Tuesday, April 24, 2007

பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு : தடை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்துக்கு விதித்துள்ள தடையை விலக்குமாறு மத்திய அரசு விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் 23-04-2007 திங்கள்கிழமை நிராகரித்தது. இதனால், 27 சதவீத இடஒதுக்கீட்டை இந்த கல்வி ஆண்டில் செயல்படுத்துவது என மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் கோரிக்கை மீது நீதிபதிகள் அரிஜித் பசாயத், எல்.எஸ்.பான்டா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்தியது. எனினும், இந்த பிரச்சினையை அரசமைப்புச் சட்ட பெஞ்சின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வேறொரு நாளில் பரிசீலிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஒன்றரை மணி நேரம் வாக்குவாதம் நடந்தது. மத்திய அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் ஜி.இ.வாகனவதி ஆஜரானார்.

’இடஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக இறுதி உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்ட அவர், 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்க வேண்டும். இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதால் பொதுப்பிரிவில் உள்ள மாணவர்களின் உரிமை எந்த விதத்திலும் பாதிப்புக்கு உள்ளாகாது' என்றார்.

’மார்ச் 29-ஆம் நாள் உத்தரவை மாற்றும்படி விடுத்துள்ளது கோரிக்கைதான் மறு ஆய்வு மனு அல்ல. உச்ச நீதிமன்றத்தின் சட்டப்பிரிவு 145-ன் படி இந்த விசயத்தில் உச்ச நீதிமன்றம் இறுதி உத்தரவு பிறப்பிக்க முடியாது. எனவே இந்த விவகாரத்தை அரசமைப்புச் சட்ட பெஞ்சுக்கு அனுப்பவேண்டும்'என்றும் வாகனவதி குறிப்பிட்டார்.

இது தொடர்பாக நீதிபதிகள் குறிப்பிடுகையில், ’இந்த விவகாரத்தை அரசமைப்புச் சட்ட பெஞ்ச் பரிசீலனைக்கு அனுப்புவது பற்றி பிறகு பரிசீலிக்கப்படும். இந்த ஆண்டை பொருத்தமட்டில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இறுதியானதுதான். இது இடைக்கால தீர்ப்பு என மத்திய அரசு விளக்கம் தருவது சரியானதல்ல'என்றனர்.

’இட ஒதுக்கீட்டுச் சட்டத்தில் உள்ள துணைப் பிரிவின்படி ஏதோ ஒரு காரணத்துக்காக எந்தவொரு மத்திய கல்வி நிறுவனத்திலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் விதிவிலக்கு அளிக்க வழி உள்ளது. இப்படி மத்திய அரசே இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கு தர அதிகாரம் எடுத்துக் கொண்டுள்ளபோது நீதிமன்றம் மட்டும் தடை விதிக்கக்கூடாது என்பது ஏன்?

57 ஆண்டுகளாக பொறுமை காத்தீர்கள். இன்னும் ஒரு ஆண்டு காலத்துக்கு ஏன் பொறுமையாக இருக்க முடியாது'என்றார் நீதிபதி பசாயத்.

ஒரு சந்தர்ப்பத்தில் இந்திரா சகானி மற்றும் நாகராஜ் வழக்கைக் குறிப்பிட்டுப் பேசிய வாகனவதி, ’இந்த வழக்குகளில் இடஒதுக்கீட்டுச் சலுகைக்கு ஆதரவாக தீர்ப்பு தரப்பட்டுள்ளது' என்றார்.

அது பற்றிக் குறிப்பிட்ட நீதிபதிகள், ’தேவைப்படும்போது மட்டும் தமக்கு பொருத்தமான சில தீர்ப்புகளை முன்வைப்பது கூடாது. இந்த இரு வழக்குகளிலும் வசதி படைத்தோருக்கு ஒதுக்கீடு சலுகை வழங்குவது கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதை அமல்படுத்த மத்திய அரசு விரும்பவில்லையே' என்று தெரிவித்தனர்.

இதுபற்றி வாதிட்ட வாகனவதி, ’வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு சலுகைகள் தொடர்பாகத்தான் வசதி படைத்தோர் என்ற கொள்கையை அரசமைப்புச் சட்ட பெஞ்ச் உருவாக்கியுள்ளது. கல்வி தொடர்பாக இது பொருந்தாது' என்றார்.

இந்த வாதத்தில் திருப்தி அடையாத நீதிபதிகள், ’பின்தங்கியவர்களுக்கு சலுகை தரவேண்டும் என்று உண்மையில் கருதினால் அவர்களுக்குத்தான் முன்னுரிமை தரவேண்டும். சமூக ரீதியில் பின்தங்கியவர்களைவிட பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு தருவதுதான் தேவையானது'என்றும் தெரிவித்தனர்.

இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுதாரர்களில் ஒருவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரீஷ் சால்வே வாதிடுகையில், ’அரசு நிர்ணயித்துள்ள 27 சதவீத இட ஒதுக்கீடு, அரசமைப்புச் சட்டத்தின் 29-ஆவது பிரிவை மீறுவதாகும். இந்தப் பிரிவு, இனம், மதம், ஆண், பெண் என்ற பாலின அடிப்படையில் பொதுமக்களைப் பேதப்படுத்தி பார்க்க அனுமதிக்கவில்லை'என்றார்.

நாட்டின் 60 கோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையில் உச்சநீதிமன்றம் தொடர்ந்து தலையிடுவது நீதித்துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்கும். சமூக நீதியில் அக்கறை உள்ளோர் இந்த அநீதியைக் கண்டிக்க வேண்டும்.

மத்திய அரசு உடனடியாக பாராளுமன்ற இரு அவைகளையும் கூட்டி விவாதிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1 comment:

டண்டணக்கா said...

/*சமூக ரீதியில் பின்தங்கியவர்களைவிட பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு தருவதுதான் தேவையானது'என்றும் தெரிவித்தனர்.*/
How come a judge can be so opinionated...where he derives this opinion from, Is he trying write the "state policy"?.
Usually I have majority of hope on supreme court, but in this case they are dead wrong. I strongly condemn this interference. Parliament should intervene.