Wednesday, April 25, 2007

பிற்படுத்தப்பட்டோர் 27% இடஒதுக்கீட்டிற்குத் தடை: மே 8-இல் விசாரணை

மத்திய அரசின் ஐஐஎம், ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள இடைக் காலத் தடை மீதான விசாரணை மே 8-ஆம் நாள் நடைபெறும். இதற்கான ஆணையை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பிறப்பித்தார்.

இந்த மனு மீதான விசாரணையை முன்னதாகவே நடத்துமாறு 24-04-2007 செவ்வாய்க்கிழமை மத்திய அரசு விடுத்த வேண்டுகோளை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், அரசு வழக்கறிஞர் மிலன் குமார் பானர்ஜி ஆஜராகி மனு மீதான விசாரணையை முன்னதாகவே நடத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை வரும் 8-ஆம் நாளன்று நடைபெறும் என்று பெஞ்ச் உத்தரவிட்டது.

இதற்கு முன்னதாக இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 3-ஆம் வாரத்தில் நடைபெறும் என்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சத இடஒதுக்கீடு தொடர்பாக ஓராண்டுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் மற்றொரு பெஞ்ச் இடைக் காலத் தடை விதித்தது.

இதையடுத்து உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்துக்கு விதித்துள்ள தடையை விலக்குமாறு மத்திய அரசு விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் அரிஜித் பசாயத், எல்.எஸ். பான்டா அடங்கிய பெஞ்ச் 23-04-2007 திங்கள்கிழமை நிராகரித்தது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அரசு சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோள் ஏற்கப்பட்டது.

"இந்தியாவின் தலைமை நீதிபதி என்ற முறையில் இந்த மனு மீதான விசாரணையை முன்னதாகவே நடத்துமாறு உத்தரவிடவும் அதற்கான நாளைக் குறிப்பிடவும் தனக்கு சிறப்புரிமை உள்ளது என்றும் இது நீதிமன்றத்தின் கண்ணியத்தை மீறிய செயலாகாது’’ என்றும் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

வெளிநாட்டு வர்த்தகத்துக்கான இந்திய நிறுவனம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்தும் வகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 9 பேருக்கு அந்நிறுவனத்தில் சேர்வதற்கான அனுமதிக் கடிதத்தை அனுப்பியுள்ளதையும் மத்திய அரசு எடுத்துக்காட்டியது.

இதனிடையே சென்னை, தில்லியில் உள்ள ஐஐடி, இரண்டு ஆண்டுக்கான எம்.பி.ஏ. படிப்புக்கான நுழைவுத் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளதையும் மத்திய அரசு தெரிவித்தது.

No comments: