Thursday, April 26, 2007

பிற்படுத்தப்பட்ட மாணவர்களை தீர்ப்புக்குப் பிறகு சேர்க்க முடிவு - அர்ஜுன் சிங்

மத்திய அரசின் உயர் கல்விக்கூடமான ஐ.ஐ.எம்.களில் (இந்திய மேலாண்மையியல் கல்வி நிறுவனம்) பொதுப்பிரிவு இடங்களை வழக்கம்போல நிரப்புவது, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களை உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு சேர்ப்பது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த மனித வளத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங் தில்லியில் செய்தியாளர்களை 25-04-2007 புதன்கிழமை சந்தித்தபோது இதைத் தெரிவித்தார்.

இந்த ஆண்டு 27% இடங்களைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்குவது என்ற தங்கள் முடிவில் மத்திய அரசு உறுதியாக இருந்ததால், இந்த வழக்கு விசாரணையை மே 8-ஆம் நாளே எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் 24-04-2007 செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

எனவே, பொதுப்பிரிவைச் சேர்ந்த மாணவர்களை மேலும் காக்க வைக்காமல் அவர்களுக்கான சேர்க்கையை முடித்துவிட்டு, தீர்ப்பு வந்ததும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களைச் சேர்க்கலாம் என்று மத்திய அரசு தீர்மானித்திருக்கிறது.


பிரதமர் மன்மோகன்சிங் கருத்து:


27% இட ஒதுக்கீடு வழக்கில் தீர்ப்பு வராதவரை, பொதுப்பிரிவு சேர்க்கையை நிறுத்திவைக்க வேண்டும் என்ற கூட்டு முடிவை மத்திய அமைச்சரவை ஏற்கெனவே எடுத்ததால், சேர்க்கையைத் தொடரலாம் என்ற முடிவையும் அங்கேயே எடுத்துவிடலாம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். அர்ஜுன் சிங் அதை ஏற்றார். மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய தோழமைக் கட்சிகளின் பிரதிநிதிகள் அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவில் (சி.சி.பி.ஏ.) இருப்பதால் முடிவை அங்கே எடுப்பது சரியாக இருக்கும் என்ற கருத்து ஏற்கப்பட்டது என்றார் அர்ஜுன் சிங்.

மனிதவளத் துறைக்கும் சட்ட அமைச்சகத்துக்கும் இடஒதுக்கீட்டு வழக்கு குறித்துக் கருத்து வேறுபாடு ஏதும் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டனர். இல்லவே இல்லை, உச்ச நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்த மனுவை இரு அமைச்சகங்களும் கலந்துப் பேசித்தான் தயாரித்தன என்று அவர் பதில் அளித்தார்.

27% ஒதுக்கீடு குறித்து மே 8-ஆம் நாள்தான் விசாரணை நடைபெறப் போகிறது என்னும்போது பொதுப்பிரிவு மாணவர்கள் சேர்க்கைக் குறித்து இப்போது ஏன் முடிவெடுக்கப் பார்க்கிறீர்கள் என்று கேட்டனர்.

மாணவர்கள் நலன் கருதித்தான் இந்த முடிவை எடுக்கிறோம் என்று பதில் அளித்தார் அர்ஜுன் சிங்.

பொருளாதார அளவுகோள் (கிரீமிலேயர்):

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உயர் வருவாய்ப் பிரிவினரை விலக்கிவைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் முன்னர் கூறியிருந்த யோசனை மீண்டும் பரிசீலிக்கப்படுமா என்று கேட்டதற்கு, இதை உயர் நிலையில் விவாதித்தோம்; இம்முறை இதில் இந்த விஷயத்தைச் சேர்க்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம் என்று பதில் அளித்தார் அர்ஜுன் சிங்.


தோழமைக் கட்சிகள் நெருக்குதலா?


இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் மே 8-இல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்வரை ஐ.ஐ.எம்.களில் மாணவர்களைச் சேர்க்கக்கூடாது என்று தோழமைக் கட்சிகளிடமிருந்து நெருக்குதல் ஏதேனும் வந்ததா என்று கேட்டனர். இல்லை என்று அர்ஜுன் சிங் பதில் அளித்தார்.

No comments: