Monday, April 09, 2007

செண்டூர் வெடிவிபத்து குறித்து நீதி விசாரணை : பழ.நெடுமாறன்

திண்டிவனம் வெடிவிபத்து தொடர்பாக முழுமையான நீதி விசராணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் திண்டிவனம் வெடி விபத்தில் காயமடைந்தவர்களை 08-04-2007 ஞாயிற்றுக்கிழமை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.எவ்வாறு சம்பவம் நடைபெற்றது என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்தார். ஜிப்மர் மருத்துவர்களிடம் சிகிச்சை அளிக்கப்படுவது குறித்துக் கேட்டறிந்தார். மேலும் உரிய சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திண்டிவனம் அருகே செண்டூரில் நடந்த வெடி விபத்து மிகவும் துயரமானது. இதில் 16-பேருக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். பல வீடுகள் தரைமட்டமாகியுள்ளன.

உயிரிழந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். வெடிபொருள்களை கொண்டு செல்பவர்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கையாளாமல் கொண்டு சென்றுள்ளனர். இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முழுமையான நீதிவிசாரணை நடத்தி உண்மைச் சம்பவங்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றார்.

அவருடன் புதுச்சேரி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, விழுப்புரம் மாவட்டத் தலைவர் கா.பாலமுருகன், செந்தமிழர் இயக்கத் தலைவர் ந.மு.தமிழ்மணி, தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி இரா.சுகுமாரன் உட்பட பலர் இருந்தனர்.

No comments: