Tuesday, April 10, 2007

சிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்த்து சாலை மறியல் - கைது

புதுச்சேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி சேதராப்பட்டு பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக புதுச்சேரி அரசு 800 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பொதுமக்கள் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக பெரிய சுற்றுச்சுவர் எழுப்பப்பட உள்ளது. இதனால் எங்கள் கிராமங்கள் அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் வயல்வெளிகளில் இருந்து துண்டிக்கப்படும் என்று கூறுகின்றனர். மேலும், ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் அழிக்கப்பட உள்ளது. ஊருக்குள் வாழும் பொதுமக்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதனால் ஒட்டுமொத்த எங்கள் கிராமமே அழியும் ஆபத்துள்ளது என்று கூறுகின்றனர்.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படுவதைக் கண்டித்து புதுச்சேரி, சேதராப்பட்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 09-04-2007 அன்று, புதுச்சேரி - மயிலம் சாலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரண்டு மணி நேரம் இச்சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பின்னர் போலீசார் அவர்களிடம் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர். அதனை அவர்கள் ஏற்கவில்லை. இதனையடுத்து நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் வருவாய்துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்கள் கோரிக்கையை எங்களிடம் கூறுங்கள். இது குறித்து முறையாக அரசுக்கு தெரிவிக்கிறோம் என்றனர். பின்னர் பொதுமக்களின் கருத்துக் கேட்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இதனையொட்டி 10-04-2007 அன்று மாலை 3 மணியளவில் சேதராப்பட்டு கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.

அப்போது சேதராப்பட்டு பகுதியில் உள்ள வீடுகளில் மக்கள் கறுப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்க உள்ளனர்.

No comments: