 ஞாயிறன்று புதுச்சேரி வந்தது.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பொ.இரத்தினம், விருத்தாசலம் வழக்கறிஞர் ராஜி, விழுப்புரம் வழக்கறிஞர் லூசி ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

இவர்கள் தேங்காய்த்திட்டு பகுதிக்குச் சென்று தடியடி சம்பவத்தில் காயம் அடைந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். தேங்காய்திட்டு கவுன்சிலர் பாஸ்கரன் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் கள் உட்பட ஏராளமானவர்கள் போலீசார் மீது புகார் கூறினர்.

இந்தக் குழுவினர் வருகை குறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் கோ.சுகுமாரன் கூறும் போது, உண்மை அறியும் குழுவானது தேங்காய்த்திட்டு பகுதியில் சென்று விசாரணை நடத்தியது.

தடியடி சம்பவத்தில் உள்ள உண்மை நிலைகளை அவர்கள் விரைவில் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அறிக்கையாக அனுப்பி வைப்பார்கள். அதன் பேரில் மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுக்கும். மக்களைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கபட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர் என்றார்.

நில ஆர்ஜித எதிர்ப்புக் குழு அமைப்பளர் எஸ்.காளியப்பன்,மககள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், கிராம பஞ்சாயத்து ஒருங்கிணைப்பு துணைத் தலைவர் ஜெகநாதன், தமிழ்நாடு மார்க்சிய-லெனினிய கட்சி இரா.சுகுமாரன், மனித உரிமை ஆர்வலர் இரா.முருகப்பன் ஆகியோர் உடன்ருந்தனர்.

No comments: