Thursday, April 12, 2007

செண்டூர் வெடி விபத்து : அரசு அதிகாரி பரூக்கி விசாரணை


திண்டிவனத்தை அடுத்த செண்டூரில் கடந்த 7-4-2007 அன்று வெடிமருந்து ஏற்றி சென்ற வாகனம் வெடித்துச் சிதறியது. இதில் 16 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் இந்த விபத்தில் ஏராளமான வீடுகள், கடைகள் சேதமடைந்தன. இந்த வெடிவிபத்து தொடர்பாக தமிழக அரசு, விசாரணை அதிகாரியாக வருவாய் நிர்வாக இயக்குநர் எஸ்.எம்.பரூக்கி இ.ஆ.ப.வை நியமித்தது்.

அவர் தனது விசாரணையை 11-04-2007 மதியம் திண்டிவனத்தில் தொடங்கினார். வெடிவிபத்தில் சிக்கி திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் உள்ளிருப்பு நோயாளிகளாக இருக்கும் 8 பேர்களிடம் அவர் விசாரணை நடத்தினார். பின்னர் தலைமை மருத்துவ அலுவலர் தர்மலிங்கத்திடம், ‘சம்பவம் நடந்த அன்று எவ்வளவு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்‘ என்பது போன்ற விபரங்களைக் கேட்டறிந்தார்.

இதற்கிடையே மருத்துவமனைக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பிரஜேந்திர நவ்நீத் வந்தார். அவரிடமும் பரூக்கி தனது விசாரணையை மேற்கொண்டார். பின்னர் அங்கு வந்த விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. பெரியய்யாவிடமும் இந்த வெடி விபத்து சம்பந்தமான விவரங்களை பரூக்கி கேட்டறிந்தார்.

இதையடுத்து விபத்து நடந்த இடமான செண்டூருக்கு சென்று விபத்து நடந்த இடத்தை அதிகாரி பார்வையிட்டார். பின்னர் விபத்தில் காயமடைந்த பாண்டுரங்கனின் உறவினர் வள்ளியிடம் விபத்து பற்றிக் கேட்டார். பின்னர் விபத்தில் இறந்த அண்ணன்-தம்பிகளான முத்து (ரெட்டியார்), சுந்தரராமன் (ரெட்டியார்) ஆகியோர் வீட்டுக்கு அதிகாரி பரூக்கி சென்றார். அதிகாரி தனது விசாரணையின் போது அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வெடி விபத்தில் கட்டிடங்களில் விரிசல் அடைந்து இருப்பது பற்றியும், சேதமடைந்த கட்டிடங்கள் பற்றியும் கேட்டறிந்தார். இதை தொடர்ந்து அதிகாரி அங்கிருந்து புறப்பட்டு செல்லும் போது 20க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர்.

பாதிராபுலியூரில் மணலிப்பட்டு சேகருக்கு சொந்தமான வெடிமருந்து கிடங்கையும் அதிகாரி பரூக்கி பார்வையிட்டார்.

பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களையும் பார்த்து விபத்து நடந்தது குறித்து விசாரணை மேற்கொண்டார்.

திண்டிவனத்தில் அதிகாரி பரூக்கி செய்தியாளர்களிடம் கூறியதாவது: செண்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஒவ்வொருவர் மீதும் தனிக்கவனம் செலுத்தி அவர்கள் வாழ்க்கை முன்னேற அரசு உதவியாக இருக்கும். மேலும் வெடி விபத்து சம்பந்தமாக உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள், அரசின் சார்பில் அளிக்கப்பட்ட உதவிகள் போன்றவற்றை விசாரணை மேற்கொண்டு ஒரு மாதத்தில் இது சம்பந்தமான அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்வேன் என்றார்.

No comments: