Wednesday, April 11, 2007

சிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்த்து முழுஅடைப்பு

புதுச்சேரியில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேதராப்பட்டு, கரசூர் கிராம மக்கள் 11-04-2007 புதனன்று முழுஅடைப்புப் போராட்டம் நடத்தினர். இதனால் சேதராப்பட்டு, கரசூர் பகுதியில் இயல்பு வாழ்க்கைப் பாதிப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேதராப்பட்டு, கரசூர் கிராம மக்கள் புதுச்சேரி-மயிலம் சாலையில் 10-04-2007 செவ்வாய் மதியம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்த அனுமதி அளித்தது. இதையட்டி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்த புதுச்சேரி அரசு அனுமதியளித்தது. புதுச்சேரி அரசு சேதராப்பட்டு, கரசூர் பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்த முடிவு செய்தது. அதற்காக 800 ஏக்கர் நிலத்தினை கையகப்படுத்த திட்டமிட்டு அரசு புறப்போக்கு நிலம், ஏரி, குளம் மற்றும் சேதராப்பட்டு, கரசூர் பகுதி விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டது. இதற்கு சேதராப்பட்டு, கரசூர் பகுதி மக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்நிலையில் அம்மக்கள் 09-04-2997 திங்களன்று புதுச்சேரி-மயிலம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் சேதராப்பட்டு, கரசூர் மக்களிடம் குறைகளை கேட்டறிவார் என்று அறிவித்ததையட்டி சாலை மறியலை கைவிட்டனர். இந்நிலையில் 10-04-2007 செவ்வாயன்று மதியம் மாவட்ட ஆட்சியர் வருவதாக கூறியதைத் தொடர்ந்து, அவருக்காக பொதுமக்கள் காத்திருந்தனர். ஆனால், துணை ஆட்சியர் வின்சென்ட்ராயர், வட்டாட்சியர் சுப்ரமணியன், காவல் ஆய்வாளர் வீரவல்லன் மற்றும் வருவாய் துறை, பொதுப்பணித் துறை, நீர் பாசனத் துறை அதிகாரிகள் மட்டும் வந்தனர்.


மாவட்ட ஆட்சியர் வராததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்றுதிரண்டு புதுச்சேரி-மயிலம் சாலையில் உள்ள கடைகளை அடைத்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது நீர் நிலைகளைக் கையகப்படுத்தி நிலத்தடி நீருக்குப் பாதிப்பு ஏற்படுத்தாதே, சுற்றுச் சுவர் கட்டி மக்களை சிறைப்படுத்தாதே என்று முழக்கங்கள் எழுப்பினர். புதுச்சேரி அரசுக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பினர். பின்னர் சிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்த்து 11-04-2007 புதனன்று, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழுஅடைப்புப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்து கலைந்து சென்றனர்.

இதையொட்டி, 11-04-2007 புதனன்று சேதராப்பட்டு, கரசூர் பகுதியில் முழுஅடைப்புப் போராட்டம் நடைப்பெற்றது. 10-ஆம் வகுப்புக்கான கடைசி தேர்வு என்பதால் மாணவ மாணவியர்களுக்கு மட்டும் பேருந்து மற்றும் வாகனங்களில செல்ல அனுமதி அளித்தனர். கடைகள் திறக்கப்படவில்லை. பேருந்துகள் பிற வாகனங்கள் இயங்கவில்லை. தொழிற்பேட்டைப் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால், இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

No comments: